நேரம்

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

எனது முந்தய பதிவை படித்த 2 பேர்களில் (ஒருவர் நாகு, மற்றவர் எனது துணைவியார்) நாகு இந்தியா 60 வருடங்களில் பெற்றிருக்கின்ற பல முன்னேற்றங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லியிருந்தார். அவைகளை கீழே தந்திருக்கிறேன்.


1. கல்வியில் மேன்மை - கேரளா முழுவதும், தமிழகத்தில் சில/பல மாவட்டங்கள் எனக்குத் தெரிந்து 100% லிட்டரசி அடைந்திருக்கின்றன.
2. அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள். நாமே விண்வெளிக்கலன் செலுத்தும் அளவு வந்திருக்கிறோம். ரிமோட் ஸென்ஸிங்கில் நாம் டாப்கிளாஸ்
3. ஜனநாயகம்: நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் ஜனநாயகம் தடவிக்கொண்டு இருந்தாலும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம்.
4. தகவல் தொடர்புத்துறையில் மிக வேக வளர்ச்சி.

5. பெண் கல்வி, பெண் உரிமை: இதில் நல்ல வளர்ச்சி. உலகத்தின் சிறந்த ஜனநாயகத்திலேயே இதுவரை பெண் அதிபர் இருந்தது கிடையாது. நாம் அனைவரையும் நடுங்க வைக்கும் பிரதமரில் இருந்து, முதல்வரில் இருந்து ஜனாதிபதி வரை பார்த்துவிட்டோம். 6. மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் பல சாதனைகள்.

இவை எதையும் நான் மறுக்கவில்லை. இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உலகின் பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கும் வால்மார்ட் அருகிலும், ரிச்மண்ட் நகரத்துக்குள் சென்றால் சிக்னலுக்கு சிக்னல் வீடில்லாத ஏழைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குறிப்புகளில் 1, 3, 5 விவாதத்திற்குரியது.

1. 100% படிப்பறிவு என்பது ஒரு கேள்விக்குறிதான். இது பற்றி எனது மலையாள நண்பர்களோடு ஒருமுறை விவாதித்த போது அவர்கள் சொன்னது, 100% படிப்பறிவு என்பது அந்த ஊரில் இருப்பவர்கள் கையெழுத்து போடவும், எழுத்துக் கூட்டி அவர்களது பெயரை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்கள் படித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள் என்று.

எனவே இது எனக்கு ஒரு பொருட்டில்லை.

3. ஜனநாயகம் - ஜனநாயக இந்தியாவில்தான் ராப்ரி தேவி/மாயாவதி போன்றோர் முதல்வர் ஆக முடியும், ஆனால் மொரார்ஜி போன்ற நல்ல தலைவர்கள் சரண்சிங் போன்றவர்களால் ஆட்சி இழந்து இந்தியா பாழடைய முடியும். இந்திரா போன்றோர் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்ய முடியும்,

5. ஒரு பெண், அதிபராக வருவது அவ்வளவு முக்கியமா? அது மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக்கி விடுமா? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை.

உங்கள் குறிப்புகள் 2, 4 மற்றும் 6 சொல்வது, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவத் துறை சாதனைகள். இவைகளை நான் மறுக்கவில்லை. இதனால், நான் சொன்ன எதுவும் மாறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.

முதல்வன் என்ற திரைப்படத்தில் நிருபராக வரும் அர்ஜூன், முதல்வராக நடிக்கும் ரகுவரனை பேட்டி காணும் காட்சியில் ஒரு கேள்விக்கு ரகுவரன், இப்ப நாட்டுல அவன் அவன் செல்போன், பிட்ஸான்னு அலையரான் இப்ப போய் ஏழை அது இதுன்னு சொல்றியே என்பார் அதுக்கு அர்ஜூன் "ஐயா வயத்து பசிக்கு ஒரு வேளை சோறில்லாதவங்க செல்போனையோ, பிட்ஸாவையோ யோசிக்கரது கூட இல்லைங்க என்பார்" அதுதான் எனது கருத்தும்.

ஒரு சராசரி மனிதனின் தேவை, நல்ல தண்ணீர், இருக்க ஒரு இடம், சகாய விலையில் உணவுப் பொருள்கள், நல்ல மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வி. இவைகளை தந்தாலே போதுமே, இந்தியா உலகில் தன்னிறைவு பெற்று விடுமே, அதைத் தர எந்த அரசியல்வாதியும் தயாரில்லை, அதைத் தா என்று கேட்க எந்த பொது ஜனத்திற்கும் துணிவில்லை.

கடைசியாக, பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விவாதம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி நாகு.

சற்றுமுன் பார்த்த செய்தி. தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மனித உரிமை கமிஷன் பரிந்துரைகளின் படி என்று தெரிய வந்துள்ளது.

நான் முன்பே சொன்னது போல், ஒரு மனிதனின் உயிரை எடுக்கவும் தயங்காத பயங்கர குற்றவாளிகளை காவல் துறை பிடித்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் வெளியே வந்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தொல்லை தருவது நின்றபாடில்லை. ஆனால் அவர்களுக்கு பரிந்து பேச அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக மனித உரிமை கமிஷன் இருக்கிறது.

இதைத்தான் பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று மூதோர் சொல்லி வைத்தார்கள்.

திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத் திரைப்படம் - Bridge to Terabithia
சமீபத்தில் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். சிறுவயதில் நாம் அனைவரும் விளையாடும் விளையாட்டை சற்று மிகைப் படுத்தி படமாக்கி விட்டனர்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டிலிருக்கும் கொய்யா மரம்தான் எங்களது ராஜ்ஜியம், அதில் அனைவருக்கும் சொந்தமான கிளைகள் உண்டு, மாற்றி உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான் சண்டை ஊரை கிழித்து விடும். எல்லோரும் ராஜா, ராணி, மந்திரி என பல வேடங்கள் போட்டுக் கொண்டு வாயில் வந்த வசனத்தை பேசிக் கொண்டு பசிக்கும் வரை விளையாடுவோம்.

இதேதான் இந்தப் படத்தின் கதையும், ஆனால் அதை மிக மிக நேர்த்தியாக சொல்லி, நம் அனைவரையும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வில்லன் என்று ஒருவர் தனியாக இல்லாமல் இயக்குனரே வில்லனாகியிருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

The Contract
மார்கன் ப்ரீமேன், ஜான் குசாக்கின் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படம், நல்ல பொழுது போக்குப் படம். மார்கன் ப்ரீமேன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. அவருடைய வசன உச்சரிப்பில் ஒரு கிண்டல் எப்போதும் துளிர்த்து விழுவது அருமை. அது அவருடைய பாணி, அது இந்தப் படத்தில் பளிச்சென பதிந்திருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும், மனைவியில்லாமல், மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் கணவர்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களை தடை செய்யச் சொல்லி, தாங்க முடியாத அந்த கதை இந்தப் படத்திலும் இருக்கிறது அது ஜான் குசாக் என்று சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். படத்தில் விருவிருப்பிற்கு குறையில்லை. ஒரு முறை பார்க்கலாம், ஆனால் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளோடு இதைப் பார்க்க வேண்டாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....