நேரம்

Sunday, May 25, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 26

என்னை பாதித்த கவிஞர்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான்

இவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பித்தன் என்ற பெயரில் நான் எழுத என்னுள் பல வருடங்களுக்கு முன்பே வித்திட்டவர் இவர். இவருடைய பித்தன் கவிதைத் தொகுப்பு குங்குமம் பத்திரிகையில் 90-ன் ஆரம்பத்தில் வெளியானது அதுதான் நான் முதன்முதலாக படித்த இவருடைய கவிதைகள். அதன் பிறகு இவருடைய பால்வீதி, நேயர் விருப்பம் தொகுப்புகளைத் தேடித் தேடி படித்தேன்.

பால்வீதித் தொகுப்பில் தீக்குளியல்(1974) என்ற கவிதை
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக

வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு

அணைந்ததும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்.

இவரது பித்தன் கவிதைத் தொகுப்பை பற்றி
நதியலை என்ற வலைப்பூவிலிருந்து :-


கவிக்கோவின் முன்னுரை:
என் ‘ஆலாபனை’யின் பாடகன் ‘நேர்’களின் ரசிகன்.


பித்தன் ‘எதிர்’களின் உபாசகன்.



எந்த நதியானாலும் எதிர் நீச்சலே போடுபவன்.
காரணம், அவன் உண்மையின் பின் பக்கத்தைப் பார்த்துவிட்டவன்.
அதனால் அறிவுச் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவன்.
அவன் இருளால் ஒளி பெற்றவன்


மர்மங்களின் ரசிகன்.


அதனால் ‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற முழக்கத்திற்கு எதிராக

‘ஒளியிலிருந்து இருளுக்கு’ என்று முழங்குபவன்.



பார்க்காத இருண்ட பக்கங்களின் அழகை அறிந்தவன்.
அவன் புறப்படுகிறவன் அல்ல; திரும்புகிறவன்.


அவன் ‘இல்லை’யின் தூதுவன். ‘இல்லை’ அவனது

மகா வாக்கியம்; ஒற்றைச் சொல் வேதம்.


சீழ் நிரம்பிய கொப்பளங்களை முலை என்று சப்பும்

குழந்தைகளைப் பரிகசிப்பவன்.


தீபங்களை ஏற்ற அல்ல அணைக்க வந்தவன்.
எழுப்ப அல்ல உறங்கவைக்க வந்தவன்.

அவன் தேனீ; அதனால் எல்லாப் பூக்களிலும் வித்தியாசம் பார்க்காமல் தேன் எடுப்பவன்.

எந்தக் கூண்டிலும் அடைபடாதவன்.

உண்மைக்குப் பலமுகங்கள் உண்டு என்பதை அறிந்தவன்.
அத்தனை முகங்களுக்கும் முத்தம் தருபவன்.


முரண்கள் கள்ளக் காதலர்கள் என்பதைக் கண்டுபிடித்தவன்.


அவன் போதிக்க வரவில்லை;போதனைகளால் நிராகரிக்கப்பட்ட அனாதைக் குழந்தைகளை எடுத்துக் கொஞ்ச வந்திருக்கிறான்.


உங்கள் கல்லடிக்கு அவன் காத்திருக்கிறான். ஏனெனில் அதுதான் அவனுக்கு அங்கீகாரம்.
- அப்துல் ரகுமான்.


இனி பித்தன் தொகுப்பில் நான் அதிகம் விரும்பும் சில கவிதைகள்


அம்பலம்
"பித்தன், பித்தன்" என்ற கூச்சல்களையும்
கற்களையும் அவன் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள்.

அவன் சிரித்துக் கோண்டிருந்தான். அவன்
காயங்களும் சிரித்துக் கொண்டிருந்தன.

அப்படித்தான் அவனை முதன்முதல் கண்டேன்.

"நீ பித்தனா?" என்று கேட்டேன்.

"நீ கல்லா?" என்றான்.

நான் வலித்தேன்.

"நீ எப்படி பித்தன் ஆனாய்?" என்றேன்.

"ஒரு முறை தற்செயலாய் உண்மையைப்
பின்பக்கமாய்ப் பார்த்துவிட்டேன். முக்கால
இரவுகளுக்கும் ஆன சூர்யோதயம் நடந்தது.
எதிர்ப்பதங்கள் கை கோர்த்து நடனம் ஆடின.
அந்த தருணத்தில் அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்" என்றான்.

"அவர்கள் ஏன் உன்மேல் கல்லெறிகிறார்கள்?' என்றேன்.

நான் அவர்களுடைய அந்தரங்கத்தின்
கண்ணாடி. அதனால்தான் என்னை உடைக்கப் பார்க்கிறார்கள்" என்றான்.

"ஏன்?" என்றேன்.

"அவர்கள் வெளிப்படுவதற்கு பயப்படுகிறார்கள்.
வேஷங்களில் வசிப்பது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.

வேஷம் கலைந்தால் மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய அம்பலம். கவனி!
அம்பலம் என் மேடையல்ல, என்
நடனம். அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள்" என்றான்.

நான் உடைந்தேன், யுகங்களின்
சீழ் வடிந்தது.


அடுத்து இவருடைய பித்தன் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த வரிகளில் சில:
ஆடை
பித்தன் தன் சட்டையைக் கிழித்துக் கொண்டிருந்தான்

"ஏன் கிழிக்கிறாய்?" என்று கேட்டேன்.

"கடிதத்தை படிக்க வேண்டும் என்றால் உறையைக் கிழிக்கத்தானே வேண்டும்" என்றான்.
...
நீங்க்ள் ஆடைக்குள் காணாமல் போனீர்கள்.
உங்கள் முகவரி உங்கள் ஆடைகளில் இல்லை.
...
நீங்கள் நெருப்பாக இல்லை ஆனால் சாம்பலை அணிந்து கொள்கிறீர்கள்.
...
உங்கள் கண்ணில் துச்சாதனனும் இமையில் கண்ணனும் இருக்கிறார்கள்.
உங்கள் வண்ணான் குறிகளும் கறைதான் என்பதை
எப்போது உணரப் போகிறீர்கள்?
***********
நிகழ்
பித்தன் ஒரு காலைத் தூக்கியபடி நின்று கொண்டிருந்தான்.
"என்ன நடராஜ நடனமா? என்று கேட்டேன்.

அவன் சொன்னான் -
"இல்லை ஒரு காலையாவது நிகழ்காலத்தில் வைக்கப் பார்கிறேன். முடியவில்லை.

இட்ட அடி இறந்த காலத்தில், எடுத்த அடி எதிர்காலத்துக்கு, அந்த அடியிலும் இறந்த காலத்தின் புழுதி.

நிகழ்காலம் எங்கே இருக்கிறது?
'இருக்கிறேன்' என்று நீ சொல்லும் போதே
ஒவ்வோர் எழுத்தையும் இறந்த காலம் விழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்.

இறந்தகாலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
ஒய்ந்து அமரும் கிளைதான் மரணம்.

இறந்த காலம் கையை விட்டுப் போய்விட்டது. எதிர் காலம் கையில் வராதது. அதனால்தான் மனிதன் வெறுங் கையோடு நிற்கிறான்.

இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் கோடு கிழிக்க முயல்கிறாய். ஓடும் நீரில் கோடு எப்படி கிழிப்பாய்?

காலம் என்பதே ஒரு பொய்க் கணக்கு.
அதிலும் வரவு செலவு என்ற இரண்டுதான் உண்டு. நடுவில் ஒன்று இல்லை.

இறந்தகாலமும் எதிர்காலமும் காதலர்கள் நீங்கள் ஏன் பிரிவை உண்டாக்கப் பார்க்கிறீர்கள்.

காலண்டர்களும் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு விடுகின்றன. அதிலிருந்து கிழிக்கப்படும் தாள்களை வாங்கிக் கொள்ளச் சரித்திரம் காத்து நிற்கிறது.

நீங்கள் காலமாக விரும்புவதில்லை; அதனால்தான் காலமாகிவிடுகிறீர்கள்.

என்னைக் பாதித்த மற்ற சில வரிகள்:
*********
கூண்டுப் பறவை கூண்டின் கூரையையே வானம் என்றுவாதாடும்
ஓர் உரையை மட்டும் ஏற்பவன் உண்மையின் பல பரிமாணங்களைக் காணாமல் போய்விடுவான்

*********

எது பூவானதோ அதுவே முள்ளானது பூவைப் போலவேமுள்ளுக்கும் இருத்தல் நியாயம் உண்டு.
உங்களைக் குத்துவதற்காக முளைத்ததல்ல முள்.நீங்கள்தான் குத்திக்கொள்கிறீர்கள்.

*********

வெளியே புறப்படுதல் அல்ல வெளியிலிருந்துபுறப்படுதல்தான் பயணம்.

*********

மேலே என்பது மேலே இருக்கிறது என்பதுதான்உங்கள் பெரிய மூடநம்பிக்கை

*********

பசியை நீங்கள் விலங்கு என்கிறீர்கள்நானோ பசியைச் சிறகு என்கிறேன்.
அந்தச் சிறகு இல்லையென்றால் நீங்கள்
இந்த உயரங்களை அடைந்திருக்க மாட்டீர்கள்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......

Saturday, May 10, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

+2 ரிசல்ட்ஸ்
சென்னையில் +2 ரிசல்ட்ஸ் வந்தாச்சு. வழக்கம்போல மாணவிகள் அதிக சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ரொம்ப பாவம். சன் டிவி, பேர் வெச்ச டிவி, பேர் வெக்காத டி.வி எல்லாவற்றிலும் வரும் நடன நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோஸ், எல்லாம் ஜொள் விட்டு பார்த்துட்டு, ரஜனி, விஜய், சிம்பு, அஜித் எல்லார் படங்களுக்கும் பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு அவங்க எப்ப பள்ளிக்கூடம் போகரது, எப்ப பாடம் படிக்கரது. மாலை வீட்டுக்கு வந்ததும், கல்லி கிரிக்கேட், மாடில கிரிக்கேட், வாசல்ல கிரிக்கேட், டிவி-ல 20-20 மாட்ச் எல்லாத்தையும் முடிச்சுட்டு படிக்கலாம்னு உக்காந்தா, 2 ரிவிஷன் எக்ஸாம் முடிந்து 3 வது ரிவிஷன் ஆரம்பிக்கர நாள் வந்துடரது, இதுக்கு பிறகு அவங்க புத்தகத்தை தேடி, படிச்சு, எப்படி அதிக சதவிகிதத்தில பாஸ் பண்றது. இதுக்கும் மேல எழுதினால் என் பதிவை படிக்கிர என் அம்மா அப்பா " பரிட்சை நேரத்துல இவன் ஆடாத கிரிக்கெட்டா, செய்யாத அக்கரமமா இப்ப என்னவோ இவன் ரொம்ப ஒழுங்கு மாதிரி எழுதரான் பார், இதுதான் கலி"ன்னு திட்ட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி முடிச்சுக்கறேன்.

தங்கம் விற்பனை
தங்கம் என்னவோ அரிசி ரேட்டுக்கு வித்தாலும், வாங்கர கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியிருக்கு. ஒரு க்ராம் விலை ரூ.1090/-. அதாவது 7,630 கோடி ரூபாய்க்கு விற்பனை ரெண்டு நாளில தமிழ்நாட்டில் மட்டும் நடந்திருக்கு. இதில் இந்தியா ஏழை நாடு என்று இன்னமும் சொலிக்கொண்டு, மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா ஒன்று என்று கிண்டல் வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்.

'வெத்து' அன்புமணிக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்.
எய்ம்ஸ் முன்னால் இயக்குனர் வேணுகோபாலை பதிவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சட்டத் துறையின் மாட்சிமையை காட்டியிருக்கிறது.


ரகுவரனுக்கு ஓர் அஞ்சலி
இது ஒரு காலங்கடந்த அஞ்சலி. எரிமலைகள் வெடிக்கும் போது சில ரோஜாக்கள் கருகுவது சாதாரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். இதைச் சொன்னதற்காக ஒரு முறை வெட்டிப் பயலோடு சின்ன வாக்குவாதமும் செய்தேன். இப்போது ரகுவரனின் இந்த அஞ்சலியை எழுத முற்படும் போது, இந்த வரிகள் என் காதுகளில் ரீங்காரமிட்டது தற்செயல் என்று தள்ள முடியவில்லை.

ரகுவரன் ஒரு சிறந்த நடிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருடைய சிறந்த படங்கள் என்று கணக்கிலடங்காத பல படங்களைச் சொல்லலாம். ஏழாவது மனிதனின் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் பரிமளித்தவர். என்னடா இந்த ஆள் இப்படி நெடு நெடுவென உயரமாக இருக்கிறாரே, இன்னொரு அமிதாப் பச்சனா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது அந்த கால கட்டத்தில். அதற்குப் பிறகு அவருடைய காதாநாயகன் அந்தஸ்து கொஞ்சம் கீழே போன பிறகு சடாரென்று வில்லன் ரோல் செய்ய ஆரம்பித்து, சிரித்தபடியே கதாநாயகர்களை சித்தரவதை செய்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார். 'I Know' என்ற ஒரு வார்த்தையின் மூலமாக தான் எப்படி பட்ட குரூரமான மனநோயாளி என்பதை விளக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருடைய அக்காவின் கணவராக வந்து அவருக்கும் விஜய்க்கும் பாலமாக நடித்ததும் எனக்கு நிரம்ப பிடித்த ஒன்று. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்.

முதல்வன் படத்தின் ஆணிவேர் என்றால் அது ரகுவரன் என்பது என் கருத்து. அர்ஜுன் ஒரு சராசரி நடிகர் அந்த நடிப்பு முதல்வன் படத்திற்கு போதாது என்பதைத் தெரிந்து கொண்டு ரகுவரனின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ததில் ரகுவரனின் பங்கு மிகப் பெரியது. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு IAS அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு தேர்ந்த கல்லூரி பேராசிரியராக மாறி மாணவர் ஒருவரை வழிநடத்தி கேடு கெட்ட அரசியல் வாதிகளை பழிவாங்குவார். அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றம் செல்லும் போது அவரிடம் ஒரு நிருபர் "இப்படி செய்ய நீங்கள் வெக்கப் படலையா" என்பார், அதற்கு அவர் ஒரு சிறிய சிரிப்போடு கடந்து செல்வார் அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.

இவருடைய மறைவு தமிழ் திரைஉலகிற்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து இவருடைய முக்கியத்துவம் தெரிகிறது. அவருடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், திரைஉலகத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் தேர்தல்
Democrats கட்சியில் தேர்தல் முஸ்தீபுகள் பரபரப்பாக இருந்தாலும், யார் அதிபர் தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒபாமாவும், ஹில்லேரியும் இன்னமும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டிருக்கிறார்கள். இதே நேரம் Republican கட்சி மெக்கெய்னை தேர்ந்தெடுத்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது. தற்சமயம் ஒபாமா முன்னனியில் இருப்பதாக தெரிந்தாலும், ஹில்லேரி எப்படியும் முன்னால் வந்துவிடுவார் என்று என் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் அவர்கள் சொன்னாலும் மிக முக்கியமாக அவருடைய மற்றும் பில் க்ளிண்டனின் அரசியல் செல்வாக்கு என்பது அவர்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த தேர்தல் முறை சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......