நேரம்

Friday, April 17, 2015

பித்தனின் கிறுக்கல்கள் - 49

அனைவருக்கும் மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சமீபத்துல தமிழ் புத்தாண்டு அன்று என்னோட ரிச்மண்ட் நண்பர்களிடம் (நாகு மற்றும் சிலர்) அளவளாவினேன்.  அப்போது சொந்த குசல விசாரிப்புக்கு பிறகு எங்கள் பேச்சு தமிழ் சங்கத்து வளைப்பூ பக்கம் திரும்பியது.  அப்போது என்னை அவர்கள் மீண்டும் தமிழ் சங்க வளைப்பூவில் எழுத சொல்ல, அதற்கு என்ன சொல்லாம் என்று யோசிப்பதற்குள், ஜார்ஜியாவில் இருக்கும் ஒரு ஜகஜ்ஜால சாமியாருக்கு 27 வருடம் 3 மாதங்கள் சிறை தண்டனை என்ற செய்தி வர அதை சாக்காக வைத்து எழுதுங்கள் என்று என் மற்றுமொரு ஆத்ம நண்பன் சொல்ல சரி என்று சொல்லி எச்சரிக்கை ஒன்றை வளைப்பூவில் பதிந்து விட்டேன்.  எச்சரிக்கை எதற்கென்றால், எமது கிறுக்கல்கள் ரிச்மண்ட் தமிழ் சங்கத்தில் யாருக்கேனும் பிடிக்கவில்லை என்றால் ஒன்று உடனடியாக சொல்லி விடலாம், இல்லை படிக்காமல் அடுத்தவருடைய பதிவிற்கு தாவி விடலாம்.  நாகு சொல்வது போல், என் கிறுக்கல்களை, நாகு, முரளி, மு.கோபாலகிருஷ்ணன், நான் என  நான்கு பேர்தான் படிப்போம் என்றால் ஒன்றும் ப்ரச்சனை இல்லை.  அதையும் மீறி யாரேனும் படித்து விட்டு திட்ட ஆரம்பித்தால், “அதான் அப்பவே எச்சரிக்கை போட்டு விட்டேனே” என்று ஜல்லியடித்து விடலாம் என்பதற்குத்தான் அந்த எச்சரிக்கை.

சொத்து குவிப்பு வழக்கு
இந்த வழக்கு என்ன ஆகப் போகிறது என்று எமக்குத் தெரியாது, ஏன் ஜெ வுக்கே தெரியாது என நினைக்கிறேன், ஒவ்வொரு நாளும் நீதிபதி குமாரசாமி இப்படி கேள்வி கேட்டார், அப்படி கேட்டார், ஜெ மற்றும் சசிகலாவின் வக்கீல்கள் மூச்சு முட்டி திணறி விட்டனர், இடையிடையே அரசு வக்கீல் பவானிசிங்கை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டார், என்று பலப் பல செய்திகள் விகடனில் வந்த வண்ணம் இருக்கிறது, இதில் எது உண்மை, எது பொய் என்பது அந்த பித்தனுக்கே வெளிச்சம். 

துக்ளக் ஆண்டு விழாவில் (ஜனவரி, 2015) “சோ” சொன்னது போல், இந்த வழக்கின் முதல் தீர்ப்பில் (நீதிபதி குன்ஹா) பல ஓட்டைகள் இருக்கிறது அதுவும் சொத்து மதிப்பீட்டில் பல குளறுபடிகள் இருப்பதால் தானே ஒரு மதிப்பீட்டை அவர் செய்திருப்பது (அவருக்கு அந்த தகுதி உண்டா என்பது ஒரு சட்ட சிக்கல் வேறு), சொந்தக் கருத்துக்களை அங்கங்கு அள்ளித் தெளித்திருப்பது என்று பல இடங்கள் ஜெ விற்கு சாதகமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார். இதை ஜெ யின் வழக்கறிஞர் எப்படி தனது கட்சிக்கார்ர் சார்பாக மாற்றுவார் என்று தெரியவில்லை, அவரது வாதமோ சரியில்லை என்பது விகடனாரின் கருத்து.  ஆனால், இத்தனை நடக்கும் போதும், அ.தி.மு.கவின் ஓட்டு வேட்டையில் எந்த ஓட்டையையும் திமுகவினால் போடமுடியவில்லை.  இத்தனைக்கும் தமிழகத்தில் நடப்பது ஒரு நிழல் ஆட்சி என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தும், கலைஞர் மற்றும் ஸ்டாலினால் இதை சாதிக்க முடியவில்லை.  இதற்கு காரணம் அதிமுக மீது மக்களுக்கு இன்னமும் கோபம் வரவில்லை, அல்லது அவர்களுக்கு மாற்றாக திமுகவையோ, தேமுதிகவையோ அல்லது மற்றவர்களையோ மக்கள் ஏற்கவில்லையோ என்ற எண்ணம்தான் எமக்கு வருகிறது. 

இதற்கு இடையில், திமுக வின் அன்பழகன் பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது சரியில்லை என்று பதிந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் இரு நபர் பெஞ்சில் ஒரு நியமனம் சரி என்றும் ஒருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க, இப்போது அந்த வழக்கு மூவர் பெஞ்சிற்கு சென்றிருக்கிறது.  இதில் சரி என்று தீர்ப்பளித்தவர் ஒரு தமிழர் (பானுமதி) என்பதால் அவர் பெயர் மாடியிலிருந்து விழுந்த பித்தளை சொம்பு மாதிரி அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. தவறு என்ற நீதிபதி (மதன் லோகூர்) அதை சொல்லும் சாக்கில் தனது ஆதங்கங்களையும் சேர்த்து கொட்டி  ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறார்.  சரியில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு விலக வேண்டிய இடத்தில் இருக்கும் ஒருவர் இப்படி சொந்த கருத்தை சொல்லி தீர்ப்பளிப்பது ஏன் என்று தெரியவில்லை.  இவருடைய தீர்ப்பில் இந்த கிரிமினல் வழக்கு 15 வருடங்களாக நடை பெறுவது ஒரு தவறான முன்னுதாரணம் என்று சொல்லியிருக்கிறார்.  இதற்கு முன்பு பீஹார் முன்னால் முதல்வர் லாலு ப்ரசாத் யாதவின் மாட்டுத் தீவன ஊழல் வழக்கு (950 கோடி) 1997ல் துவங்கி 2013ல் அவருக்கு 5 வருட சிறை தண்டனையும், 25 லட்சம் அபராதமும் கொடுக்கப்பட்டு சிறை சென்ற இரண்டரை மாதத்தில் வெளியே வந்து, முலாயம் சிங் யாதவ், நிதிஷ் குமார் என்று கூட்டத்தை கூட்டி அரசியல் செய்த படி இருக்கிறார்.  இது பாவம் நீதிபதி மதன் லோகூருக்கு தெரியவில்லை போலிருக்கிறது.  லாலுவை வெளியே விட்டதால் ஜெ வை வெளியே விடவேண்டும் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம்.  சட்டம் என்பது யாவருக்கும் பொது என இருக்க வேண்டும், ஒரு மாயாவதி, மம்தா என வேண்டியவர்களுக்கு ஒரு வழியாகவும், வேண்டாதவர்களுக்கு வேறு மாதிரியாகவும் இருக்கக் கூடாது என்பது எம் வாதம்.


2016-ல் தமிழக் சட்டசபைத் தேர்தல்
சமீபத்தில் விகடனில், வரும் டிசம்பரில் தமிழக சட்டசபைக்கு தேர்தலை நடத்த ஜெ முடிவெடுத்திருப்பதாக  ஒரு செய்தி கசிந்திருக்கிறது.  அதற்கு பலப் பல காரணங்கள் தலை விரித்தாடினாலும், அந்த தேர்தலிலும் அதிமுக வெல்வதற்கான சாத்தியம் விரவியிருக்கிறது என்பது எம் கருத்து.  இதற்குள் ஜெ யின் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமாயின், எதிர் கட்சிகள் பாடு பெரும்பாடுதான்.  அதிலும், இந்த முறை அதிமுக பாஜக வோடு கூட்டணி வைத்தால் கண்டிப்பாக வெற்றி அதிமுக வுக்குத்தான் ஆனால், எதற்கு பாஜக வை தேவையில்லாமல் தமிழகத்தில் வளர்த்து விட வேண்டும் என்று ஜெ நினைக்கலாம்.  எது எப்படியோ, பா.ம.கவும் தே.மு.தி.க வும் பாஜக வுடன் கூட்டனி வைப்பது கடினம்தான்.  அவர்கள் திமுக பக்கம் போனால் அவர்களுக்கும் டெபாசிட் கிடைப்பது கடினம்தான்.  முதலமைச்சர் கனவில் இருக்கும் விஜயகாந்தும், முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப் பட்டிருக்கும் அன்புமணியும் திமுக தலைமையையோ அல்லது ஸ்டாலினையோ முதலமைச்சராக ஏற்றுக் கொள்வது கடினம்தான்.  வாசனின் கட்சி (த ம க) திமுக பக்கம் சேரலாம், வாசனுக்கு திமுகவின் ஊழல் விஷயங்கள் நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது அவர்களோடு சேருவாரா என்பதும் கேள்விக் குறிதான்.  கலைஞருக்கு விடுதலை சிறுத்தைகள், தி.க, புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி), மனித நேய மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் என சில துக்கடா கட்சிகள் இருக்கிறது அவர்களை கட்டி இழுத்து செல்வது போதாது என்று அவர்களோடு அனேகமாக காங்கிரஸையும் சேர்த்து இழுத்து செல்ல வேண்டியிருக்கலாம். 

திக வீரமணி – தந்தி டி.வி. பேட்டி
நாகு எனக்கு வீரமணி தந்தி டிவியில் கொடுத்த பேட்டியின் யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார்.  10 நிமிடங்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கு அபத்தமாக இருந்தது வீரமணியின் பதில்களும் வாதங்களும். இதற்கு பிறகு திக அள்ளக் கைகள் இந்த பேட்டியில் பேட்டியாளர் பாண்டே வை, வீரமணி பிரித்து மேய்ந்து விட்டார், தண்ணி காட்டி விட்டார், என்றெல்லாம் செய்தி பரப்பியதாக எனது சென்னை உறவினர் மூலம் தெரிந்து கொண்டேன்.  வின்னர் படத்தில் அடிபட்டு உட்கார்ந்திருக்கும் வடிவேலுவை பார்க்கும் இரண்டு ஊர்காரர்கள் சொல்லும் ஒரு டைலாக்: “அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு ரத்தம்னா, அடி வாங்கினவங்க கதி என்ன ஆச்சோ தெரியலையே”   அதுமாதிரி அடி கொடுத்த கைப்புள்ளை வீரமணி என்று வேண்டுமானால் அவரை இனி சொல்லலாம். 

திடீரென, தாலி அணிவது தவறு என்று தோன்றியிருக்கிறது இந்த கையாலாகாத கூட்டத்திற்கு, அவர்களது திருமணத்தின் போது அதை அணியும் போதும், இது நாள் வரை அதை அணிந்திருந்த போதும் அவர்களது பகுத்தறிவு எங்கே போனது, பன்றி மேய்க்கவா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. நல்ல மன நிலையில் இருக்கும் ஒரு மனிதன் திடீரென ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது மதத்தை சேர்ந்தவர்களையோ பார்த்து கல் எறிந்தால், அந்த மனிதனை தவிர்த்து நகர்ந்து செல்லும் பகுத்தறிவு அந்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு இருக்கும் வரை இவர்களுடைய இந்த அசிங்கங்கள் நடந்து கொண்டுதானிருக்கும்.  இப்படி செய்யப் பட்ட கேலிக் கூத்தில் வீரமணியின் குடும்பத்தினர் எவரும் தங்கள் தாலியை கழற்றியதாக செய்தியில்லை.  இதற்குப் பிறகும் இப்படிப் பட்ட பித்தலாட்ட கூட்டத்தை எப்படி நம்புகிறார்கள் என்பதும் தெரியவில்லை.
  
ஜார்ஜியா மாகாணத்தின் ஜகஜ்ஜால சாமியார்
ஜார்ஜியா மாகாணத்தின் போலி சாமியாருக்கு 27 வருடங்கள் சிறை தண்டனை அளித்திருக்கிறார்கள்.  இவரைப் பற்றி 2009லும் பின்னர் 2010லும் எமது கிறுக்கல்களில் எழுதியிருந்ததை என் ரிச்மண்ட் நண்பர் முகநூலில் குறிப்பிட்டு சொல்லி என்னை இதைப் பற்றி எழுதச் சொன்னார்.  இதில் எம் பங்கிற்கு எழுத எதுவும் பாக்கி இல்லாமல் பல ஊடகங்களிலும் இந்த செய்தி பரவியிருக்கிறது.  இவரது தண்டனைக் காலம் முடிந்து இவர் வெளியே வந்ததும் (வந்தால்) இந்தியாவிற்கு நாடு கடத்தப் படுவார் என்பதும் இவருடைய மனைவி  நாடு கடத்தப் பட்டு விட்டர் என்பதும் உபரி செய்தி.  இவரது தண்டனைக்கும் அப்பீல் உண்டு, அது என்னவாகப் போகிறதோ தெரியவில்லை.

2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்
ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி க்ளிண்டன் போட்டியிடப் போவதாக செய்தி வந்திருக்கிறது. அது வந்த நாள் முதல், ஊடகங்களில் பொது மக்களின் பின்னூட்டங்களில் அதிகம் வறுபடுபவராக இவர் இருக்கிறார்.  அதிலும் ஒரு சில பின்னூட்டங்கள் மிக மிக கடுமையான தாக்குதலுடன் இருக்கிறது.  தன் வீட்டையே ஒழுங்காக பாதுகாத்துக் கொள்ள முடியாத இவரால் நாட்டை எப்படி பாது காக்க முடியும் என்ற சுமார் தாக்குதலில் ஆரம்பித்து, இவருடைய நேர்மை, திறமை, குணம் என்று வகை வகையாக தாக்கப் படுகிறார்.  இப்போது எம்முடைய கவலை, இந்த தாக்குதல்கள் எல்லாம் இவருக்கு ஒரு வித அனுதாபத்தை சம்பாதித்து தந்து இவர் அதிபராக வந்து விட்டால், பாரதி சொன்னது போல் இவருக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் 

"கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும்  அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே நிதம்
பறிதவித்தே உயிர் துடி துடித்து
துஞ்சி  மடிகின்றாரே இவர் துயர்களை தீர்க்கவோர் வழியிலையே " என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

       சினிமா
பேபி (ஹிந்தி)
சமீபத்தில் பார்த்த படங்களில் மிகச் சிறந்த படமாக பேபியை சொல்வேன்.  இயக்கம் நீரஜ் பாண்டே - A Wednesday, Special 26 போன்ற படங்களைத் தந்தவரின் அடுத்த படைப்பு.  இந்த படத்தை பார்த்ததும் விஸ்வரூபம் படத்துக்கு கமலை கடுப்பேற்றிய கும்பல் இந்த படத்தில் கமல் நடித்திருந்தால் அவரை கொளுத்தியே இருப்பார்கள் என்று தோன்றியது.  இந்த படத்தில் வருவதில் 5% தான் விஸ்வரூபத்தில் இருக்கிறது என்பது எம் கருத்து.

கதையை சொல்லப் போவதில்லை, காரணம், படம் பார்க்கும் உங்களுக்கு அது ஒரு தடையாக இருக்கும்.  கண்டிப்பாக பாருங்கள்.

சங்கரின் மற்றுமொரு ப்ரமாண்டமான படைப்பு 'ஐ'.  விக்ரம் வழக்கம் போல் அசத்தலாக நடித்து வெளிவந்த படம்.  படம் விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை நம்பியே நகர்கிறது.  நடு நடுவே ஏமி ஜாக்ஸனின் அழகும், குறைந்த ஆடைகளும் படத்தை நகர்துவது போல தோற்றமளித்தாலும், விக்ரம் இல்லாமல் இந்தப் படம் அரை இன்ச் கூட நகர்ந்திருக்காது.  
கதை வழக்கம் போல பழிவாங்கும் கதைதான் ஆனால் அதை சொல்லியிருக்கும் பாங்கு அதற்காக மெனக்கெட்ட விக்ரம் என்று நம்மை ப்ரமிக்க வைக்கிரது.  பாடல்கள் ஓரிரு முறை கேட்டால் கண்டிப்பாக முணுமுணுக்க வைக்கக்கூடியது.  படத்தின் நீளம் அதிகம், காட்சிகள் சடக் சடக்கென்று, நிகழ்காலம், ஃப்ளாஷ்பாக் என்று மாறுவது குழப்பமாக இருக்கிறது என்று ஜல்லியடிப்பவர்கள் பாவம் கரகாட்டக்காரன், ராஜகாளியம்மன் என்று எதாவது பார்க்கட்டும்.  கண்டிப்பாக ஓரிரு முறை பார்க்கக்கூடிய படம்.  குடும்பத்துடனா என்றால் சற்று சங்கடம்தான், தனியாகவோ அல்லது துணைவியோடோ கண்டிப்பாக பார்க்கலாம்.

லிங்கா
எனக்கு மிகவும் பிடித்திருந்தது தாத்தா ரஜனியின் புயல் வேகம்.  கண்டிப்பாக ஒருமுறை குடும்பத்துடன் பார்க்கலாம்.  நல்ல பிரிண்ட் ஆக இருந்தால் ரொம்ப முக்கியம். இந்தப் படம் வெளிநாடுகளில் நன்கு ஓடியதாக செய்தி வந்தது.   தமிழகத்தில் நன்கு ஓடியும் அழுது அடம் பிடித்து பிச்சை எடுப்பேன் என்று மிரட்டி ரஜனியிடம் இருந்து வினியோகஸ்தர்கள் பணம் வாங்கிக் கொண்டு வெக்கமே இல்லாமல் அதற்கு அடித்துக் கொண்ட கொடுமையும் நடந்தது.  

படத்தில் இந்தக் காட்சி அந்தப் படத்திலிருந்து திருடப்பட்டது, அந்தக் காட்சி சரியில்லை, இது போர், இது பரவாயில்லை என்று எம்மைப்   போல எல்லாம் தெரிந்தது போல் விமர்சனம் எழுதுபவர்களை ஒதுக்கி விட்டு படம் பாருங்கள்.

மீகாமன்
நல்ல கதை நல்ல நடிகர் இருந்தும் அப்படி சொதப்புவது என்று இந்த படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  குருத்திப் புனல் பாகம் 2 என்று சொல்லக்கூடிய கதை, ஆர்யாவின் நடிப்பு எல்லாம் இருந்தும் பல சொதப்பல் காட்சிகளால் படம் சூப்பர் என்ற இடத்திலிருந்து பரவாயில்லை ரகத்துக்கு போய் விட்டது.  கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.  சொல்ல மறந்து விட்டேன், இந்த படத்தில் ஹன்சிகாவும் இருக்கிறார்.

காக்கிசட்டை
சிவகார்த்திகேயனின் நடிப்பில் காமெடி அதிகம் கலந்து வந்திருக்கும் படம். கமலின் காக்கி சட்டை பெயர் இருந்தாலும், இது ஒரு முறை பார்க்கக் கூடிய படமாக இருக்கிறது.

ஆக்ஷ ன் சிவா விற்கு ஒத்து வரவில்லை, அதுவும் காமெடி போல இருக்கிறது,
திரைக் கதையில் சில ஓட்டை இருந்தாலும், குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.

என்னை அறிந்தால்
நல்ல, தைரியமான, ஆக்ரோஷமான, புத்திசாலியான மனைவியை இழந்த போலீஸ், அவரை துரத்தி அல்ல துரத்த வைத்து தாக்கும் புத்திசாலியான, கொடூரமான வில்லன், சொதப்பலான எடிட்டிங், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், முடிவு எல்லாம் இருந்தால் அது கெளதம் மேனனின் மற்றுமொரு படம்.  இந்த உலக மகா எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் மீண்டும் ஒருமுறை தந்து நம்மை தாக்கியிருக்கிறார்.  பாவம் அஜித் தெரியாமல் ஒப்புக் கொண்டு விட்டு இப்படிப் பட்ட த்ராபை படத்தில் நடித்து படத்தை தள்ளிக் கொண்டு போக முயற்சித்து தோற்றிருக்கிறார்.  

பூஜை /ஆம்பள
விஷால் நடித்ததாக சொல்லிக்கொண்டு வந்திருக்கும் படங்கள் இவை. 
பூஜை - இயக்கம் ஹரி, கதாநாயகி ஸ்ருதி ஹாசன், வில்லன் முகேஷ் திவாரி , காமெடி பரோட்டா சூரி இசை யுவன், ஸ்ருதி ஹாசனுக்கு குரல் அவரே தனது கர்ண கடூர குரலில் பேசியிருக்கிறார் சகிக்கவில்லை. 
ஆம்பள - இயக்கம் சுந்தர் சி. கதாநாயகி ஹன்சிகா, வில்லன் ப்ரதீப் ராவத், காமெடி சந்தானம் இசை ஹிப் ஹாப் தமிழா (ஆதித்யா அண்ட் ஜீவா),

இதைத் தவிர வேறு வித்தியாசம்  இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.  பொழுது போகவேண்டும் என்றால் மூளையை கழட்டி வைத்து விட்டு தெலுங்கு படம் பார்ப்பதைப் போல பார்க்கலாம்.



பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்?

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

0 comments: