நேரம்

Saturday, December 13, 2008

பித்தனின் கிறுக்கல்கள் – 32

இந்தியாவில் பாக் தீவிரவாதிகளின் தாக்குதல்
சமீபகாலத்தில் அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம், இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், இந்திய அரசு நிலை குலைந்தது, மும்பாய் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டது, மராத்தியர்களைக் காப்போம் என்ற சிவசேனாத் தலைவர்கள் எங்கே, மும்பாய் போலீஸ் தாக்குதலைக் கண்டு தடுமாறியது இத்யாதி இத்யாதி என்று சொல்லி சொல்லி அனைவரும் ஒரு 10 நாட்களைக் கடத்தி விட்டனர். இந்தியப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் அத்வானி எல்லோரும் தீவிரவாதத்தை தடுப்போம், அதை இந்தியா அனுமதிக்காது என்று பேசிவிட்டு போய் விட்டனர். நம் எல்லோருக்கும் பொழுது போகவேண்டாமா இந்தத் தாக்குதல் தொடங்கியதும் குப்பன் சுப்பன், பித்தன், பொடலங்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய் என பலரும் கருத்து கநதசாமியாகி கருத்து மழையையெல்லாம் தாண்டி கருத்துச் சுனாமியாக வெடித்து விட்டார்கள். இந்த டமாஸ் சமாச்சாரத்தை கிஞ்சித்தும் ரசிக்கத் தெரியாத ‘சோ’ போன்ற பத்தாம் பசலிகள் என்னமோ எழுதியே இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மாற்றிவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வருவதற்கு சௌகர்யமாக இருக்கட்டும் என்று இரயில் மற்றும் பஸ் விட்டால் மட்டும் போதுமா, அது அவர்கள் சொந்த ஊரிலிருந்து வருவதற்கு சௌகரியமாக இருக்கிறதா, இரயில் பஸ் நிலையங்கள் அவர்கள் வீட்டிற்கு அருகாமையிலா என்றெல்லாம் யோசிக்காமல் இந்திய அரசாங்கம் எப்படி முடிவு எடுக்கலாம், சிலருக்கு கடல்தான் பக்கம், அதனால் கப்பல் போக்குவரத்து ஏற்பாடு செய்ய எப்படி சொல்வது, வெறும வாய்வார்த்தையாகச் சொன்னால் இந்திய அரசாங்கம் கேட்குமா, பார்த்தார்கள், இந்த முறை கடல் வழியாக வந்து தாக்கினால் ஒரு கப்பல் சேவையை அடுத்த மாதம் துவக்கி விட மாட்டார்களா? அப்படி ஏதாவது ஒன்றை இந்திய பித்துக்குளி அரசாங்கம் செய்தாலும் ஆச்சர்யப்ப் படக்கூடாது. எப்படி இப்படி ஒரு பைத்தியக்கார சேவையை துவக்கலாம் என்று யாராவது கேள்வி கேட்டால், கப்பல் சேவையை குஜராத் பக்கம் திருப்பி விட்டு விட்டால் வருகின்ற தீவிரவாதிகளின் தொல்லையை மொத்தமாக குஜராத்திற்கு அனுப்பி மோடி அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடிக்க வைக்கலாம், அவர் குஜராத்திற்கு இனி வேறு எந்த நல்லதும் செய்ய முடியாமல் போய் அவரது ஆட்சியும் கவிழ்ந்தால் இன்னமும் உத்தமம். அதையும் விட அந்தச் சேவைக்கு அண்ணல் அம்பேத்கார் பெயரை வைத்துவிட்டால் போதும் இந்தியாவே ஜன்னி வந்து ஆடும். இதில் இந்திய மக்கள் எக்கேடு கெட்டால் இவர்களுக்கு என்ன, இவர்கள் ஓட்டு வங்கி (அது என்ன எழவு வங்கியோ) பாதிக்கப் படக்கூடாது. அதுவல்லவோ முக்கியம். இந்தியாவில் மைனாரிடி முஸ்லீம்களின் ஓட்டு இல்லாமல் யாரும் ஜெயிக்க முடியாது என்று எந்த காலத்திலும் நிரூபிக்கப் படவில்லை. அப்படி இருக்க அவர்களுடைய ஓட்டுக்காக ஏன் இந்த அரசியல்வாதிகள் (மோடியைத் தவிர) இப்படி அடித்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தில் 6 அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். அது நம்மைப் போல சாதாரணர்களுக்கு தாங்க முடியாத சோகத்தையும் கையாலாகாத இந்திய அரசியல்வாதிகளின் செயலைக் கண்டு அதிர்ச்சியையும் தரும் அதே நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் இன்னமும் என்ன செய்து மீதம் இருக்கிற 6 மாத ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ரூம் போட்டு யோசித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதுதான் தீவிரவாதிகள் பயன் படுத்திய செல்போன் சிம் கார்ட் வாங்கிக் கொடுத்தவர், விற்றவர், என்று ரூபாய்க்கு தம்பிடி ப்ரயோசனமில்லாதவர்களைப் பிடித்து நடந்த சோகத்திற்கு முடிவு காணப்படுவது போல் ஒரு முயற்சி நடக்க ஆரம்பித்திருக்கிறது. அதை விடுத்து, உளவுத்துறையினர், அதன் தலைவர்கள், தீவிரவாதிகளில் பலருக்கு உதவிய அரசியல்வாதிகள், அவர்களுடைய உதவியாளர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறையில் இருக்கும் எட்டப்பன்கள் இவர்களை களையெடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் இது என்ன நடவடிக்கை என்று தெரியவில்லை. நடந்திருப்பது எல்லை தாண்டிய பயங்கரவாதம், எல்லை மீறல் முயற்சி, நாட்டை தாக்கும் போர் முயற்சி, அதைப் போர்கால விதிகளைக் கொண்டு தீர்க்காமல் வெறும பேசித் தீர்ப்போம் என மீண்டும் இந்த அரசு முயலுமேயானால, அதைவிட ஒரு கேவலம் நமக்கு வேண்டியதில்லை. இப்படி பட்ட அரசாங்கங்கள் இருக்கும் வரை, இந்தியா 2020 ல் என்ன 20020 இல் கூட வல்லரசாக முடியாது.

இந்த தாக்குதலில் சில நன்மைகள் இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. கடந்த முறை நடந்த கார்கில் ஆக்கிரமிப்பு, நாடாளுமன்ற தாக்குதல், மும்பாய் இரயில்களில் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் இந்தியர்கள். இந்த முறை பல வெளிநாட்டினர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்கா, பாகிஸ்தான் மீது கொஞ்சம் கோபப்படுவது போல நடிக்கவாவது செய்கிறது, தீவிரவாத தாக்குதல்களை நம்மைப் போல அனுதினமும் அனுபவிக்கும் இஸ்ரேல் இந்தியாவிற்கு உதவ மீண்டும் ஒரு முறை நேசக் கரம் நீட்டியிருக்கிறது, ஓட்டு பொறுக்கிகளின் உதவியினால் அந்த நல்ல முயற்சி மீண்டும் ஒரு முறை தவற விடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினர் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் இருந்திருந்தால், இந்தத் தாக்குதலும் இந்தியாவில் நடக்கும் மற்ற தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்பட்டு மறுதினமே மறக்கப் பட்டிருக்கும்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....
piththanp@gmail.com

0 comments: