நேரம்

Monday, January 14, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 17

உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒன்றை செய்ய எந்த நீதி மன்றத்திற்காவது தெரியுமா, இதை செய்து விட்டு உச்ச நீதி மன்றம் இந்தியாவில் எப்படி இயங்குகிறது? இதை கேட்ட ஒரு நாதியும் இல்லையா? நீதி செத்து விட்டதா? இதனால் ஒரு 400 வருட பாரம்பரியம், வழி வழியாக வரும் வழக்கம், ஒரு கலாச்சார அடையாளம் தடை செய்யப்பட்டு இருக்கிறதே அது யாருக்கும் உறைக்கவில்லையா?

விஷயம் இதுதான், தமிழகத்தின் அடையாளம், தமிழனுடைய வீரத்தின் அளவு கோல் என பலப் பலப் வருடங்களாக நடந்து வரும் ஜல்லிக் கட்டு இந்த வருடம் உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப் பட்டிருக்கிறது. காரணம் இந்த போட்டிகளில் வாயில்லா ப்ராணிகள் சித்ரவதை செய்யப் படுகின்றன

இது கலாச்சார அடையாளம், பாரம்பரியம், வம்சா வழி வழக்கம், வீரத்தின் அளவு கோல் என்ற உதவாக்கரை சாக்குகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், வருடா வருடம் நடக்கும் இந்த கூத்தினால் பயன் பெறுவது சாலையோர வியாபாரிகள், மற்றும் மருத்துவர்கள்தான் என நினைக்கிறேன். ஒவ்வோரு வருடமும் 10 பேர் வயிறு கிழிந்தது, 5 பேர் பலி, 100-150 பேர் கூட்ட நெரிசலில் அடி பட்டு கால் உடைந்தது, கை உடைந்தது என்று வரும் செய்தியில் எண்ணிக்கைதான் மாறுகிறதே தவிர வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை.

இதற்காக தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொதுஜனத்திற்கு ஒரு சில வேண்டுகோள் - தமிழனின் வீரத்தை, அடுத்த முறை தேர்தல் வரும் போது அதில் ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து வெளிப் படுத்துங்கள். இந்த விஷயத்தை வைத்து, ஜல்லிக் கட்டு மாட்டை விட கேவலமாக தமிழர்களுக்கு கொம்பு சீவிவிடும் தரம் கெட்ட அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நல்ல மருத்துவ வசதி இல்லையே என்று கவலைப் படுங்கள், மாட்டை அடக்க முயல்வதை விட்டு விட்டு, நாலு பசு மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து குடும்பத்தை முன்னேற்ற முயலுங்கள்.

அடுத்ததாக ரஜனியின் குசும்புத்தனம். சமீபத்தில் சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் ஆன்மீகத்தில் தனக்கு இருக்கும் பிடிப்பை வெளிப்படையாக சொல்லி தமிழக முதல்வரையே கிண்டலித்திருக்கிறார். கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசீர்வாதம் நிறையவே உள்ளது என்று சொல்லியிருக்கிறார். இதைப் படிக்கும் போது, பலப் பல வருடங்களுக்கு முன்பு இதே கருணாநிதியின் வசனத்தில் வெளிவந்த மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் 'மனோகரா' திரைப்படத்தின் விமர்சனத்தில் கல்கி, இந்தப் படம் பகுத்தறிவு ஊட்டும் படமில்லை, பாரத நாட்டு கற்பு நெறியை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம் இது, இராமபிரான் முதல் காந்தி மகான் வரையில் தங்கள் வாழ்க்கையில் கடைப் பிடித்திருக்கும் சன்மார்க்க நெறியையே "மனோகரா" படம் வற்புறுத்தி வெற்றி அடைந்திருக்கிறது என்று எழுதியிருந்தார் அது நினைவுக்கு வந்தது. ரஜனி இப்படி முதல்வரின் முன்பு அவருக்கும் கடவுளின் கருணை உண்டு என்று வெளிப்படையாகச் சொல்லி தனது தைரியத்தையும், தன் கடவுள் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த பதிவு வெளிவரும் போது, அநேகமாக கிரிக்கெட்டை விரும்பும் இந்தியர் அனைவரும் ஆஸ்த்ரேலியாவை தாக்கி, திட்டி, சாபம் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஸ்டீவ் பக்னர் ரொம்ப மோசம் என்று அனைவரும் தாக்கி வரும் இந்த நேரத்தில் ஒரு சின்ன ஜோக் -
ஒரு பாட்ஸ்மேன் அவுட் என்று அம்பயர் அவுட் கொடுத்துவிடுகிறார்.
அந்த பாட்ஸ்மேன் அம்பயரைக் கடந்து போகும் போது, "பந்து என் பேட்டிலும் படவில்லை, காலிலும் படவில்லை, பிறகு எதற்காக அவுட் கொடுத்தீர்கள்" அதற்கு அம்பயர், "நான் அவுட் கொடுக்கவில்லை, இதெல்லாம் அவுட்ன்னு கேக்கராங்களே இது உனக்கே நியாயமா என்று ஆண்டவனைக் கேட்டேன்" என்பார். இதுதான் நிஜத்தில் நடந்தது போல இருக்கு பக்னரின் அம்பயரிங்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

0 comments: