நேரம்

Wednesday, July 04, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

இன்னொரு புதிய கட்சி
நாட்டு மக்களுக்கு ஒரு தண்ட செய்தி. நடிகர் சரத்குமார் சொந்த கட்சி ஆரம்பிக்கிறார். இந்த கட்சி சாதி மத பேதமின்றி இருக்கும் என்றும் நாளைய தமிழகம் வளம் பெறவும், இளைஞர் சமுதாயம் வளம் பெற என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஓட்டை நம்பி ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார். இவர் விஜயகாந்த் போல இல்லாமல், உயிரை கொடுப்பேன் என்று மிரட்டி கட்சியை ஆரம்பிக்கிறார். எந்த அரசியல்வாதியும் எந்த பொது நலத்திற்காக உயிரைக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிருபிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆனால் இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் "இருப்பது ஒரு முறை சாவது ஒரு முறை, அது தமிழுக்காக செல்லட்டும்", "ரூபாய்க்கு மூனு படி அரிசி தருவோம், இல்லை எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்", "எங்கள் உடம்பில் கடைசி சொட்டு குருதியிருக்கும் வரையில் தனித் தமிழ்நாட்டிற்காக போராடுவோம்" என்ற பழைய வசனங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள்.

குடியரசுத் தலை(வி)வர்.
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்/தலைவி தேர்தல் களை கட்டியிருக்கிறது. முதன் முறையாக ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப் படும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ப்ரதீபா பாடில் என்ற முன்னால் மஹாராஷ்டிர அமைச்சர், தனது தற்போதைய ராஜஸ்தானின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு களம் இறங்கியிருக்கிறார். துக்ளக்கில் 'சோ' இது ஒரு தமாஷ் என்று சாடியிருக்கிறார். அதையும் தாண்டி இவரை பீஹாரின் முன்னால் முதல்வர் ராப்ரி தேவியோடு ஒப்பு நோக்கியிருக்கிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், இவர் போட்டியிலிருந்து தானே விலகிக் கொள்ள வேண்டும் என்று, தன் மீது நீதி மன்றத்தில் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். இவர் ஒருவர் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால், பெண் சுதந்திரம் பாதுகாக்கப் படும், பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டின் முதல் கல் நகர்த்தப்பட்டு விட்டதாகி விடும் என்று தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருடைய கூட்டணியில் இருக்கும் பா.மா.க தலைவர் இந்த பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று சாடி இருக்கிறார். இதில்

பதவி மிக உயர்ந்த பதவி, அதன் வேட்பாளராக இவர் அறிவிக்கப் படுவதற்கு இவருடைய சாதனைகள் என்ன என்பது இதுவரை தெளிவாக்கப் படவில்லை. இவர் முன்னால் அமைச்சராக இருந்தவர் என்பதுதான் என்றால், இவரை விட மேம்பட்ட முன்னாள்/இன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தியாவில் உண்டு, இவரை விட தற்போதைய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் பன்மடங்கு தகுதியானவர் என்பது என் எண்ணம். என்ன செய்வது அவருக்கு அரசியல் தெரியவில்லை. கேள்விகள் வேறு கேட்கிறார். ராமதாஸ் சொன்ன மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியவில்லை. 'சோ' சொன்ன மாதிரி ஒரு டமாஸ் நாடகம் அரங்கேற்றம் ஆகப் போகிறது.



யார் இந்த பித்தன்

கொஞ்ச நாட்களாக வெளிகாட்டாமல் இருந்த இந்த கேள்வி மீண்டும் தலை தூக்கியிருப்பதாக தலைவர் நாகு போன வாரம் தெரிவித்தார். எனது முதல் கிறுக்கல் 10/2006-ல் வந்த போது பலரும் கேட்டதாக நாகு வலைதளத்தில்
நகைச்சுவையாக குறிப்பிட்டார். எனது முதல் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். எனது எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு கால விரயம். பாவம் நல்லா எழதரவங்களையெல்லாம் இவர்தான் பித்தன்-கர பேர்ல எழுதரார்னு சொல்லி அவங்க எழுதர ஆர்வத்தை உடைச்சிடாதீங்க.

எனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னு வலையில வர்ர செய்திகளைப் படிச்சுட்டு விமர்சனம் பண்றது. விமர்சனம் பண்றதுக்கு எனக்கு எந்த பயமும் இல்லை, காரணம் நான் சொல்ற பலதும் உங்களுக்கும் ஏற்புடைய கருத்துக்கள்தான் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சபை மரியாதை கருதி உங்கள் கோபங்களை வெளியில சொல்றது இல்லை, நான் சொல்றேன். தமிழ் சங்கத்தின் வலை தளத்தில் எழுதும் பலரும் எனது நல்ல நண்பர்கள். அவங்கள்ளாம் அடச் சீ போயும் போயும் இவன் மாதிரி நாம எழுதறோம்ன்னு சொல்லிட்டாங்களேன்னு அவங்கள கோபப்பட வெச்சுடாதீங்க.

நாகு என் பங்கிற்கு ஒரு கேள்வி: பரதேசி, சண், சதங்கா, அஜாதசத்ரு, பட்டாம்பூச்சி, நீர்வைமகள், தருமி, எதிரொலி என்ற பெயர்களில் எழுதுவது யார்?

தமிழ்த் திரைப்படங்கள்

உயிர்:
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டிய கஷ்டம் வந்தது. ஸ்ரீகாந்த் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், இவரைப் போல இன்னொரு நடிகர் தமிழ்த் திரை உலகத்திற்கு வருவது ரொம்ப கஷ்டம். டைலாக் டெலிவரியாக் இருந்தாலும் சரி, நடனம், முக பாவங்கள் இவையெல்லாம் இவரிடம் இருப்பது போல யாரிடமும் இல்லை. இவருடைய முதல் படமான ரோஜாக்கூட்டத்தில் எப்படி கேணத்தனமாக 2002-ல் வந்தாரோ, அப்படியே 5 வருடங்கள் கடந்த பிறகும் இருக்கிறார். நடிப்பு என்றால் அது வெறும வந்து போவது என்று எந்த மகானுபாவன் இவருக்கு சொல்லி கொடுத்தாரோ தெரியவில்லை, அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு படத்துக்கு படம் வந்து போய் கொண்டிருக்கிறார். இவருடைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
"உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறது, உங்களுக்கு புற்றுநோய் என்று கண்டுபிடுத்திருக்கிறோம், உங்கள் உறவினருக்கு சாலை விபத்தில் பலத்த காயம், உங்களை வேலையில் இருந்து நீக்குகிறோம், உங்களை வெளிநாட்டிற்கு வேலை நிமத்தமாக அனுப்புகிறோம் என்ற பல விஷங்களுக்கு ஒரே விதமான முகபாவத்தைக் காட்டக்கூடிய அதி அற்புதமான நடிகர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டார்கள்" என்று அமரர் கல்கி சுமார் ஒரு 40 வருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகின்றன. அப்படி பட்ட நடிகர்களின் தலைவர் இந்த ஸ்ரீகாந்த்.

கதை தனது கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி. அண்ணன் சாவிற்கு காரணமாக இருக்கிறார், தன் குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார், இதற்கெல்லாம் அவர் கொடுக்கும் காரணம், நான் இறந்து போயிருந்தால், என் தங்கையை உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பீர்களே, அது போலத்தான் இது என்று சட்டம் பேசுகிறார். இதை இயக்கிய சாமியை ரோட்டில் போட்டு மிதிக்க வேண்டும் என்று வைகைப் புயல் வடிவேலு தாக்கியிருந்தார். ஒரு ப்ரபலமான நடிகர் இப்படி பேசுகிறாரே என்று யோசித்தேன், அவர் சொன்னது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. அந்த இயக்குனரை, இப்படி சில திராபை படங்களை எடுக்க விட்டால் தானே மார்கேட்டை இழந்து ரோட்டோர டீக்கடையில் வேலை செய்ய போய் விடுவார்.


சென்னை 600028
இந்தத் திரைப்படம் எஸ்.பி.பி யால் தயாரிக்கப் பட்டு, கங்கை அமரனின் மகன் வெங்கட் ப்ரபுவால் எழுதி, இயக்கப்பட்ட ஒரு லோ பட்ஜெட் படம். கதை இரு அணிகளிடையே நடக்கும், நடக்க இருக்கும் நள்ளிரவு ஒளி வெள்ள கிரிகெட் பந்தயங்கள் பற்றியது. அதில் ஒரு அணியினர் பெயர் ஷார்க்ஸ் (சுறா), இன்னொரு அணியினர் ராக்கர்ஸ். வெறும் பொழுது போக்கிற்காக வந்துள்ள படம், பாடல்களில் வாழ்கையை யோசிங்கடா மட்டும் தேறுகிறது மற்றவை மனதில் நிற்கவில்லை. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆங்கிலத்திரைப் படங்கள்
Oceans 13

படத்தில் பலர் இருந்தாலும், மனதில் நிற்பது Brad Pitt, George Clooneyயும்தான், சிறந்த நடிகர் Al Pacinoவும் இந்தப் படத்தில் இருக்கிறார் என்ற அளவில் வந்து போகிறார். எது நடைமுறையில் சாத்தியம் இல்லையோ, அதை எல்லாம் செய்து Al Pacinoவின் சூதாட்டக் விடுதியை சூறையாடுகிறார்கள். அதைச் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதன் விவரங்கள் என முன் பாதி வரை நேரம் செலவிடுகிறார்கள், பின் பாதியில் அதை முடித்து விடுகிறார்கள். திரையரங்கில் பார்க்கத் தவறினாலும், குறுந்தகட்டில் வரும்போது பார்த்தாலும் போதும்.

Live Free or Die Hard
எனக்கு மிகவும் பிடித்த, (நமது நடிகர் ஸ்ரீகாந்த் போல இல்லாமல், நிஜமாகவே) ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் Bruce Willis மீண்டும் ஒரு முறை காவல்துறை துப்பறிவாளர் John Mclaine ஆக வந்து கலக்கியிருக்கும் படம். இப்படியெல்லாம் நடக்குமா, இவர்கள் சொல்வது போல நடந்து விட்டால் நம் கதி என்ன என்று யோசிக்காமல், லாஜிக் என்ற ஒன்றை தூக்கி வீட்டில் போட்டு விட்டு வெறும் சண்டை, அதிரடி, க்ராஃபிக்ஸ் என்று பார்க்க வேண்டிய படம் இது. தமிழ்த் திரைப் படங்களில் கதாநாயகன் 20-30 பேரை பறந்து பறந்து சண்டை போடுவது சுத்த பம்மாத்து என்று எகிறும் பலர், இந்த படத்தைப் பார்ப்பது முக்கியம். இதில் Bruce F-23 ரக நவீன சண்டை விமானத்தின் குண்டு மழையில் இருந்து தப்பி, பாலத்தின் மேலிருந்து விழுந்து சின்ன சிறாய்ப்புடன் எழுந்து வில்லனைப் பந்தாடுகிறார். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் (அதாவது நாம் இருக்கும் இந்தப் பகுதியில்) உள்ள அனைத்து செல் போன்கள் மற்றும், சாதா போன்களின் இணைப்பைத் துண்டித்து விடுகிறார் வில்லன், அத்தோடு மின் இணைப்பும் கிடையாது, ஆனால் அவர் கணிணியைத் தட்டினால் ஒரே ஒரு அலுவலகத்தில் ஒரே ஒரு மின் தூக்கியில் மட்டும் மின் இணைப்பு கிடைக்கும், அவர் தெருவில் ஒரு வேனில் சென்றால் அவருக்கு மட்டும் இணைய தளம் வேலை செய்யும், அவர் யாரோடும் பேச முடியும், யாருக்கும் எந்த கட்டளையும் இட முடியும், அட போங்கப்பா, எனக்கு என் வீட்டிலிருந்து வெளியே 'டெக்'-குக்கு வந்தாலே போதும் இணைய தளம் 'ஹெ ஹெ' எனச் சிரித்து வழிகிறது.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

6 comments:

said...
This comment has been removed by the author.
said...

பிரதீபா பாடீல் நிறைய ஜோக் அடித்திருக்கிறார். பிரம்மகுமாரிகள் கூட்டத்தில் போய் அவர்களின் நிறுவனர் ஆவி தன்னிடம் வந்து பேசியதாக சொல்லியிருக்கிறார். முஸ்லீம் பெண்கள் முகத்திரை போடுவது பற்றி ஏதோ உளறிவிட்டு பல்டி அடித்திருக்கிறார்.
ராக்கெட் விடுகிறவர் இடத்தில் ஆவிகளிடம் பேசுகிறவர் வருகிறார் - வாழ்க ஜனநாயகம்.

பித்தரே - இந்த யார் இந்த பித்தன் ஆட்டத்திற்கு நான் வரவில்லை :-)

சினிமா விமர்சனம் அருமை. நீங்கள் சொன்ன பட்டியலில் நான் சென்னை 28 மட்டும் பார்த்திருக்கிறேன். நன்றாக போய்க்கொண்டிருந்த படத்தில் நீலப்படத் தரத்திற்கு ஒரு பாடல் காட்சி. படத்தின் முழு பில்டப்பான இறுதிப்போட்டி மிகவும் ஏமாற்றமளித்தது.

கடைசியாக ஒன்று - முன்னாள்/இன்னாள் :-)

said...

பிட்டரே (டங்கு சிலிப்.)

//ஆனால் இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் //

உங்களுக்கு அவ்வளவு வயசாயிடுச்சா!? பூனைப்பெயர் வச்சுகிட்டாலும், எங்க கிட்ட தப்ப முடியாது.. (என்னோட பேர் ஒரிஜினலுங்கோ)

said...

நாகு,

இன்னாள்/முன்னாள், பிழைதான் திருத்திக் கொள்கிறேன்.

சதங்காவிற்கு இப்போது தெரிந்திருக்கும் ஏன் நான் அவருடைய ஆத்திச்சூடியை தொடர முடியாமல் ஜீட் விட்டேன் என்று.

ஜெயகாந்தன்: என் வயதை நான் எப்போதும் மறைக்க விரும்புவதில்லை. நான் எழுதியது இதுதான்,
//இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் "இருப்பது ஒரு முறை சாவது ஒரு முறை, அது தமிழுக்காக செல்லட்டும்", "ரூபாய்க்கு மூனு படி அரிசி தருவோம், இல்லை எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்", "எங்கள் உடம்பில் கடைசி சொட்டு குருதியிருக்கும் வரையில் தனித் தமிழ்நாட்டிற்காக போராடுவோம்" என்ற பழைய வசனங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள்.//

இதில் நான் 60-65-ல் இப்படிபட்ட சாக்கடை அரசியலை புரிந்து கொள்ளும் வயதில் இருந்தேன் என்று எழுதவில்லை. உங்களுக்கு அவர்கள் அந்த கால கட்டங்களில் சொன்னது ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள் என்றுதான்.

அட்றா சக்கை அட்றா சக்கை!!!

நாகு: என்னது இது, யாரோ கேட்டார் என்று சொன்னீர்கள், ஏன் அவர் இன்னார்தான் என்று சொல்ல மறுக்கின்றீர்கள்.

ஜெயகாந்தன்: உங்கள் பெயர் உங்களுடைய இயர்பெயர் என்று தெரிந்து கொண்ட பிறகுதான் நீங்கள் தொகுத்தளித்த தமிழ் சங்கத்தின் கலை விழாவை விமர்சனம் செய்தேன்.

கருத்துக்களுக்கு நன்றி.

- பித்தன்.

said...

திரு.அருண்செளரி 'தினமணி'யில் எழுதி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திருமதி பிரதிபா பாட்டீல் மற்றும் அவரது குடும்பத்தாரின் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி பாகம் இது..

http://truetamilans.blogspot.com/2007/07/blog-post.html

said...

BJP starting another attack on the 'innocent woman' :-)

http://www.knowpratibhapatil.com