நேரம்

Sunday, March 30, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 21

ஷாருக்கான் வாரம்
இந்த வாரம் ஷாருக்கானின் மூன்று படங்கள் பார்த்தேன். இவர் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்று சொன்னால் அது உலக மகா பொய்யாக இருக்கும் இவருடைய நடிப்பு சற்று சிவாஜி காலத்து மிகை நடிப்பு வகையைச் சார்ந்தது. ஆனால் இவருடைய படங்களில் ஒரு ஒற்றுமை, எந்தத் திராபை படமானாலும் அதைத் தனது தோளில் தூக்கி சென்று காப்பாற்ற ரொம்ப பாடு படுகிறார்.
முதலில் கல் ஹோ நா ஹோ (நாளை இருக்குமோ இருக்காதோ- இது சரியான அர்த்தமா என்று தெரியவில்லை) 2003-ல் வெளிவந்து சக்கை போடு போட்ட படம் (இது சக்கை போடு போட்டத் தகவல் தந்தது எனது அலுவலக நண்பர், அது சரியில்லை என்றால் சொல்லுங்கள் அவரை 'சரியாக' கவனிக்கிறேன்) கதை கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து எல்லோரிடமும் இருக்கிற ஒரு கதை. இது பாலைவனச் சோலையின் கதைதான். என்ன சுஹாசினிக்கு பதில் ஷாருக்கான். 5 தண்டச் சோறு தடிமாடுகளுக்கு பதில் அழகான ப்ரீத்தி ஜின்டாவும், சயிஃப் அலிகானும். அவர்கள் நடிப்பிலும் ஒன்றும் சோடையில்லை. யாருக்காவது ஏதாவது தேவையா, ஷாருக்கான் உதவுவார், வியாபாரம் டல்லா, ஷாருக்கான் உதவுவார், டேட்டிங்கில் ப்ரச்சனையா, ஷாருக்கான் உதவுவார், பாட்டிகளுக்கு மன உளைச்சலா கவலை வேண்டாம், ஷாருக்கான் உதவுவார். என்ன, வீடு, மனை வாங்க விற்க அணுகவும் என்று ஒரு போர்ட் போட்டுக் கொண்டு அவர் அலையாததுதான் பாக்கி. பாடல்கள் பலவும் சூப்பர். அதிலும், ப்ரெட்டி உமன் பாட்டு சங்கர் மகாதேவன் பின்னியிருந்தாலும் சரியான குத்து மெட்டு. எனக்கு பிடித்தது, சோனு நிகம் பாடியுள்ள டைடில் பாடல் 'ஹர் கடி பதல் ரஹி ஹை ரூப் ஜிந்தகி' பாடல்தான். ஆச்சர்யமான ஒரு விஷயம் ஷாருக்கானின் மிகை நடிப்பைத் தாண்டி அவரை இந்தப் படத்தில் மிகவும் ரசிக்க முடிகிறது. படம் முடியும் தருவாயில் மனதை சற்று அழுத்துகிறது ஷாருக்கானின் சில வசனங்கள்.
இரண்டாவது ஓம் சாந்தி ஓம்.
2007-ல் வெளிவந்து பாலிவுட்டில் பலரையும் ஆட்டம் காண வைத்த படம். இது சென்னையில் ரிலீஸான போது அதற்கு பெரிய கட்டவுட் வைத்து கொண்டாடினார்களாம். இந்தக் கதையும் ஒரு அடாசு கதைதான், ஹிந்தியில் ரிஷி கபூர் நடித்த கர்ஸ், தமிழில் கமல் நடித்து எனக்குள் ஒருவன் என்று வெளிவந்த அதே டப்பா கதைதான். கமல் கூட பரவாயில்லை கொஞ்சம் நஞ்சம் டான்ஸ் ஆடத் தெரியும், வெறும் சாணி மிதிக்கிற ரிஷி கபூர் நடித்த ஹிந்தி படம் தாங்க முடியாத குப்பை. இதை கலந்து கட்டி ஒரு அருமையான பொழுது போக்குப் படமாக தந்திருக்கிற ஷாருக்கானின் தைரியம், அதைவிட அதைத் தயாரித்த அவருடைய துணைவியார் கௌரி கானின் துணிச்சல் அசாத்தியம். படத்தில் எம்.ஜி.ஆர். போல காட்சிக்குக் காட்சி ஷாருக்கான் வருகிறார். கதாநாயகி புதுமுகம் தீபிகா படுகோனே. ஆம் முன்னாள் இந்திய பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேயின் மகள்தான் இவர். ஆனால் பாவம் இவர், துணி பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி படத்தில் பல காட்சிகளில் வருகிறார். மற்றபடி பேர் சொல்லும்படி ஒருவரும் இல்லாத இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் ஷாருக்கான் (ஒன்று முன் ஜென்மம், அடுத்தது புனர்ஜென்மம்) மட்டுமே ப்ரதானமாகத் தெரிகிறார்கள். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, ஷாருக் தனது நண்பனுக்கு கைத் தொலை பேசியில் பேசும் போது தனது அம்மா தயாரா என்று கேட்க அதற்கு அவர், தயார்தான் ஆனால் ரொம்ப ஓவர் ஆக்ட் பண்ணி காரியத்தை கெடுத்து விடுவார்கள் போல இருக்கு என்று சொல்ல, அதற்கு ஷாருக்கான், அதை ஒன்னும் பண்ண முடியாது அது எங்க குடும்பத்துப் ப்ராப்ளம் என்று சொல்லும் இடம் க்ளாஸ். இந்தப் படத்திலும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் ப்ரமாண்டமான படத்தை நகர்த்திச் செல்கிறார்.
மூன்றாவது - சக் தே இந்தியா (Go for it, India)
2007-ல் வெளிவந்த மற்றொரு படம். உலக கோப்பை ஹாக்கியில் பாகிஸ்தானுடன் போராடி தோற்ற இந்திய அணியின் கேப்டன் கபீர் கான் வேடத்தில் ஷாருக்கான் நிஜமாகவே நடித்துள்ள ஒரு படம். 7 வருடம் அஞ்சாத வாசம் வாழ்ந்து விட்டு, பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கு கோச்சாக வருகிறார். அவர்களை கசக்கி பிழிந்து, ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தி, அந்தப் புள்ளி டீம் ஸ்பிரிட் என்று காட்டி அவர்களை உலகக் கோப்பை வெற்றி பெறச் செய்கிறார். முடிவில் இவரை 7 வருடம் தூற்றியவர்கள் அனைவரும் வாய் ஓயாமல் பாராட்டச் செய்கிறார்.
படத்தில் 16 இளம் பெண்கள் இருந்தும் ஒரு விகல்பம் கிடையாது, ஒரு அசிங்கமான நடனம், அசிங்கமான அங்க அசைவு கிடையாது, படம் முழுவதும் ஒரு 3-4 நாள் தாடியுடன் ஷாருக்கான் வருகிறார். ஒரு சில காட்சிகளில் ரொம்ப சாதுவாக இருக்கும் அவர், மற்ற காட்சிகளில் தன்னை மிஞ்சி ஒரு ஹாக்கி வீரர் இல்லை என்பது போல வளைய வருகிறார். பயிற்சியின் போது ஒரு பெண் பந்தை யாருக்கும் தராமல் தானே எடுத்து சென்று கோல் போட்டு விட்டு குதிக்கும் போது, அவரை அழைத்து என்னது அது என்று ஒரு வார்த்தையில் மடக்கி அவர் செய்த பிழை என்ன என்று தெரியும் வரை வெளியே நிற்க வைப்பது கலக்கல்.
இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு பாடல் கிடையாது, கதாநாயகி யாரும் கிடையாது. வெத்து டைலாக் கிடையாது, முக்கியமாக, பஞ்ச் டைலாக் கிடையாது. இது போல ஒரு படம் செய்ய ஆமீர் கானைப் போல எனக்கும் தைரியம் உண்டு என்று நிரூபித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் Filmfare சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் அது மிகப் பொருத்தமானதுதான்.
53-வது Filmfare விருது வழங்கும் விழா
இதில் சிறப்பு அம்சம், ஷாருக்கானும், சயிஃப் அலிகானும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சி. ஆரம்பிக்கும் போதே சயிஃப் சொல்லி விடுகிறார், இது ஒரு கடுமையான நிகழ்ச்சி, இது மற்றவர்களைப் புண்படுத்துவதற்காகத்தான், எனவே தவறாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று. இப்போது தெரிந்திருக்கும் அவர்கள் எப்படி அநியாயம் செய்திருப்பார்கள் என்று. அவர்கள் பேச்சு கொஞ்சம் வரம்பு மீறியிருந்தாலும், எனக்கு பிடித்தது இருவருடைய அபாரமான மேடைப் பேச்சின் ஒருங்கிணைப்பு. இது போல ஒரு ஜனரஞ்சகமாக ஒரு நிகழ்ச்சியை தமிழில் தர ஒருவரும் இல்லை என்பது என் வருத்தம். சமீபத்தில் இதே போல தமிழில் ஒரு நிகழ்ச்சி மலேஷியாவில் நடந்தது அதில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தலைமையில் ஒரு நாடகம் இடையிடையே நடத்தினார்கள் அதில் ராதா ரவியும் இருந்தார். சிரிப்பை வரவழைக்க எல்லோருக்கும் கிச்சு கிச்சு மூட்டிவிட வேண்டியிருந்தது, அவ்வளவு அடாசு ரகம். இதில் கமல் ரஜனி பங்கேற்கவில்லை, காரணம் அவர்கள் அவ்வளவு பிஸி. தமிழ் நடிகர்கள் ஏன் இவ்வளவு போலியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
காந்தி
காந்தியடிகள் பற்றிய கட்டுரையை நாகுவின் பதிவில் படித்ததும் சமீபத்தில் எனது நண்பர்களுடன் நடந்த ஒரு சிறிய உரையாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்று இருக்கிறேன்.
உரையாடலில் எப்படி குஜராத்திகள் தாங்கள் ஆரம்பிக்கும் எந்த தொழிலையும் திறமையாக செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. அவர்களின், கடின உழைப்பு, விடா முயற்சி, எந்தத் தொழிலும் கேவலம் இல்லை என்ற மன நிலை, அவர்களின் 'Kill Power' என்று நான் வாதாடினேன், 'Kill Power' பற்றி விளக்கச் சொன்ன போது நான் சொன்னேன், ஒருவன் தனது மனதில், இவரால் இது முடியும், அவரால் அது முடியும் என்றால் அது என்னாலும் முடியும் என்ற ஒரு வெறி ஒவ்வொரு குஜராத்தியின் மனதிலும் ஆழ வேறூன்றி இருக்கிறது, அது 'Will Power' என்பார்கள், நான் அதை 'Kill Power' என்பேன், காரணம், அவர்களின் அந்த வெறி அத்துணை பலம் வாய்ந்தது. ஒரு சாதாரண வக்கீல், அன்னிய மண்ணில் ஒரு முறை ஒரு நிற வெறியனால், ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவர்களை தனது சொந்த மண்ணிலிருந்து தானாக வெளியில் செல்ல வைக்கிறார். அதற்கு அவர் பின்னால் அவருடைய சொந்த நாடே அணி திரண்டு செல்கிறது. அந்த குஜராத்தியர் இன்றும் நமது தேசத்தின் தந்தை என்று போற்றப் படுகிறார். இன்றும் மகாத்மா என்றால் அவர் நினைவுக்கு வருகிறாரே என்றேன்.
மீண்டும் தொடங்கிய விவாதத்திற்கு வருகிறேன். பொதுவாக நம்பப் படும் கருத்துக்களுக்கு மாறாக ஒரு கருத்தை அளிக்க வேண்டும் என்றால், எத்தனையோ கருத்துக்களை எடுத்து எழுதியிருக்கலாம். இங்கு அரசியலில் அனைவரும் சுத்தம் என்று எழுதியிருக்கலாம், அதிலும் இந்நாட்டின் தலைவரே பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான பின்பு, அனைவரும் சுத்தம் என்ற வகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தால், ஆசிரியர்கள் அதிர்ந்து போய் A+ கூட தந்திருப்பார்கள். அல்லது சீனா ஒரு ஜனநாயகக் குடியரசு என்றோ, மத்திய கிழக்கு ஆசியா நாடுகள் சமய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்று கூடி வசிக்கும் இடம் என்றோ எழுதியிருக்கலாம். என்ன ஒரு சிக்கல் அப்படி எழுதியிருந்தால், அப்படி எழுதிய மாணவர் (அ) மாணவி யார் என்று 'யாராவது' விசாரிக்க ஆரம்பித்திருப்பார்கள். காந்தியைப் பற்றி எழுதினால், யார் என்ன செய்யப் போகிறார்கள். அதோடு காந்தியை பற்றி அதிகம் தெரிந்தவர்கள், அவருடைய அஹிம்சா வழிகளைப் பற்றியும் தெரிந்தவர்கள் எனவே கண்டிப்பாக எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிந்திருக்கும்.
50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி
சட்டசபைத் தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், அவர் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாசாமி யோசனை தெரிவித்துள்ளார். இருவர் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்டம் இல்லாத போது, அதிலும் அதிக பட்ச வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடலாம் என்ற விதி முறையும் இல்லாத போது இது எப்படி சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. கள்ள ஓட்டைத் தவிர்க்க பொது விதி இல்லை, மேலும் பதிவாகும் ஓட்டுகள் அதிக பட்சம் 65% என்னும் போது இது எப்படி சாத்தியம். இந்தக் கருத்தை என்னைப் போன்ற அரசியல் அறிவு கிஞ்சித்தும் இல்லாத ஒருவர் சொன்னால், சரி, ஏதோ அறியாமையில் பிதற்றுகிறார் என்று விட்டு விடலாம், இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஒரு உயரிய பதவியில் இருக்கும் ஒருவர், அதிகம் படித்த ஒருவர் இப்படி பேசியிருக்கிறார். இது ஒரு வேளை அவருடைய மன உளைச்சலை வெளிக்கொட்டி சொன்னதோ என்னவோ, எனக்குத் தெரியவில்லை.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Monday, March 17, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 20

புத்தக விமர்சனம்

God Father
இந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.


Shall we tell the President
இந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.

இதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், "கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், "நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா? குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே? என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா? என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.

முன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, "Sir Shall We tell the President" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.

நண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.

"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.

இவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.

நான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. ....."

கமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.

அரசியல் அசிங்கம்

இந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ? இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது?

இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.


யாருக்கும் வெட்கமில்லை.
அ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்

"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது"

என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.


பித்தனின் சங்கு

முதல் சங்கு:
சங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.


இரண்டாவது சங்கு:
சங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.

மூன்றாவது சங்கு:
கவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.

பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.

'நான் காத்து வாங்கப் போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனான்
அந்த வண்ணான் என்ன ஆனான்".


இது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா? இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒரு கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.



சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!
தமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
பேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்?
**************************************************************************************
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா?
**************************************************************************************
ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்
அட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.
**************************************************************************************
அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!
கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.
ஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.
**************************************************************************************
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐ, நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.
**************************************************************************************
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Sunday, February 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 19

நடிகர்கள் கட்சி
நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். என்று பா.ம.க தலைவர் அதாவது மரம் வெட்டி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.

நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.

முதல் முடிவு சரி அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அடுத்த எம்.ஜி.ஆராக வந்துவிட்டால், நம்ம கதை கந்தலாகிவிடும் என்று இவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது முடிவும், மூன்றாவது முடிவும் தான் சூப்பர். இவரை விடமாட்டேன் என்று கெட்டியாக பிடித்திருக்கும், திருமாவளவன் சமீபத்தில் சில படங்களில் நடித்து (அல்லது வெறும வந்து போனாரோ என்னவோ, அதைப் பார்த்த துர்பாக்கியசாலிகள் சொன்னால்தான் தெரியும்) தானும் ஒரு நடிகன் என்று பறையறிவித்தாரே, அது பரவாயில்லையா? அல்லது அவரையும் கழட்டி விட்டு விடுவாரா? நடிகர்களை பட்டாளம் பட்டாளமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லையா? இதுதான் இந்த புத்தாண்டில் நான் கேட்ட மிக நல்ல அரசியல் செய்தி, அவர் சொன்னது போல் செய்தார் என்றால் (அப்படி செய்யும் பழக்கம் இல்லாதவர் அவர்), பா.ம.க வுக்கு பெரிசாக சங்கு ஊதிவிடலாம், தமிழ் நாடு உருப்பட ஒரு வழி பிறக்கும்.

கழிசடை அரசாங்கம்
ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு குஜராத் உதாரணம் என்றால், எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகம் உதாரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை பெண்கள் கடத்துகிறார்களாம், அதனால், மனம் வெந்து, நொந்து, உருகி உருகி ஒரு (அபத்தக்) கவிதையை முதல்வர் எழுதியிருக்கிறார். இது என்ன அரசாங்கமா, அல்லது வடிவேலு நடிக்கும், 23-ம் புலிகேசி படமா? ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதைச் செய்பவர்கள் யார் என்று தெரிகிறது, அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து அடுத்து அதே தவறை யாரும் செய்ய அஞ்சும்படி செய்யாமால், ஒரு கவிதை எழுதி விட்டால், அவர் ஒரு தலைவர், முதல்வர், என்னய்யா அரசாங்கம் இது, இது போதாதென்று, பாரதி பெயரையும் கவிதையில் சேர்த்து எழுதிவிட்டார். ஏன் பாரதி சொன்னாரே, 'சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' அது நினைவில் இல்லையா? ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடத்தில் தீவிபத்தில் குழந்தைகள் இறந்தால் - ஒரு கவிதை, ஒரு திருமணத்தில் தீ விபத்து அதில் பலர் இறந்தால் - ஒரு கவிதை, என்ன நடவடிக்கை என்று யாராவது கேட்டால் - 'வரியா வரியா நீயும் நானும் தீ குளிக்கலாம்' என்று பொது மக்கள் எதிரில் நிருபர்களை அநாகரீகமாக பேசலாம், இப்படி ஒரு முதல்வர், இவர் தலைமையில் ஒரு அரசாங்கம். இந்தக் கழிசடை அரசாங்கம் இனியும் தேவையா? சிந்தியுங்கள்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்
எனக்கு அமெரிக்காவின் தேர்தல் சற்று ஆச்சர்யம் கலந்த குழப்பம்தான். வீட்டுக்கு வீடு போஸ்டர் ஒட்டவில்லை, வண்ண (வன்னமா? வண்ணமா? என்பதை RTS-ல் யாராவது தீர்மானிக்கட்டும், எனக்குத் தெரிந்ததை நான் எழுதி விட்டேன், இதுக்காக பின்னூட்டம் போட்டு என் தமிழ் அறிவை(?) அசிங்கப் படுத்தாதீங்க) வண்ண சுவர் விளம்பரம் இல்லை, இரவு 12 மணி வரை முச்சந்தியில் மைக் செட் கட்டி அவன் இப்படி, இவன் இப்படி என்று ஏக வசனத்தில் லட்ச்சார்ச்சனை இல்லை. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல் இது. அதுவும் ஒரே கட்சியிலிருந்து பலர் ஒரே பதவிக்கு போட்டியிடுவார்களாம், அவர்கள் அருகருகே அமர்ந்து அடிச்சுக்காம பேசுவாங்களாம். அடப் பாவிகளா, இது அடுக்குமா, அவ்வளவு நல்லவங்களாடா நீங்கள்ளாம்!

இந்தப் ப்ரைமரி கூத்து நடந்த பிறகு யார் அடுத்த கட்சி வேட்பாளரோடு போட்டியிடலாம் என்று முடிவெடுப்பார்களாம். இந்தியாவில் கட்சித் தலைவர்தான் முதல்வர், அதே மாதிரி கட்சித் தலைவர்தான் பிரதமர். (தற்போதைய பிரதமரைத் தவிர, மேலும், இவர் எங்கே ஆட்சி செய்கிறார், வேறு ஒருவர் செய்யர ஆட்சியில் இவர் வெறும், வாய்தானே அசைக்கிறார்). இங்கு எவர் அதிகம் பிரபலமோ, எவர் அதிகம் கட்சிக்கு நிதி கொண்டுவந்தாரோ அவர் போட்டியிடுவாராம், அட போங்கப்பா, இதேல்லாம் நல்லாவா இருக்கு, கஷ்டப்பட்டு ஒருத்தர் கட்சியை ஆரம்பிப்பாராம், வேர ஒருத்தர் அதிபராகி விடுவாராம். அந்தக் கதையெல்லாம், எங்க ஊர்ல கிடையாது. சொந்தப் பிள்ளைக்கே பதவி கொடுக்காம, புதையல பூதம் காக்கரமாதிரி நாங்க பதவியைப் பிடிச்சிட்டு இருக்கோம், இங்க யாரோ ஒருத்தர் கிட்ட பதவியை கொடுப்பாங்களாம். ஆமாம், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பலரும் Democratic கட்சியின் ஆதரவாளர்களாமே, அப்படியா? அது ஏன் என்று யாராவது பின்னூட்டமிட முடியுமா? அதோடு Democratic கட்சிக்கு தமிழாக்கம் என்ன என்றும் பின்னூட்டமிட்டால் நல்லது.


ஆத்திகமா, நாத்திகமா

ஆத்திகம் நாத்திகம் ரெண்டையும் பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சமீபத்தில் சன் டீவியில் சத்யராஜின் பேட்டியில் இதை விளக்கி தனது நாத்திகப் பற்றை விளக்கினார். அவர் சொல்கிறார், எப்போது ஒருவர் கடவுள் தந்த கண்ணை நம்பாமல் கண்ணுக்கு கண்ணாடி அணிகிறாரோ அப்போதே அவர் நாத்திகவாதியாகி விட்டார். எவர் கடவுளை நம்பாமல் டாக்டரை பார்க்க போகிறாரோ அவரும் நாத்திகவாதிதான் என்கிறார். அடுத்து எவர் காலையில் பல் துலக்குகிறாரோ அவரும், எவர் குளிக்கிறாரோ அவரும், எவர் உடை உடுத்துகிறாரோ அவரும், ஏன் உலகில் யாருமே ஆத்திகவாதிகள் இல்லை, எல்லோருமே நாத்திகவாதிகள்தான் என்று சொல்வார் என்று நினைக்கிறேன். இதற்கு அவர் பெரியார்தான் தனக்கு ஆசான் என்று கூறினார். கடவுள் சிலைகளைக் கும்பிட்டால், நாம் பழமைவாதிகள், மறைந்த மனிதர்களுக்கு வைக்கப் பட்டுள்ள சிலைகளை வணங்கினால், பகுத்தறிவு. கனவில் கடவுள் தோன்றியதாக புராணங்கள் சொன்னால், அது கட்டுக்கதை, கனவில் அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் வந்ததாகச் சொல்லி மக்களை முட்டாளாக்கினால், அது பகுத்தறிவு. சத்யராஜிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய கிண்டல், கேலி, ஆனால், இந்து மதத்தை மற்றும் தாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், தைரியமாக இப்படி எல்லா மதத்தினரையும் தாக்கி அனைவரும் நாத்திகர்தான் என்று சொன்னது ரொம்ப அதிகமாக இருந்தாலும், அவர் இப்படியே பேசி வருவது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

வெத்து அன்புமணியின் மற்றுமொரு வேண்டுகோள்
ஷாருக் கான், ஆமீர் கானைப் பார்த்து அவரிடமிருந்து படைப்பாளிகளின் முக்கியத்துவம், மற்றும் அருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.

சினிமாவில் நடிகர்கள் புகை பிடித்தால் அது பார்கின்ற சிறுவர்களை பாதித்து அவர்கள் புகை பிடிப்பது அதிகரிக்கிறது, நடிகர்கள் குடிப்பது போன்ற காட்சியினால், சிறுவர்களை அது பாதித்து அவர்களும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே, ஷாருக் கானும், அமிதாப் பச்சனும், படங்களில் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். அனைத்து அதிகாரங்களும் உள்ள அரசாங்கத்தால், சிகரெட், பீடி, புகையிலை எல்லாவற்றையும் தடை செய்ய முடிந்தாலும், செய்ய மாட்டார்கள் அது அவர்கள் பாக்கெட்டை நிரப்புவது தேவை, ஏன் குறைந்த பட்சம் சாராயத்தை தடை செய்யுங்களேன், அது முடியவில்லையே, தெருவுக்கு 2-3 டாஸ்மார்க் கடை வருகிறதே அது பரவாயில்லையா? ஆமாம், சினிமாவில் வரும் வன்முறையால் சிறுவர்கள் பாதிப்படையவில்லையா? காதல் காட்சி என்ற போர்வையில் வரும் கவர்ச்சியும், அநாகரீகங்களும், பரவாயில்லையா? வசனங்களால் வரும் பாதிப்பு பரவாயில்லையா? இதையெல்லாம் தடை செய்து விடலாமா? பிறகு என்ன கருமத்துக்கு படம் எடுப்பது என்று எல்லோரும் வேறு வேலை செய்யப் போயிட்டா, பல கோடி அரசாங்கத்துக்கு வரும் வரிப்பணம் போயிடுமே பரவாயில்லையா?

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

பித்தன்.
piththanp@gmail.com

Saturday, February 16, 2008

ரிச்மண்டில் பொங்கல் விழா

பல பல்சுவை நிகழ்ச்சிகளோடு 2/16/2008 அன்று ரிச்மண்டில் நடந்த விழாவைப் பற்றிய என் பார்வை.

காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே
நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.

சார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்
சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.

நாட்டியாஞ்சலி

உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .

அசல் பொங்கல்
புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.

கும்மாங் குத்து
குத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.

ஹாரிபார்ட்டர் க்விஸ்
மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.

பெரியவர்கள் க்விஸ்
15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.

இனி எனது பொதுவான சில கருத்துக்கள்.

நிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று.
ஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு? அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
ரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை.
சங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏற்பாடு செய்யக்கூடாது? செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.
முன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும்.
அடுத்த கிறுக்கலில் சந்திக்கின்றேன்.
பித்தன்.
piththanp@gmail.com

Saturday, February 02, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 18

அருமையான தமிழக கலாச்சாரம்
தென்னிந்திய அழகிப் போட்டி 2008
இப்படி ஒரு நிகழ்ச்சி போன வாரத்திலிருந்து சன் டீவியில் வர ஆரம்பித்திருக்கிறது. விளம்பரத்தில் ஒரு குரல் "23 தேவதைகள் கலந்து கொண்டனர், பரிசு பெரும் ஒரு அதிர்ஷ்ட தேவதை யார்" என்று சொல்லும் சமயம், குறைந்தபட்ச உடைகளோடு பல தேவதைகள் நடமாடினர். இது தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழ் கலாச்சாரம் என்று சொல்லி மாரடிக்கும் தமிழக கேடுகெட்ட அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை போலிருக்கிறது.
அழகிப் போட்டிகளினால் யாருக்கு என்ன உபயோகம்? அழகிப் போட்டியில் பங்கு பெறுவதற்கும் சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் இடையே என்ன வித்தியாசம் இருக்கிறது?
நடிகை ஷ்ரியாவிற்கு கண்டனம்.
மேற் சொன்ன கூத்தை கண்டிப்பதற்கு தைரியம் இல்லாமல், தமிழக முதல்வர் இருந்த மேடையில் குறைந்த ஆடைகளுடன் இருந்தார் என்று ஷ்ரியாவிற்கு கண்டனம் செய்கின்றனர். என்னவோ அவர் நடிக்கும் எல்லாப் படங்களிலும் முழுதும் போர்த்தியபடி நடித்தது போலவும், இந்த விழாவில் மட்டும் இப்படி வந்து விட்டது போலவும் கூச்சலிடுகின்றனர். சிவாஜி படத்தில் வில்லன் ஆதி அடுத்து என்ன செய்யப் போகிறான் என்ற திகிலைவிட ஷ்ரியா அணிந்திருந்த ஆடை எப்போது முழுவதுமாக கழண்டு விழுந்துவிடுமோ என்ற திகில்தான் அதிகமாக இருந்தது.
நடிகை குஷ்புவிற்கு கண்டனம்

அடுத்து சாமி சிலைகள் இருந்த மேடையில் நடிகை குஷ்பு செருப்பு காலோடு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்று ஒரு கண்டனம். பல மதத்தினரும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி மேடைகளில் எந்த அதி புத்திசாலி, சாமி சிலைகளை கொண்டு வந்து வைத்தார் என்று தெரியவில்லை. அவரை கண்டிக்காமல் இன்று குஷ்புவை, நாளை வேறு ஒருவரை என்று திட்டுவது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை.
திருமாவளவன் - குஷ்பு மோதல்.

திருமாவளவன் மேடைக்கு வரும் சமயம் மேடையிலிருந்த குஷ்பு எழுந்து மரியாதை செய்யவில்லை என்று அதே மேடையில் அவரை தாக்கி திருமாவளவன் பேச, அவரை மதிக்காதது தவறு என்று வேறு சிலரும் அதே மேடையில் குஷ்புவை தாக்கிப் பேசி தங்கள் அசிங்கங்களை பறை சாற்றி இருக்கின்றனர். இதே கும்பல்தான் சில மாதங்களுக்கு முன்பு குஷ்புவை தாக்கி அவர் தமிழகக் கலாச்சாரத்தை அவமதித்து விட்டார் என்று கத்தினார்கள். இன்று அவர் தங்களை மதிக்கவில்லை என்று கூச்சலிடுகிறார்கள்.
ஷாருக்கான், அமிதாபிற்கு 'வெத்து' அன்புமணி கோரிக்கை:
ரஜனியும், விஜயும் தனது கோரிக்கையை அடுத்து திரைப் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து ஷாருக்கானும், அமிதாப்பும் அவ்வாறு நடிக்க வேண்டும் என்று 'வெத்து' அன்புமணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பொது மக்களுக்கு இடையூறாக மரம் வெட்டலாம், பந்த் செய்யலாம், பொதுச் சொத்துக்களை நாசம் செய்யலாம், திரைப்படங்களை வெளியிட விடாமல் திரையரங்குகளை அடித்து நொறுக்கலாம், தமிழ்நாட்டில் யார் படப் பிடிப்பு நடத்தலாம் என்று கட்டை பஞ்சாயத்து செய்யலாம், அது மட்டும் இல்லாமல் இவர்கள் எதிர்க்கவில்லை என்றால், திரைப்படங்களில் எப்படி பட்ட காட்சி வேண்டுமானாலும் வரலாம். ஆனால் புகைபிடிக்கும் காட்சி மட்டும் வரக்கூடாது.
முன்பு எப்பொழுதோ கேட்ட வேடிக்கை கதை - ஒரு ஒற்றையடிப் பாதையில் இருவர் எதிர் எதிரே வருகின்றனர். யாராவது ஒருவர் ஒதுங்கி நின்றால்தான் மற்றவர் செல்ல முடியும் என்ற நிலையில், ஒருவர் "நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை" என்று சொல்லி திமிரோடு நடக்க, மற்றவர், "நான் வழி விடுவேன்" என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார். ரஜனியும், விஜய்யும் பதில் பேசாமல் அன்புமணியின் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டதை கேட்டதும், எனக்கு இந்த கதைதான் நினைவுக்கு வந்தது.
திரைப்பட விமர்சனம்
பீமா:
இந்த விமர்சனம் வெளியாகும் போது அனேகமாக பலர் இதை திரையரங்கில் போய் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி பார்த்த துன்பப் பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். கதை: ப்ரகாஷ்ராஜை ஆதர்ஷ தலைவனாக கொண்டு அவருடைய நிழலாக வந்து, அடி, தடி செய்து, துப்பாக்கி எடுத்து யாரை வேண்டுமானாலும் 'போட்டு தள்ளி' கொஞ்சமும் நடிக்காமல் வெறும வந்து போயிருக்கிறார் விக்ரம். தொட்டுக்கொள்ள ஊறுகாயாக த்ரிஷா. இந்த டப்பா படத்தில் ரகுவரனும் வந்து கத்தியிருக்கிறார். லிங்குசாமி, முருகதாஸ் போன்ற இயக்குனர்கள் எல்லாம் முதல் படத்தோடு சரக்கு தீர்ந்து போய், நம்மையும் படுத்துவதை தடுக்க ஏதாவது சட்டம் கொண்டு வரவேண்டும்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Monday, January 14, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 17

உலகில் எந்த நாட்டிலாவது இப்படி ஒன்றை செய்ய எந்த நீதி மன்றத்திற்காவது தெரியுமா, இதை செய்து விட்டு உச்ச நீதி மன்றம் இந்தியாவில் எப்படி இயங்குகிறது? இதை கேட்ட ஒரு நாதியும் இல்லையா? நீதி செத்து விட்டதா? இதனால் ஒரு 400 வருட பாரம்பரியம், வழி வழியாக வரும் வழக்கம், ஒரு கலாச்சார அடையாளம் தடை செய்யப்பட்டு இருக்கிறதே அது யாருக்கும் உறைக்கவில்லையா?

விஷயம் இதுதான், தமிழகத்தின் அடையாளம், தமிழனுடைய வீரத்தின் அளவு கோல் என பலப் பலப் வருடங்களாக நடந்து வரும் ஜல்லிக் கட்டு இந்த வருடம் உச்ச நீதி மன்றத்தால் தடை செய்யப் பட்டிருக்கிறது. காரணம் இந்த போட்டிகளில் வாயில்லா ப்ராணிகள் சித்ரவதை செய்யப் படுகின்றன

இது கலாச்சார அடையாளம், பாரம்பரியம், வம்சா வழி வழக்கம், வீரத்தின் அளவு கோல் என்ற உதவாக்கரை சாக்குகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், வருடா வருடம் நடக்கும் இந்த கூத்தினால் பயன் பெறுவது சாலையோர வியாபாரிகள், மற்றும் மருத்துவர்கள்தான் என நினைக்கிறேன். ஒவ்வோரு வருடமும் 10 பேர் வயிறு கிழிந்தது, 5 பேர் பலி, 100-150 பேர் கூட்ட நெரிசலில் அடி பட்டு கால் உடைந்தது, கை உடைந்தது என்று வரும் செய்தியில் எண்ணிக்கைதான் மாறுகிறதே தவிர வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை.

இதற்காக தினமும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொதுஜனத்திற்கு ஒரு சில வேண்டுகோள் - தமிழனின் வீரத்தை, அடுத்த முறை தேர்தல் வரும் போது அதில் ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுத்து வெளிப் படுத்துங்கள். இந்த விஷயத்தை வைத்து, ஜல்லிக் கட்டு மாட்டை விட கேவலமாக தமிழர்களுக்கு கொம்பு சீவிவிடும் தரம் கெட்ட அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். நல்ல மருத்துவ வசதி இல்லையே என்று கவலைப் படுங்கள், மாட்டை அடக்க முயல்வதை விட்டு விட்டு, நாலு பசு மாட்டை வைத்து பால் வியாபாரம் செய்து குடும்பத்தை முன்னேற்ற முயலுங்கள்.

அடுத்ததாக ரஜனியின் குசும்புத்தனம். சமீபத்தில் சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவில் ஆன்மீகத்தில் தனக்கு இருக்கும் பிடிப்பை வெளிப்படையாக சொல்லி தமிழக முதல்வரையே கிண்டலித்திருக்கிறார். கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசீர்வாதம் நிறையவே உள்ளது என்று சொல்லியிருக்கிறார். இதைப் படிக்கும் போது, பலப் பல வருடங்களுக்கு முன்பு இதே கருணாநிதியின் வசனத்தில் வெளிவந்த மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் 'மனோகரா' திரைப்படத்தின் விமர்சனத்தில் கல்கி, இந்தப் படம் பகுத்தறிவு ஊட்டும் படமில்லை, பாரத நாட்டு கற்பு நெறியை மையமாகக் கொண்டு வெளிவந்துள்ள படம் இது, இராமபிரான் முதல் காந்தி மகான் வரையில் தங்கள் வாழ்க்கையில் கடைப் பிடித்திருக்கும் சன்மார்க்க நெறியையே "மனோகரா" படம் வற்புறுத்தி வெற்றி அடைந்திருக்கிறது என்று எழுதியிருந்தார் அது நினைவுக்கு வந்தது. ரஜனி இப்படி முதல்வரின் முன்பு அவருக்கும் கடவுளின் கருணை உண்டு என்று வெளிப்படையாகச் சொல்லி தனது தைரியத்தையும், தன் கடவுள் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த பதிவு வெளிவரும் போது, அநேகமாக கிரிக்கெட்டை விரும்பும் இந்தியர் அனைவரும் ஆஸ்த்ரேலியாவை தாக்கி, திட்டி, சாபம் கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஸ்டீவ் பக்னர் ரொம்ப மோசம் என்று அனைவரும் தாக்கி வரும் இந்த நேரத்தில் ஒரு சின்ன ஜோக் -
ஒரு பாட்ஸ்மேன் அவுட் என்று அம்பயர் அவுட் கொடுத்துவிடுகிறார்.
அந்த பாட்ஸ்மேன் அம்பயரைக் கடந்து போகும் போது, "பந்து என் பேட்டிலும் படவில்லை, காலிலும் படவில்லை, பிறகு எதற்காக அவுட் கொடுத்தீர்கள்" அதற்கு அம்பயர், "நான் அவுட் கொடுக்கவில்லை, இதெல்லாம் அவுட்ன்னு கேக்கராங்களே இது உனக்கே நியாயமா என்று ஆண்டவனைக் கேட்டேன்" என்பார். இதுதான் நிஜத்தில் நடந்தது போல இருக்கு பக்னரின் அம்பயரிங்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Monday, January 07, 2008

பித்தனின் கிறுக்கல்கள் - 16

அனைவருக்கும் எனது அன்பான கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

என்ன கொஞ்ச நாட்கள் என் தொந்திரவு இல்லாமல் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். எல்லா சந்தோஷங்களும் தாற்காலிகமானது என்பது இப்போது தெரிந்திருக்கும்.

இந்த முறை அரசியல் பற்றி பேசாமல் சமீபத்தில் நான் பார்த்த சில திரைப் படங்களைப் பற்றியும், படித்த சில புத்தகங்களைப் பற்றியும் கிறுக்கலாம் என நினைக்கிறேன்.


திரைப் பட விமர்சனம்
நான் சமீபத்தில் பார்த்த 10 படங்கள்

10. பசுபதி மே/பா. ராசக்காபாளையம்
படத்தின் நாடி விவேக்கின் நகைச்சுவை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் கூட இல்லாத போலீஸ் ஸ்டேஷன் தமிழகத்தில் இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். அதில் ஏட்டாக பணிபுரியும் அவருக்கு பசுபதி (ரஞ்சித்) மூலம் பதவி உயர்வு கிடைத்தும், எப்போதும் ஒரு சிரிப்பு போலீஸாகவே வந்து படத்தை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ரஞ்சித்தும் மற்றும் பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் படம் இருக்கிறது. கஞ்சா கருப்பு, பிதாமகனில் எப்படி இருந்தாரோ அதைவிட ரெண்டு சைசில், நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறார். இவருக்கு ஒரு பாட்டு வேற போட்டிருக்கிறார்கள். கஷ்டம்டா சாமி. லாஜிக் இல்லாமல் ஒரு அபத்தம் படம் முழுவது விரவியிருக்கிறது. தாயின் இருதய ஆப்ரேஷனுக்கு பணம் தருகிறேன் என்று ஒரு தீவிரவாத இயக்கம் சொன்னதும் அதற்கு ஒப்புக் கொள்கிறார் ரஞ்சித். இவர் போலீஸிடம் சரணடைந்ததும், அவருக்குப் பணத்தை தந்தே தீர வேண்டும் என்று அந்த தீவிரவாத இயக்கம் துரத்தி துரத்தி வருகிறது என்று கதையடிக்கிறார்கள். இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், உங்கள் தலைவிதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை.

9. மலைக்கோட்டை
எப்படியெல்லாம் படம் எடுக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இந்தப் படத்தை எடுத்து அதையும் வெற்றிகரமாக ஓட்டிவருகிறார்கள். கதை: அடிதடியில் இறங்கி, கோர்ட்டால் தினமும் திருச்சி மலைக்கோட்டை காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப் படும் கதாநாயகன். இப்படியெல்லாம் சுலபமாக விடுவார்கள் என்றால் தமிழ்நாட்டில் குற்றம் செய்யும் எல்லோரும் ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு அனுப்பும் படி கேட்கலாமே?

திருச்சியில் ப்ரியாமணியை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு ஜொள் விட்டு, காதலிக்க முயலும்போது, ப்ரியா தனது காதலன் என்று வில்லனை அறிமுகம் செய்ய அதன் பிறகு ப்ரியாமணிக்கு ஆரம்பிக்கிறது கெட்ட காலம். அதையெல்லாம் முறியடித்து, வில்லனையும் அவன் கூட்டத்தையும் காலி பண்ணி ப்ரியாவின் கையை இவர் பிடிக்கிறாரா அல்லது போலீஸ் இவரை பிடிக்கிறதா என்ற பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள் இந்த திராபை படத்தில்.


8. மருதமலை
அர்ஜுன் சட்டம் படித்துவிட்டு போலீஸில் கான்ஸ்டபிளாக சேர்ந்து தனது அடிதடி திறமையால் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, வில்லன்களைப் பந்தாடி, நடு நடுவே கதாநாயகியுடன் காதல் பாட்டு பாடி, நிறைய தடவை ஸ்லோமோஷனில் நடந்து படத்தை முடித்து வைக்கிறார். படத்தை ரசிக்கும் படி செய்வதே வடிவேலுவின் நகைச்சுவைதான். ஒரு உணவு விடுதியின் முன் ப்ளாஸ்டிக் நாற்காலியில் மாமுலுக்கு பதிலாக ஒரு தட்டு வைத்துக் கொண்டு பசியில் சாப்பாடு போடுவானா என்று அவர் பரிதாபமாக இருக்கும் காட்சியிலும், அவரை அடித்தால் தானும் பெரியாளாக வருவேன் என்று சொல்லும் ஒரு ரவுடியை அர்ஜுன் பந்தாடி விட்டு அவன் மீது கேஸ் போடுவதற்காக வடிவேலுவை அடித்தவுடன், "இதைத் தானே அவனும் சொன்னான் அதுக்கு யூ டர்ன்லாம் போட்டு என்னையும் சேர்த்து அடிச்சிட்டியே" என்று அவர் புலம்புவதும் சூப்பர்.

7. வேல்
சூர்யா முதல் முறையாக ரெட்டை வேடத்தில் நடிக்கும் படம். ரெண்டு பாத்திரங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம், ஒருவர் 2 நாள் தாடியுடன் கொஞ்ச நேரம் வருகிறார். மற்றவர் ஒரு முறுக்கிய மீசையுடன் வருகிறார். பிறகு இருவரும் அதே முறுக்கு மீசையுடன் படம் முழுவதும் வருகிறார்கள். ஒரு பாடி கதை - இருவரும் பிறந்த சில நாட்களில் பிரிந்து பிறகு காலத்தின் கட்டாயத்தால் சேர்ந்து பொது எதிரியை பந்தாடி கடைசியில் ஈ என சிரிப்பது.

சென்னையில் இருப்பவர் வாசு. சென்னையில் இருக்கும் வரை குறைவாகப் பேசுகிறார். அண்ணன் வேலு இருக்கும் ஊருக்கு வந்தவுடன், அவரைப் போல பக்கம் பக்கமாக பேசிக் கொல்கிறார். அடிக்கடி நமக்கே சந்தேகம் வந்து விடுகிறது இது விஜயகாந்த் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. இவர் இப்படி இன்னும் ரெண்டு படம் பண்ணினால் போதும், சன் டீவியில் மத்தியான சீரியலில் நடிக்க வந்து விடலாம்.

6. பொல்லாதவன்
தனுஷ் நிஜமாகவே நடித்து வெளிவந்திருக்கும் படம். அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். படத்தில் வெட்டு குத்து சர்வ சாதாரணமாக இருக்கிறது. கதை - ஆசைப் பட்டு தனுஷ் வாங்கும் ஒரு பைக் காணாமல் போக அதனால் அவர் படும் அவஸ்தைகளும், அதனோடு வரும் சண்டைகள், இடையிடையே தனுஷுக்கும் ரம்யாவுக்கும் (குத்து ரம்யா என்று யாராவது சொன்னால் அவர்களை நிஜமாகவே குத்தப் போகிறேன் என்று அவர் ஒரு பேட்டியில் சொன்னதால், நீங்கள் யாரும் அவரை குத்து ரம்யா, குத்து ரம்யா என்று சொல்லி குத்து வாங்கிக் கொள்ளாதீர்கள்) நடக்கும் காதல் (இந்தக் கண்ராவியைக் காதல் என்று சொன்னால், மன்மதனே ஐயோ ஐயோன்னு அடிச்சுப்பார்), பாடல்களில் S.P.B. மீண்டும் ஒரு முறை "எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம்" பாடலை ரீ.மிக்ஸில் பாடி பொளந்து கட்டி விட்டார். மற்றப் பாடல்களில் தனுஷ் கலர் கலராக வந்து கலக்க, ரம்யா (அதாங்க குத்து ரம்யா), பாவம் தயாரிப்பாளருக்கு ஏன் செலவு என்று கால் அங்குலத்தில் சண்ணமாக துணி என்ற ஒன்றை உடுத்தியும் உடுத்தாமலும் வந்து ஆடுகிறார். இப்படி இவை எல்லாம் கலந்து கட்டிய மசாலா சாதம் இந்தப் படம்.

ஒரு தடவை (தேவைன்னா) பார்த்து விட்டு ஜோரா கைதட்டி விட்டு போகவேண்டிய படம்.

5. சத்தம் போடாதே
முதலில் இந்தப் படம் குழந்தைகளுக்கான படமில்லை. அவர்களை வைத்துக்கொண்டு இதைப் பார்க்க முயலவேண்டாம்.

கதை: திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு முன்பு இருந்த குடிப்பழக்கத்தினால் தங்களுக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிந்ததும், குழந்தைகள் மீது இருக்கும் ஆசையால் விவாகரத்து செய்து விட்டு தனியாக இருக்கும் பத்மப்ரியாவின் மனதில் நுழைந்து சந்தோஷமாக வாழத்துவங்குகிறார் பிருத்விராஜ். இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு வில்லனாகிறார் முதல் கணவர் நித்தின் சத்யா. கரணம் தப்பினால் மரணம் என்ற கதைக் களத்தில் தனது திறமை மூலம் படத்தை நிறுத்துபவர்கள் இவர்கள் மட்டும் இல்லை, இயக்குனர் வசந்தும். இப்படிப் பட்ட கதைகளை படமாக எடுக்க வேண்டும் என்று எந்த மகானுபாவன் சொன்னானோ அவனை செமத்தியாக கவனிக்க வேண்டும். ஒரு முறை பார்க்கலாம்.
4. எவனோ ஒருவன்

மாதவன் நடித்து, தயாரித்து ஏன் வசனமும் எழுதி வெளியிட்டுள்ள படம் இது. இதன் கதை/இயக்கம் நிஷிகாந்த் காமத் என்று சொல்கிறார்கள்.

கதை - ஒரு வங்கியில் பணிபுரியும் சமுதாய அக்ரமங்களால் அதிகம் காயம் படும் ஒரு சராசரி நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வாசுதேவன் (மாதவன்). அவர், தன் மன உளைச்சளினால் விளிம்பைத்தாண்டி பல செயல்களை செய்ய ஆரம்பிக்க அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லி அதன் மூலம் சமுதாயத்தின் ஓட்டைகளை விளக்கியிருக்கிறார்கள். இது Falling Down என்ற Hollywood படத்தின் காப்பி என்றால், என் நண்பர் அதை மறுக்கிறார். அவர் சொல்லும் காரணங்கள் - ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் மைக்கல் டக்ளஸ், மாதவனைப் போல வங்கியில் பணி புரியவில்லை, தினமும் மதியம் தயிர் சாதம் சாப்பிடவில்லை, மின்ரயிலில் பயணம் செய்யவில்லை, மனைவியுடன் செர்ந்து வாழவில்லை என சரளமாக அடுக்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் எனது தோல்வியை நண்பரிடம் ஒப்புக் கொண்டு விட்டேன். மாதவன் நன்கு நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் அவரை கைது செய்ய வரும் போலீஸிடம் சாவகாசமாக, ரெயிலில் ஜன்னலோர சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு வாஞ்சையுடன் ஜன்னல் பக்க சீட்டை தடவியபடி இருப்பதும், அந்த ஒரு காட்சியில் இந்தியாவின் நடுத்தர வர்க மக்களின் அன்றாட அபூர்வங்களை கோடிட்டு கட்டியிருப்பதும் மிக மிக அருமை. கொஞ்சம் கமலின் சாயல் அவருடைய நடிப்பில் தெரிகிறது. இந்தப் படத்தை தயாரிக்க இவருக்கு இருந்த துணிச்சலைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதற்காக ஒரு முறை பார்க்கலாம்.

3. I am legend
புற்று நோய்க்கு மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து சில ஆயிரம் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கின்றனர், அதன் பின் விளைவில் அமெரிக்கா மட்டும் இல்லாமல், உலகமே பாதிக்கப்பட்டு பல கோடி மக்கள் உயிர் இழ்ந்து, சில கோடி மக்கள் இரவில் மட்டும் வெளிவந்து ரத்தத்திற்கும், உணவிற்கும் அலையும் பிசாசு கூட்டமாய் அலைகின்றனர். நியூயார்க் நகரில் தன் நாயுடன் தன்னந்தனியனாக இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தினம் தினம் சாவுடன் போரிடும் கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருக்கிறார். கதையில் இருக்கும் பல ஓட்டைகளை விட்டு விட்டு படம் பார்த்தால் ரசிக்கலாம். நியூயார்க் நகரத்தில் மனிதர்களே இல்லாமல் க்ராஃபிக்ஸ் மூலம் எடுத்திருந்தாலும், மான்ஹாட்டன் நகரத்தில் கூட்டமாக மான்கள் ஒடுவதையும், நடுவில் சிங்கம் குடும்பத்தோடு வந்து வேட்டையாடுவதையும் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

2. Mr. Brooks

கெவின் காஸ்னர், டெமி மூர், வில்லியம் ஹர்ட் நடித்து சமீபத்தில் குறுந்தகட்டில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்து அதிர்ந்து விட்டேன். கதை: கொலை செய்வதை ஒரு பழக்கமாக வைத்திருக்கும் கெவின் காஸ்னர் (Mr. Brooks) சந்தர்ப்ப வசத்தால் ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞரிடம் மாட்டிக் கொள்ள, ஆரம்பிக்கிறது சுவாரஸ்யமான கதை. இணைய தளத்தில் இந்தப் படத்தில் எங்கெல்லாம் தவறுகள் இருக்கிறது என்று விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள் அதையும் மீறி, இந்தப்படத்தில் கெவின் காஸ்னரின் நடிப்பு படத்தை மெருகூட்டியிருக்கிறது. கதை சொன்ன விதம், பல விஷயங்களை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்ட விதம் என பல விஷயங்களைச் சொல்லலாம். கண்டிப்பாக 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பார்க்கக்கூடாத படம்.

1. தாரே ஸமீன் பர் - இந்திப் படம் (மண்ணில்(அ) பூமியில் ஒரு நட்சத்திரம்).
வீட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு படம். கதை : பள்ளியில் படிப்பில் பின் தங்கியிருக்கும் ஒரு 8 வயது மாணவனை அவனுடைய பெற்றோர், தொலைவில் இருக்கும் தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுவிட படிப்பின் அவஸ்தையுடன், பெற்றோரைப் பிரிந்து இருக்கும் அவஸ்தையுடன் இருக்கும் அந்த சிறுவனின் வாழ்கையில் தென்றலாக வீசி அவனுடைய திறமைகளை அவனுக்கே அடையாளம் காட்டும் அருமையான பாத்திரத்தில் நடித்து, இந்தப் படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இந்தப் படத்தை அனுபவிக்க இந்தி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, வழக்கமான இந்திப் படங்களில் வரும் எந்தக் கெட்ட வார்த்தையும் இல்லை, சண்டை இல்லை, ரத்தம் இல்லை, துப்பாக்கி சப்தம் இல்லை, வீராவேசமான வசனங்கள் இல்லை, அசிங்கமான நடனங்கள் இல்லை, முக்கியமாக கதாநாயகி என்று யாரும் இல்லை, வெறும் யதார்த்தம், யதார்த்தம் என்று மிக மிக அற்புதமாக கதை சொல்லி மயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இப்படிப் பட்ட கதைகளை இங்கு ஹாலிவுட்டில் படமாக்கிப் பார்த்திருக்கிறேன், ஒரு இந்தியப் படம் இப்படி எடுக்கப் பட்டிருப்பதை முதல் முறை பார்ப்பதால் ஆச்சர்யம் தாங்கவில்லை. சிறுவனாக நடிக்கும் தர்ஷீல் சஃப்பாரி நடிப்பில் பிய்த்து உதறுகிறான், நடிக்கிறானா இல்லை அவனது இயல்பே அப்படியா என்று யோசிக்கும் வகையில் இருக்கிறது அவனது நடிப்பு. ஆமீர் கான் மிகத் தேர்ந்த நடிகர், தான் ஒரு மிக தேர்ந்த இயக்குனர் என்பதை இந்தப் படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.


புத்தக விமர்சனம்
கடிகை - பாலகுமாரன்.
கதை - இராஜராஜச் சோழனின் தந்தை உத்தமச் சோழரின் காலத்தில் சேர நாட்டில் இருந்த ஒரு போர் பயிற்சி பள்ளியைப் பற்றிய ஒரு கதை. இப்படிப் பட்ட பள்ளிகளை கடிகை என்று அழைக்கிறார்கள். இவர்கள் சேர நாட்டிலிருந்து பிரிந்து வந்து ஒரு தனிக் கடிகை நிறுவி வாழ்ந்து வரும் போது, தாய்க் கடிகையின் தலைவரால் துன்புறுத்தப் பட்டு, பாண்டியனிடம் அடைக்கலம் பெற்று, அவனையும் அவனது படையையும் தயார் செய்து, இராஜராஜச் சோழனின் தமையன் ஆதித்தக் கரிகாலனிடம் தோற்று, பாண்டியனையும் பலி கொடுத்து, அதன் பின் இவர்கள் என்ன ஆனார்கள் என்று விளக்கமாக சொல்லியிருப்பது இந்தக் கதை. கதை கரு மிக மிக அருமையான ஒன்று அதை இன்னமும் மெறுகேற்றியிருக்க வேண்டும்.

பாலகுமாரன் - இவருடைய கதை சொல்லும் பாணி சமூக நாவலாக இருந்தாலும் சரி, சரித்திர நாவலாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இது இவருடைய ஒரு குறை. தான் படித்த, கேட்ட, அறிந்த பல விஷயங்களை அனைவருக்கும் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து இவர் முதலில் வெளியே வர வேண்டும். உங்களில் பலர் கல்கியின் பல சரித்திர நாவல்களை படித்திருப்பீர்கள். அதில் எதிலும் கல்கி என்ற கதாசிரியரை பார்த்திருக்க முடியாது. அதற்கு அவர் கதையை முடிந்தவரை மிகைப் படுத்தாமல் எடுத்தாண்டது என்பது என் எண்ணம்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

எனது முந்தய பதிவை படித்த 2 பேர்களில் (ஒருவர் நாகு, மற்றவர் எனது துணைவியார்) நாகு இந்தியா 60 வருடங்களில் பெற்றிருக்கின்ற பல முன்னேற்றங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லியிருந்தார். அவைகளை கீழே தந்திருக்கிறேன்.


1. கல்வியில் மேன்மை - கேரளா முழுவதும், தமிழகத்தில் சில/பல மாவட்டங்கள் எனக்குத் தெரிந்து 100% லிட்டரசி அடைந்திருக்கின்றன.
2. அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள். நாமே விண்வெளிக்கலன் செலுத்தும் அளவு வந்திருக்கிறோம். ரிமோட் ஸென்ஸிங்கில் நாம் டாப்கிளாஸ்
3. ஜனநாயகம்: நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் ஜனநாயகம் தடவிக்கொண்டு இருந்தாலும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம்.
4. தகவல் தொடர்புத்துறையில் மிக வேக வளர்ச்சி.

5. பெண் கல்வி, பெண் உரிமை: இதில் நல்ல வளர்ச்சி. உலகத்தின் சிறந்த ஜனநாயகத்திலேயே இதுவரை பெண் அதிபர் இருந்தது கிடையாது. நாம் அனைவரையும் நடுங்க வைக்கும் பிரதமரில் இருந்து, முதல்வரில் இருந்து ஜனாதிபதி வரை பார்த்துவிட்டோம். 6. மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் பல சாதனைகள்.

இவை எதையும் நான் மறுக்கவில்லை. இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உலகின் பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கும் வால்மார்ட் அருகிலும், ரிச்மண்ட் நகரத்துக்குள் சென்றால் சிக்னலுக்கு சிக்னல் வீடில்லாத ஏழைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குறிப்புகளில் 1, 3, 5 விவாதத்திற்குரியது.

1. 100% படிப்பறிவு என்பது ஒரு கேள்விக்குறிதான். இது பற்றி எனது மலையாள நண்பர்களோடு ஒருமுறை விவாதித்த போது அவர்கள் சொன்னது, 100% படிப்பறிவு என்பது அந்த ஊரில் இருப்பவர்கள் கையெழுத்து போடவும், எழுத்துக் கூட்டி அவர்களது பெயரை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்கள் படித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள் என்று.

எனவே இது எனக்கு ஒரு பொருட்டில்லை.

3. ஜனநாயகம் - ஜனநாயக இந்தியாவில்தான் ராப்ரி தேவி/மாயாவதி போன்றோர் முதல்வர் ஆக முடியும், ஆனால் மொரார்ஜி போன்ற நல்ல தலைவர்கள் சரண்சிங் போன்றவர்களால் ஆட்சி இழந்து இந்தியா பாழடைய முடியும். இந்திரா போன்றோர் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்ய முடியும்,

5. ஒரு பெண், அதிபராக வருவது அவ்வளவு முக்கியமா? அது மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக்கி விடுமா? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை.

உங்கள் குறிப்புகள் 2, 4 மற்றும் 6 சொல்வது, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவத் துறை சாதனைகள். இவைகளை நான் மறுக்கவில்லை. இதனால், நான் சொன்ன எதுவும் மாறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.

முதல்வன் என்ற திரைப்படத்தில் நிருபராக வரும் அர்ஜூன், முதல்வராக நடிக்கும் ரகுவரனை பேட்டி காணும் காட்சியில் ஒரு கேள்விக்கு ரகுவரன், இப்ப நாட்டுல அவன் அவன் செல்போன், பிட்ஸான்னு அலையரான் இப்ப போய் ஏழை அது இதுன்னு சொல்றியே என்பார் அதுக்கு அர்ஜூன் "ஐயா வயத்து பசிக்கு ஒரு வேளை சோறில்லாதவங்க செல்போனையோ, பிட்ஸாவையோ யோசிக்கரது கூட இல்லைங்க என்பார்" அதுதான் எனது கருத்தும்.

ஒரு சராசரி மனிதனின் தேவை, நல்ல தண்ணீர், இருக்க ஒரு இடம், சகாய விலையில் உணவுப் பொருள்கள், நல்ல மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வி. இவைகளை தந்தாலே போதுமே, இந்தியா உலகில் தன்னிறைவு பெற்று விடுமே, அதைத் தர எந்த அரசியல்வாதியும் தயாரில்லை, அதைத் தா என்று கேட்க எந்த பொது ஜனத்திற்கும் துணிவில்லை.

கடைசியாக, பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விவாதம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி நாகு.

சற்றுமுன் பார்த்த செய்தி. தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மனித உரிமை கமிஷன் பரிந்துரைகளின் படி என்று தெரிய வந்துள்ளது.

நான் முன்பே சொன்னது போல், ஒரு மனிதனின் உயிரை எடுக்கவும் தயங்காத பயங்கர குற்றவாளிகளை காவல் துறை பிடித்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் வெளியே வந்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தொல்லை தருவது நின்றபாடில்லை. ஆனால் அவர்களுக்கு பரிந்து பேச அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக மனித உரிமை கமிஷன் இருக்கிறது.

இதைத்தான் பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று மூதோர் சொல்லி வைத்தார்கள்.

திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத் திரைப்படம் - Bridge to Terabithia
சமீபத்தில் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். சிறுவயதில் நாம் அனைவரும் விளையாடும் விளையாட்டை சற்று மிகைப் படுத்தி படமாக்கி விட்டனர்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டிலிருக்கும் கொய்யா மரம்தான் எங்களது ராஜ்ஜியம், அதில் அனைவருக்கும் சொந்தமான கிளைகள் உண்டு, மாற்றி உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான் சண்டை ஊரை கிழித்து விடும். எல்லோரும் ராஜா, ராணி, மந்திரி என பல வேடங்கள் போட்டுக் கொண்டு வாயில் வந்த வசனத்தை பேசிக் கொண்டு பசிக்கும் வரை விளையாடுவோம்.

இதேதான் இந்தப் படத்தின் கதையும், ஆனால் அதை மிக மிக நேர்த்தியாக சொல்லி, நம் அனைவரையும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வில்லன் என்று ஒருவர் தனியாக இல்லாமல் இயக்குனரே வில்லனாகியிருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

The Contract
மார்கன் ப்ரீமேன், ஜான் குசாக்கின் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படம், நல்ல பொழுது போக்குப் படம். மார்கன் ப்ரீமேன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. அவருடைய வசன உச்சரிப்பில் ஒரு கிண்டல் எப்போதும் துளிர்த்து விழுவது அருமை. அது அவருடைய பாணி, அது இந்தப் படத்தில் பளிச்சென பதிந்திருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும், மனைவியில்லாமல், மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் கணவர்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களை தடை செய்யச் சொல்லி, தாங்க முடியாத அந்த கதை இந்தப் படத்திலும் இருக்கிறது அது ஜான் குசாக் என்று சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். படத்தில் விருவிருப்பிற்கு குறையில்லை. ஒரு முறை பார்க்கலாம், ஆனால் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளோடு இதைப் பார்க்க வேண்டாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Thursday, August 30, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 14

இந்தியாவின் 60 வது சுதந்திர தினம்

60 வருடங்கள் ஓடி விட்டது இந்தியா சுதந்திரம் அடைந்து. இந்த நாளை பலர் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்தியிருந்தார்கள். இப்படி வாழ்த்துக்கள் வருவது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் இதைக் கொண்டாடும் அளவிற்கு சாதித்து இருக்கிறோமா என்ற கேள்வி என் மனதை பல வருடங்களாக குடைந்து கொண்டே இருந்தது அதை இன்று வெளிப்படுத்தி விடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில்
- குடி தண்ணீருக்கு காத்திருக்கும் வரிசை குறையவில்லை
- நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
- அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்கள் குறையவில்லை
- அரசியல் குற்றங்கள் குறையவில்லை
- ஜாதிக் கலவரங்கள் குறையவில்லை
- அடுத்த மாநிலத்திடம் குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலை மாறவில்லை
- தமிழ்நாட்டில் தைரியமாக தேசிய மொழி பயில முடியவில்லை.
- மற்ற மாநிலத்தில் தமிழர்கள் கூலி வேலையும், அதுவும் கிடைக்காதவர்கள் சிக்னலுக்கு சிக்னல் பிச்சையெடுக்கும் நிலையும் மாறவில்லை.
- போலிச் சாமியார்களை நம்பி சொத்தை இழக்கும் படித்த முட்டாள்களின் எண்ணிக்கை குறையவில்லை
- தேர்தலுக்குத் தேர்தல் தரங்கெட்டவர்களை தேர்ந்தெடுத்து விட்டு அதைப் பற்றி விரக்தியாக பேசும் பொது மக்களின் மன நிலை மாறவில்லை.
- குற்றப் பின்னனி இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம் என்ற நிலை 60 வருடங்களில் மாறி, இன்று இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் பெறும் நிலை வந்திருக்கிறது.
- அண்டை நாடுகள் இந்தியாவில் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் நிலையைத் தாராளமயமாக்கிய கேடுகெட்ட அரசியல்வாதிகளை தண்டிக்கும் வழி இன்னும் தெரியவில்லை.
- கடவுள் நம்பிக்கை பற்றி கேவலமாக பேசிவிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போட்டு வழிபாடு செய்யும் பகுத்தறிவுவாதிகளின் கூட்டங்கள் குறையவில்லை.
- பகுத்தறிவு என்பது இந்து மத எதிர்ப்பு, ப்ராமண துவேஷம் என்பதில் இருந்து மாறுவதாக தெரியவில்லை.
- 95% மார்க் எடுக்கும் முற்பட்ட வகுப்பைச் செர்ந்தவர்கள் பொறியியல் (அ) மருத்துவப் படிப்பு, ஏன் சாதாரண கணிதம் படிக்கக்கூட வழியில்லாமல் இட ஒதுக்கீட்டினால் படும் அவதி மாறவில்லை.
- அண்டை மாநிலத்துடனான ப்ரச்சனைகளை பேசிதீர்த்துக் கொள்ளாமல் நினைத்த போதெல்லாம் கடையடைப்பு, இரயில் நிறுத்தப் போராட்டம் செய்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் அராஜகம் அழியவில்லை.

ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி இன்னமும் நாம் சுதந்திரம் அடைந்த தினத்தை நினைத்து ஆனந்தப்படும் நம் மக்களின் இந்த செயல் மட்டுமே என்னை சந்தோஷப் படுத்துகிறது.


புத்தகம்:
ஆங்கிலப் புத்தகம் Dark Justice by Jack Higgins சமீபத்தில் படித்தேன். இவருடைய முந்தய புத்தகம் The Eagle Has Landed பலப் பல வருடங்களுக்கு முன்பு படித்தது. அதில் ஈர்க்கப்பட்டு, இவர் இப்பொழுது எப்படி எழுதுகிறார் என்பது தெரியாமல் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். கதை அருமையான கருவுடன் இருந்தது. அமெரிக்க அதிபரை கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது அதன் மூலம் என்ன என்பதை துப்பறிவதுதான் கதை.

ஒரு 15-18 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று பாக்கெட் நாவல் பதிப்புகள் வந்தது. அதை வெளியிட்ட அசோகன் என்ற அந்நாள் இளைஞர் ஒருவர் அதன் மூலம் மிகப் ப்ரபலமானார், அதில் எழுதியே அதிகம் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் ராஜேஷ் குமார் என்ற எழுத்தாளர். அவர் ஒரு பேட்டியில் நான் ஒரு மணி நேரம் யோசித்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதிவிடுவேன் என்று பெருமையாக சொல்லியிருந்தார். இது எனக்கு இந்த புத்தகத்தைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. Jack Higgings-ன் நிலைக்கு இந்தப் புத்தகத்தை எழுத, ஒரு அரை மணி நேரம்தான் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன நிர்பந்தமோ, இப்படி ஒரு த்ராபையாக எழுத வேண்டும் என்று என்பது தெரியவில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பதில் சன் டிவியில் வரும் ஆனந்தம் வில்லி அபிராமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்றும், கோலங்கள் தேவயாணி என்ன ஆகப் போகிறார் என்றும், அரசியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் மண்டை உடைத்து கொண்டால் தப்பே இல்லை.


உள்ளூர் விவரம்:
நமது தமிழ் சங்க வலைதளத்தில் சமீபகாலமாக அதிகம் எழுதப் படவில்லை என்று நாகு குறிப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையை அனுபவிப்பதை விட கோடையில் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக இருப்பதும் ஒரு காரணம். எனது தனிக்கட்சி பற்றி என்னிடம் நேரிடையாகவே சில முறை கேட்டிருந்தார், எனது வலைதளம் ஒரு சைளகரியத்தை உத்தேசித்தே துவங்கப் பட்டது. என்னால் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் யோசித்து விட்டு ஒரு பதிவை எழுத முடிவதில்லை. (ஹூம் அவ்வளவு திறமை இருந்தால் Jack Higgins போல பாக்கேட் நாவலே எழுதுவேனே.) என்ன சொல்ல வந்தேன்? ஒரு பதிவை எழுத ஆரம்பித்தால் முடிக்க ஏறக்குறைய 5-10 நாட்கள் ஆகிவிடுகிறது, RTS ப்ளாகில் நிறுத்தி நிறுத்தி எழுதி முடித்து வெளியிடும் போது, அது நாலாவது அல்லது ஐந்தாவது பக்கத்தில் வெளியாகிறது, பதிவு வந்திருப்பது வழக்கம் போல நாகுவையும் என்னையும் தவிர யாருக்கும் தெரிவதில்லை. மேலும் தப்பித் தவறி யாராவது எனது பதிவுகளை படித்து விட்டு எனது முந்தைய பதிவுகளை படித்து விட்டு பிறகு இவனைத் திட்டலாம் என நினைத்தால் அதை RTS ப்ளாகில் தேட மெனக்கெட வேண்டாம், சட்டென எனது ப்ளாக்கில் கிடைத்து விடும்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

நிரபராதிகள்

இந்தியாவின் தாஜ் மஹால் சமீபத்திய 7 உலக அதிசயங்கள் கருத்து கணிப்பில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்க கடை பிடிக்கப் பட்ட வழிமுறைகளின் அபத்தங்களைப் பற்றி நான் விமர்சிக்கப் போவதில்லை, மாறாக சமீபத்தில் வெளிவந்த ஒரு சில செய்திகளைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன்.

செய்தி 1:
உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி மீது பதிவாக இருந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையுடன் சேர்ந்து மாயமாக மறைந்து விட்டது. அதை மாயமாக மறைத்தவர் அம்மாநில ஆளுனர் திரு. ராஜேஸ்வர்.

யமுனை நதியின் போக்கைத் திருப்பி விட்டு, தாஜ்மஹாலுக்கு அருகில், கேளிக்கை, வர்த்தகம் நடைபெற ஒரு வணிக வளாகம் கட்டப்பட வேண்டும் என்று தனது முந்தைய ஆட்சியில் மாயாவதி முனைந்துள்ளார், இத்திட்டம் தாஜ்மஹாலுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற ஆட்சேபம் எழுந்ததால் குற்றச்சாட்டு பதிவானது.

ஸி.பி.ஐ இதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போதைய மத்திய அரசு வந்தவுடன் தெரிவித்தது. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வழக்கு நடத்த போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறியதும், உச்சநீதி மன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன்பிறகு ஸி.பி.ஐ விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில ஆளுனரின் உத்தரவை நாடியது. அவர் அப்படி வழக்கு தொடுக்க எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கிற்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார்.

செய்தி 2:
பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு ப்ரசாத் யாதவ் மீதும் அவருடைய மனைவி ராப்ரி தேவி மீதும் அளவுக்கு மீறி சொத்து குவித்ததாக கருதப்பட்ட வழக்கில் இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிக நியாயமான தீர்ப்பு என்று இருவரும் கருத்துத் தெரிவித்தனர்.

இவைகளை கேட்டவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஆ.விகடனில் வந்த ஒரு ஜோக்:

ஜட்ஜ்: முனுசாமி, வாதியின் பண்ணைக்குள் இரவில் நுழைந்து ஆடுகளைத் திருடியதாக உன் மீது சாட்டப் பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், நீ நிரபராதி என்று தீர்ப்பளித்து உன்னை விடுதலை செய்கிறேன்.

முனுசாமி: ரொம்ப நன்றிங்க அய்யா, அப்ப அந்த ஆடுகளை நானே வெச்சுக்கலாமா?

இதற்கும் மேலே சொன்ன செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருவாளர் - திருமதி:
சனிக்கிழமை தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்யம் அடிக்கடி ஏற்படும். எப்போதும் இந்நிகழ்ச்சி முடியும் தருவாயில்தான் பார்க்க நேரிடும், இதைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருந்தேன் கை கூடவில்லை.

அடிப்படையில் இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எப்படி பங்கேற்க வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. பணமா, சமூகத்தில்/சமுதாயத்தில் இதனால் ஏதும் வித்தியாசமான அங்கீகாரம் கிடைக்கிறதா, அல்லது வேறு ஏதாவதா?

புதிதான மணமக்கள் சரி, மத்திய வயதைக் கடந்தவர்களும், முதியவர்களும் கூட இந்த நிகழ்ச்சியில் எப்படி பங்கு பெற வருகிறார்கள்? முதல் சுற்றில் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை. எல்லோருக்கும் விளக்கெண்ணைய் குடித்தது போன்ற ஒரு முக பாவம், தாங்கவில்லை, வழியில் அசிங்கத்தை மிதித்து விட்டு ஒரு குழந்தை தடுமாறி நடப்பது போன்ற நடனம், கபடி ஆடுவது போல இருவரும் சுற்றி சுற்றி வந்து ஆடுகின்றனர். அடுத்த சுற்றில், கொடுக்கப் படும் ஒரு சந்தர்ப்பத்திற்குத் தேவையான வகையில் நடிக்க வேண்டும், கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் மாறி நடிக்க வேண்டும், கஷ்டம்டா சாமி.

2-3 வாரங்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றார்கள். அவர்கள் சொன்ன ஒரு தகவல், எதற்கும் வயது ஒரு தடையில்லை. எதற்காகவும் கலங்கி நிற்காதீர்கள், எதற்காகவும் வருந்தாதீர்காள் என்பது. அதெல்லாம் சரிதான், ஆனால், 65 - 70 வயது தம்பதியினரை இப்படி நாட்டியம் ஆட வைத்து நமக்கு ஆலொசனை தரச் சொல்லுவதை விட அவர்களை வெறும பேட்டி கண்டு நமக்குத் தெரிவித்திருக்கலாம்.

தமிழ் விழா 2007
இந்த பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா 2007 வட கரோலினா மாநிலத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. நமது நகரத்திலிருந்து சிலர் சென்றிருப்பதாக தலைவர் நாகு தெரிவித்தார். அப்படி நேரில் சென்று பார்த்தவர்கள் அவர்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடிந்தால் நம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

இடைத்தேர்தல் முடிவுகள்
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. காங்கிரஸ், ஆளும் கட்சியின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்தின் தேமுதிக 3-வது இடத்தில் வந்திருக்கிறது. அவரை தி.முகவும், அதிமுகவும் சற்று ஜாக்ரதையாக அணுகுவது நல்லது. அவரது வேட்பாளரால், 21000 வாக்குகள் பெற முடிந்திருக்கிறது. அது அதிமுக வை விட 9ஆயிரம்தான் குறைவு. இந்த வெற்றி அழகிரியின் வெற்றி என்று அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த வெற்றிக்கு திமுக உதவியிருந்தாலும், வெற்றி பெற்றது காங்கிரஸ் தான் என்று சொல்லி விவாதத்தை சூடாக்கியிருக்கிறார். அதே சமயம் பாமாக தலைவர் ராமதாஸ் திமுகவுடனான உறவு தேர்தல் உறவுதான் அது முடிந்து விட்டது என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இது எங்கு போய் முடியுமோ, சொந்தத் தொலைக்காட்சி இன்னமும் வராத இந்த கால கட்டத்தில், குடும்ப தொலைக்காட்சியுடன் சண்டை ஓயாத நேரத்தில், ஆட்சி கவிழ்ந்தால், மத்தியில் செல்வாக்கு சரிந்தால், என்னன்ன நடக்குமோ. அடுத்த டமாஸ் காட்சி வரப்போகுதா?
தமிழ்த் திரைப்படம்
நான் அவன் இல்லை

ஜெமினி கணேசனின் நடிப்பில் ஒரு மைல் கல்லாக இருந்த இந்தப் படத்தை மறுபடி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு படம் வெளியாகும் கால கட்டத்தைப் பொறுத்தே அதை ரசிக்க முடியும். இன்றைய நவீன கால கட்டத்தில் ஒரு கூட்டமே ஏமாறுவதாக காட்டியிருப்பதும், அதையும் தாண்டி ஒரு தொழில் துறை வல்லுனராக வரும் நமீதா (இதை நம்ப வேண்டியிருப்பது நமது தலையெழுத்து) கதாநாயகன் ஜீவனிடம் ஏமாந்த பிறகும் ஜீவன் இவரை மனதார காதலித்தார் என்று நம்பி பித்துக்குளித்தனமாக இருப்பதும் பார்த்தால், தலையில் அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது.

ஜெமினியின் நடிப்பு, சற்றும் மிகையில்லாதது, அது ஒரு தெளிந்த ஒடையைப் போல இருக்கும், ஜீவன் பாவம் தலையை ஒரு பக்கம் சாய்த்த மாதிரி இருப்பதுதான் நடிப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பக்கத் தோள்பட்டையை தூக்கி மறு பக்கத்தை சாய்த்து நடப்பது அவருடைய ஸ்டைல் போல, படம் முழுவதும் அப்படியே வருகிறார். ஜெமினியின் அப்பாவித்தனம் அவருடைய மிக பெரிய வெற்றி, ஜீவனின் நடை, பாவனை, வசன உச்சரிப்பு, எல்லாம் அவர்தான் குற்றவாளி என்பதை படம் ஆரம்பித்த உடன் தெரிவித்து விடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி அவரை கைது செய்யும் சமயம், அவரிடம், நீ 5 பெண்களை ஏமாற்றியிருக்கிறாய் என்றதும், நாமாக இருந்தால், நான் அப்படி செய்யவில்லை என்று சொல்லியிருப்போம், ஜீவன், 'நான் அவன் இல்லை' என்று டைலாக் அடிக்கிறார். அப்படியே படம் முழுக்க பேசியபடி தப்பிக்க முயற்சி செய்கிறாராம். அட போங்கப்பா என்ற ஆயாசம்தான் வருகிறது. பாடல்களில் 'ஏன் எனக்கு மயக்கம்' மட்டும் சுமார் ரகம், மற்ற பாடல் காட்சிகள் யாருமே பார்க்க முடியாத அளவு ஆபாசம் கொட்டி கிடக்கிறது. இதை நிஜமாகவே தணிக்கை செய்துதான் வெளியிட்டார்களா என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றுகிறது. இந்தப் படத்தை பார்காமல் விட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Wednesday, July 04, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

இன்னொரு புதிய கட்சி
நாட்டு மக்களுக்கு ஒரு தண்ட செய்தி. நடிகர் சரத்குமார் சொந்த கட்சி ஆரம்பிக்கிறார். இந்த கட்சி சாதி மத பேதமின்றி இருக்கும் என்றும் நாளைய தமிழகம் வளம் பெறவும், இளைஞர் சமுதாயம் வளம் பெற என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஓட்டை நம்பி ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார். இவர் விஜயகாந்த் போல இல்லாமல், உயிரை கொடுப்பேன் என்று மிரட்டி கட்சியை ஆரம்பிக்கிறார். எந்த அரசியல்வாதியும் எந்த பொது நலத்திற்காக உயிரைக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிருபிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆனால் இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் "இருப்பது ஒரு முறை சாவது ஒரு முறை, அது தமிழுக்காக செல்லட்டும்", "ரூபாய்க்கு மூனு படி அரிசி தருவோம், இல்லை எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்", "எங்கள் உடம்பில் கடைசி சொட்டு குருதியிருக்கும் வரையில் தனித் தமிழ்நாட்டிற்காக போராடுவோம்" என்ற பழைய வசனங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள்.

குடியரசுத் தலை(வி)வர்.
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்/தலைவி தேர்தல் களை கட்டியிருக்கிறது. முதன் முறையாக ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப் படும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ப்ரதீபா பாடில் என்ற முன்னால் மஹாராஷ்டிர அமைச்சர், தனது தற்போதைய ராஜஸ்தானின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு களம் இறங்கியிருக்கிறார். துக்ளக்கில் 'சோ' இது ஒரு தமாஷ் என்று சாடியிருக்கிறார். அதையும் தாண்டி இவரை பீஹாரின் முன்னால் முதல்வர் ராப்ரி தேவியோடு ஒப்பு நோக்கியிருக்கிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், இவர் போட்டியிலிருந்து தானே விலகிக் கொள்ள வேண்டும் என்று, தன் மீது நீதி மன்றத்தில் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். இவர் ஒருவர் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால், பெண் சுதந்திரம் பாதுகாக்கப் படும், பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டின் முதல் கல் நகர்த்தப்பட்டு விட்டதாகி விடும் என்று தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருடைய கூட்டணியில் இருக்கும் பா.மா.க தலைவர் இந்த பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று சாடி இருக்கிறார். இதில்

பதவி மிக உயர்ந்த பதவி, அதன் வேட்பாளராக இவர் அறிவிக்கப் படுவதற்கு இவருடைய சாதனைகள் என்ன என்பது இதுவரை தெளிவாக்கப் படவில்லை. இவர் முன்னால் அமைச்சராக இருந்தவர் என்பதுதான் என்றால், இவரை விட மேம்பட்ட முன்னாள்/இன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தியாவில் உண்டு, இவரை விட தற்போதைய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் பன்மடங்கு தகுதியானவர் என்பது என் எண்ணம். என்ன செய்வது அவருக்கு அரசியல் தெரியவில்லை. கேள்விகள் வேறு கேட்கிறார். ராமதாஸ் சொன்ன மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியவில்லை. 'சோ' சொன்ன மாதிரி ஒரு டமாஸ் நாடகம் அரங்கேற்றம் ஆகப் போகிறது.



யார் இந்த பித்தன்

கொஞ்ச நாட்களாக வெளிகாட்டாமல் இருந்த இந்த கேள்வி மீண்டும் தலை தூக்கியிருப்பதாக தலைவர் நாகு போன வாரம் தெரிவித்தார். எனது முதல் கிறுக்கல் 10/2006-ல் வந்த போது பலரும் கேட்டதாக நாகு வலைதளத்தில்
நகைச்சுவையாக குறிப்பிட்டார். எனது முதல் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். எனது எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு கால விரயம். பாவம் நல்லா எழதரவங்களையெல்லாம் இவர்தான் பித்தன்-கர பேர்ல எழுதரார்னு சொல்லி அவங்க எழுதர ஆர்வத்தை உடைச்சிடாதீங்க.

எனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னு வலையில வர்ர செய்திகளைப் படிச்சுட்டு விமர்சனம் பண்றது. விமர்சனம் பண்றதுக்கு எனக்கு எந்த பயமும் இல்லை, காரணம் நான் சொல்ற பலதும் உங்களுக்கும் ஏற்புடைய கருத்துக்கள்தான் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சபை மரியாதை கருதி உங்கள் கோபங்களை வெளியில சொல்றது இல்லை, நான் சொல்றேன். தமிழ் சங்கத்தின் வலை தளத்தில் எழுதும் பலரும் எனது நல்ல நண்பர்கள். அவங்கள்ளாம் அடச் சீ போயும் போயும் இவன் மாதிரி நாம எழுதறோம்ன்னு சொல்லிட்டாங்களேன்னு அவங்கள கோபப்பட வெச்சுடாதீங்க.

நாகு என் பங்கிற்கு ஒரு கேள்வி: பரதேசி, சண், சதங்கா, அஜாதசத்ரு, பட்டாம்பூச்சி, நீர்வைமகள், தருமி, எதிரொலி என்ற பெயர்களில் எழுதுவது யார்?

தமிழ்த் திரைப்படங்கள்

உயிர்:
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டிய கஷ்டம் வந்தது. ஸ்ரீகாந்த் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், இவரைப் போல இன்னொரு நடிகர் தமிழ்த் திரை உலகத்திற்கு வருவது ரொம்ப கஷ்டம். டைலாக் டெலிவரியாக் இருந்தாலும் சரி, நடனம், முக பாவங்கள் இவையெல்லாம் இவரிடம் இருப்பது போல யாரிடமும் இல்லை. இவருடைய முதல் படமான ரோஜாக்கூட்டத்தில் எப்படி கேணத்தனமாக 2002-ல் வந்தாரோ, அப்படியே 5 வருடங்கள் கடந்த பிறகும் இருக்கிறார். நடிப்பு என்றால் அது வெறும வந்து போவது என்று எந்த மகானுபாவன் இவருக்கு சொல்லி கொடுத்தாரோ தெரியவில்லை, அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு படத்துக்கு படம் வந்து போய் கொண்டிருக்கிறார். இவருடைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
"உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறது, உங்களுக்கு புற்றுநோய் என்று கண்டுபிடுத்திருக்கிறோம், உங்கள் உறவினருக்கு சாலை விபத்தில் பலத்த காயம், உங்களை வேலையில் இருந்து நீக்குகிறோம், உங்களை வெளிநாட்டிற்கு வேலை நிமத்தமாக அனுப்புகிறோம் என்ற பல விஷங்களுக்கு ஒரே விதமான முகபாவத்தைக் காட்டக்கூடிய அதி அற்புதமான நடிகர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டார்கள்" என்று அமரர் கல்கி சுமார் ஒரு 40 வருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகின்றன. அப்படி பட்ட நடிகர்களின் தலைவர் இந்த ஸ்ரீகாந்த்.

கதை தனது கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி. அண்ணன் சாவிற்கு காரணமாக இருக்கிறார், தன் குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார், இதற்கெல்லாம் அவர் கொடுக்கும் காரணம், நான் இறந்து போயிருந்தால், என் தங்கையை உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பீர்களே, அது போலத்தான் இது என்று சட்டம் பேசுகிறார். இதை இயக்கிய சாமியை ரோட்டில் போட்டு மிதிக்க வேண்டும் என்று வைகைப் புயல் வடிவேலு தாக்கியிருந்தார். ஒரு ப்ரபலமான நடிகர் இப்படி பேசுகிறாரே என்று யோசித்தேன், அவர் சொன்னது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. அந்த இயக்குனரை, இப்படி சில திராபை படங்களை எடுக்க விட்டால் தானே மார்கேட்டை இழந்து ரோட்டோர டீக்கடையில் வேலை செய்ய போய் விடுவார்.


சென்னை 600028
இந்தத் திரைப்படம் எஸ்.பி.பி யால் தயாரிக்கப் பட்டு, கங்கை அமரனின் மகன் வெங்கட் ப்ரபுவால் எழுதி, இயக்கப்பட்ட ஒரு லோ பட்ஜெட் படம். கதை இரு அணிகளிடையே நடக்கும், நடக்க இருக்கும் நள்ளிரவு ஒளி வெள்ள கிரிகெட் பந்தயங்கள் பற்றியது. அதில் ஒரு அணியினர் பெயர் ஷார்க்ஸ் (சுறா), இன்னொரு அணியினர் ராக்கர்ஸ். வெறும் பொழுது போக்கிற்காக வந்துள்ள படம், பாடல்களில் வாழ்கையை யோசிங்கடா மட்டும் தேறுகிறது மற்றவை மனதில் நிற்கவில்லை. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆங்கிலத்திரைப் படங்கள்
Oceans 13

படத்தில் பலர் இருந்தாலும், மனதில் நிற்பது Brad Pitt, George Clooneyயும்தான், சிறந்த நடிகர் Al Pacinoவும் இந்தப் படத்தில் இருக்கிறார் என்ற அளவில் வந்து போகிறார். எது நடைமுறையில் சாத்தியம் இல்லையோ, அதை எல்லாம் செய்து Al Pacinoவின் சூதாட்டக் விடுதியை சூறையாடுகிறார்கள். அதைச் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதன் விவரங்கள் என முன் பாதி வரை நேரம் செலவிடுகிறார்கள், பின் பாதியில் அதை முடித்து விடுகிறார்கள். திரையரங்கில் பார்க்கத் தவறினாலும், குறுந்தகட்டில் வரும்போது பார்த்தாலும் போதும்.

Live Free or Die Hard
எனக்கு மிகவும் பிடித்த, (நமது நடிகர் ஸ்ரீகாந்த் போல இல்லாமல், நிஜமாகவே) ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் Bruce Willis மீண்டும் ஒரு முறை காவல்துறை துப்பறிவாளர் John Mclaine ஆக வந்து கலக்கியிருக்கும் படம். இப்படியெல்லாம் நடக்குமா, இவர்கள் சொல்வது போல நடந்து விட்டால் நம் கதி என்ன என்று யோசிக்காமல், லாஜிக் என்ற ஒன்றை தூக்கி வீட்டில் போட்டு விட்டு வெறும் சண்டை, அதிரடி, க்ராஃபிக்ஸ் என்று பார்க்க வேண்டிய படம் இது. தமிழ்த் திரைப் படங்களில் கதாநாயகன் 20-30 பேரை பறந்து பறந்து சண்டை போடுவது சுத்த பம்மாத்து என்று எகிறும் பலர், இந்த படத்தைப் பார்ப்பது முக்கியம். இதில் Bruce F-23 ரக நவீன சண்டை விமானத்தின் குண்டு மழையில் இருந்து தப்பி, பாலத்தின் மேலிருந்து விழுந்து சின்ன சிறாய்ப்புடன் எழுந்து வில்லனைப் பந்தாடுகிறார். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் (அதாவது நாம் இருக்கும் இந்தப் பகுதியில்) உள்ள அனைத்து செல் போன்கள் மற்றும், சாதா போன்களின் இணைப்பைத் துண்டித்து விடுகிறார் வில்லன், அத்தோடு மின் இணைப்பும் கிடையாது, ஆனால் அவர் கணிணியைத் தட்டினால் ஒரே ஒரு அலுவலகத்தில் ஒரே ஒரு மின் தூக்கியில் மட்டும் மின் இணைப்பு கிடைக்கும், அவர் தெருவில் ஒரு வேனில் சென்றால் அவருக்கு மட்டும் இணைய தளம் வேலை செய்யும், அவர் யாரோடும் பேச முடியும், யாருக்கும் எந்த கட்டளையும் இட முடியும், அட போங்கப்பா, எனக்கு என் வீட்டிலிருந்து வெளியே 'டெக்'-குக்கு வந்தாலே போதும் இணைய தளம் 'ஹெ ஹெ' எனச் சிரித்து வழிகிறது.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, June 25, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

சிசேரியன் ஆப்ரேஷன் செய்த மாணவன், தப்பி ஓட்டம்.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த 15 வயது மாணவனை அவனது மருத்துவப் பெற்றோர், கின்னஸ் சாதனைக்காக சிசேரியன் ஆப்ரேஷன் செய்ய வைத்து அதை ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பித்துக்குளித்தனத்திற்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது என்பதை தெளிவாக்கியிருக்கிறார்கள். 15 வயது மாணவன், முறையான மருத்துவப் படிப்பு படிக்காதவன் கடினமான சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறான். அதை அவனது தந்தை பெருமையாக ஒரு டாக்டர்கள் சங்க கூட்டத்தில் பேசி இன்று கைதாகி சிறையில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பாலமுரளி அம்பாட்டி தான் உலகின் குறைந்த வயது மருத்துவர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பவர். அதை முறியடிக்க பாவம் ஒரு அப்பாவி பெண்ணிற்கு ப்ரசவம் பார்த்திருக்க வேண்டாம், யாராவது ஒரு தமிழக அரசியல் வாதிக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், அதுவம் இலவசம் என்று சொல்லியிருந்தால், அவர்களும், போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பார்கள். ஒரு சமூக சேவையாகவாவது இருந்திருக்கும்.

துணை ராணுவம் குவிப்பு

தேர்தல் வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறும். 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாகவும், சில வாக்குச் சாவடிகள் மிகப் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம். கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்குப் பதிவு மையத்திற்குள்ளும் போலீஸார் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே போலீஸார் செயல்படுவர். வாக்காளர்கள் வரிசையில் நிற்பதைக் கூட துணை ராணுவப் படையினர்தான் ஒழுங்குபடுத்துவார்கள். போலீஸார் அதில் தலையிட மாட்டார்கள். வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி உத்தரவிட்டால் மட்டுமே மாநில போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைய முடியும் என்றார். நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள், திருமண மண்டபங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதெல்லாம் பீகாரில் என்றால் நாமெல்லாம் அது வழக்கம்தானே என்று விட்டு விடுவோம், இது நடப்பது மதுரை மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், அதற்கு இவ்வளவு செலவு, அதைவிட கொடுமை, தமிழக முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

சிவாஜி
இந்தப் படத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி எழுதி விட்டனர். சதங்காவும் ரொம்ப நொந்து போய் எழுதியிருந்தார். இந்தப் பெயரைச் சொன்னாலேயே அடித்து விடுவார்கள் போல இருக்கிறது. நமக்கு யாரிடம் என்ன பயம், என்ன தயக்கம், அதோடு யாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம், எனவே, சிவாஜி படத்தைப் பற்றிய என் கிறுக்கல்கள்.

56 வயது இளைஞர், சிவாஜி படத்திற்கு காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட உடனே படத்தின் வினியோகஸ்தர்கள் படத்தை 50 கோடி விலை பேசி வாங்கி விட்டனர். மீதி இடங்களில் பலவற்றை நடிகரே விலை பேசி வெளியிட்டதாக செய்தி. படம் தமிழ் நாட்டில் மட்டும் 140 கோடிக்கு கடைசியாக விற்கப்பட்டிருக்கிறது.

கதை என்று ஒன்றும் ப்ரமாதமாக இல்லை, இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை சாடி, அதிகார வர்கத்தின் அடக்குமுறையை சாடி, காதல், காமெடி, சண்டை, க்ராஃபிக்ஸ் என்று விளையாடி வழக்கம் போல சங்கர் தந்திருக்கும் மற்றோரு படம்தான் சிவாஜி.

படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் தன் தோளில் சுமந்து படத்தை நகர்த்தியிருக்கிறார் ரஜனி. கதாநாயகி வரும் சாதா இடங்கள் பரவாயில்லை, பாடல் காட்சிகளில் அவரது உடை எப்போது மொத்தமாக அவிழ்ந்து விடுமோ என்று ரொம்ப பயமாகவே இருந்தது.

முத்துவிற்கு பிறகு விவேக், ரஜனியோடு நடிக்கும் படம் இது, அவருக்கு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பன்ச் டைலாக் பேசுகிறார், படம் முழுக்க ரஜனியோடு ஒட்டியபடியே வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவைகூட ரஜனி அனுமதித்ததால் வருவது போன்ற உணர்வு தோன்றுகிறது. வேறு யாருக்கும் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. கடைசியாக இந்தப் படத்திற்கு வசனம் சுஜாதா என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

இந்தப் படம் பற்றி இப்படி பேசப் படுவதற்கு என்ன காரணம், பால் குடம், ஆடு பலி, பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாவற்றிற்கும், என்ன காரணம்? ரஜனி என்ற ஒரு தனி மனிதன் தான். அவர் சொல்கிற நாளில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அன்றே தணிக்கை செய்யப்படுகிறது. அவர்கள் சொல்லும் மாற்றங்கள் செய்த பிறகு அவர் சொல்லும் நாளில் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப் படுகிறது. அவர் சொல்லும் நாளில் அவர்கள் சான்றிதழ் தருகின்றனர், அவர் சொல்லும் நாளில் படம் திரையிடப் படுகிறது. எம்.ஜி.ஆர் -க்கு பிறகு தமிழ் திரைஉலகில் ஒருவர் சொல்லும் படி எல்லாம் நடக்கிறது என்றால் அது ரஜனிக்கு மட்டும்தான்.

அதே சமயம், இந்தப் படத்தை ஒரு பொழுது போக்குக்கு என்று பார்த்து விட்டு நமது அடுத்த வேலையை கவனிக்க போயிடனும், அதை விட்டுட்டு, அந்தப் படத்தை நோண்டி நொங்கெடுக்கனும்னு புறப்பட வேண்டியதே இல்லை. இந்தப் படத்தால், இளம் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எல்லோருக்கும் கொஞ்சம் கதி கலங்கிதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் ரஜனியிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது, எதை, எந்த விகிதத்தில் தர வேண்டும் என்பது தெரிகிறது. அவருடைய அந்த கணக்கு பிடிபடுவது கடினம்தான், ஆனால் அதை தெரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்

Wednesday, May 09, 2007

தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.

முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:

அவர்கள் மேடையேறிப் பாடும் போதும் சரி, ஆடும் போது சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் நான் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம். அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.

மெல்லிசை நிகழ்ச்சி

ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.

பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.

பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.

அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார். சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.

ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.

பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.

- பித்தன்.