நேரம்

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

எனது முந்தய பதிவை படித்த 2 பேர்களில் (ஒருவர் நாகு, மற்றவர் எனது துணைவியார்) நாகு இந்தியா 60 வருடங்களில் பெற்றிருக்கின்ற பல முன்னேற்றங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லியிருந்தார். அவைகளை கீழே தந்திருக்கிறேன்.


1. கல்வியில் மேன்மை - கேரளா முழுவதும், தமிழகத்தில் சில/பல மாவட்டங்கள் எனக்குத் தெரிந்து 100% லிட்டரசி அடைந்திருக்கின்றன.
2. அறிவியல், தொழில்நுட்ப சாதனைகள். நாமே விண்வெளிக்கலன் செலுத்தும் அளவு வந்திருக்கிறோம். ரிமோட் ஸென்ஸிங்கில் நாம் டாப்கிளாஸ்
3. ஜனநாயகம்: நம்மைச் சுற்றியுள்ள நாடுகளில் ஜனநாயகம் தடவிக்கொண்டு இருந்தாலும், உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம்.
4. தகவல் தொடர்புத்துறையில் மிக வேக வளர்ச்சி.

5. பெண் கல்வி, பெண் உரிமை: இதில் நல்ல வளர்ச்சி. உலகத்தின் சிறந்த ஜனநாயகத்திலேயே இதுவரை பெண் அதிபர் இருந்தது கிடையாது. நாம் அனைவரையும் நடுங்க வைக்கும் பிரதமரில் இருந்து, முதல்வரில் இருந்து ஜனாதிபதி வரை பார்த்துவிட்டோம். 6. மருத்துவத்துறையிலும், விவசாயத் துறையிலும் பல சாதனைகள்.

இவை எதையும் நான் மறுக்கவில்லை. இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உலகின் பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கும் வால்மார்ட் அருகிலும், ரிச்மண்ட் நகரத்துக்குள் சென்றால் சிக்னலுக்கு சிக்னல் வீடில்லாத ஏழைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் குறிப்புகளில் 1, 3, 5 விவாதத்திற்குரியது.

1. 100% படிப்பறிவு என்பது ஒரு கேள்விக்குறிதான். இது பற்றி எனது மலையாள நண்பர்களோடு ஒருமுறை விவாதித்த போது அவர்கள் சொன்னது, 100% படிப்பறிவு என்பது அந்த ஊரில் இருப்பவர்கள் கையெழுத்து போடவும், எழுத்துக் கூட்டி அவர்களது பெயரை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்கள் படித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள் என்று.

எனவே இது எனக்கு ஒரு பொருட்டில்லை.

3. ஜனநாயகம் - ஜனநாயக இந்தியாவில்தான் ராப்ரி தேவி/மாயாவதி போன்றோர் முதல்வர் ஆக முடியும், ஆனால் மொரார்ஜி போன்ற நல்ல தலைவர்கள் சரண்சிங் போன்றவர்களால் ஆட்சி இழந்து இந்தியா பாழடைய முடியும். இந்திரா போன்றோர் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்ய முடியும்,

5. ஒரு பெண், அதிபராக வருவது அவ்வளவு முக்கியமா? அது மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக்கி விடுமா? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை.

உங்கள் குறிப்புகள் 2, 4 மற்றும் 6 சொல்வது, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவத் துறை சாதனைகள். இவைகளை நான் மறுக்கவில்லை. இதனால், நான் சொன்ன எதுவும் மாறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.

முதல்வன் என்ற திரைப்படத்தில் நிருபராக வரும் அர்ஜூன், முதல்வராக நடிக்கும் ரகுவரனை பேட்டி காணும் காட்சியில் ஒரு கேள்விக்கு ரகுவரன், இப்ப நாட்டுல அவன் அவன் செல்போன், பிட்ஸான்னு அலையரான் இப்ப போய் ஏழை அது இதுன்னு சொல்றியே என்பார் அதுக்கு அர்ஜூன் "ஐயா வயத்து பசிக்கு ஒரு வேளை சோறில்லாதவங்க செல்போனையோ, பிட்ஸாவையோ யோசிக்கரது கூட இல்லைங்க என்பார்" அதுதான் எனது கருத்தும்.

ஒரு சராசரி மனிதனின் தேவை, நல்ல தண்ணீர், இருக்க ஒரு இடம், சகாய விலையில் உணவுப் பொருள்கள், நல்ல மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வி. இவைகளை தந்தாலே போதுமே, இந்தியா உலகில் தன்னிறைவு பெற்று விடுமே, அதைத் தர எந்த அரசியல்வாதியும் தயாரில்லை, அதைத் தா என்று கேட்க எந்த பொது ஜனத்திற்கும் துணிவில்லை.

கடைசியாக, பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விவாதம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி நாகு.

சற்றுமுன் பார்த்த செய்தி. தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மனித உரிமை கமிஷன் பரிந்துரைகளின் படி என்று தெரிய வந்துள்ளது.

நான் முன்பே சொன்னது போல், ஒரு மனிதனின் உயிரை எடுக்கவும் தயங்காத பயங்கர குற்றவாளிகளை காவல் துறை பிடித்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் வெளியே வந்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தொல்லை தருவது நின்றபாடில்லை. ஆனால் அவர்களுக்கு பரிந்து பேச அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக மனித உரிமை கமிஷன் இருக்கிறது.

இதைத்தான் பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று மூதோர் சொல்லி வைத்தார்கள்.

திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத் திரைப்படம் - Bridge to Terabithia
சமீபத்தில் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். சிறுவயதில் நாம் அனைவரும் விளையாடும் விளையாட்டை சற்று மிகைப் படுத்தி படமாக்கி விட்டனர்.

எனது சிறுவயதில் எங்கள் வீட்டிலிருக்கும் கொய்யா மரம்தான் எங்களது ராஜ்ஜியம், அதில் அனைவருக்கும் சொந்தமான கிளைகள் உண்டு, மாற்றி உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான் சண்டை ஊரை கிழித்து விடும். எல்லோரும் ராஜா, ராணி, மந்திரி என பல வேடங்கள் போட்டுக் கொண்டு வாயில் வந்த வசனத்தை பேசிக் கொண்டு பசிக்கும் வரை விளையாடுவோம்.

இதேதான் இந்தப் படத்தின் கதையும், ஆனால் அதை மிக மிக நேர்த்தியாக சொல்லி, நம் அனைவரையும் கண்களையும், காதுகளையும் கூர்மையாக வைத்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வில்லன் என்று ஒருவர் தனியாக இல்லாமல் இயக்குனரே வில்லனாகியிருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

The Contract
மார்கன் ப்ரீமேன், ஜான் குசாக்கின் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படம், நல்ல பொழுது போக்குப் படம். மார்கன் ப்ரீமேன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. அவருடைய வசன உச்சரிப்பில் ஒரு கிண்டல் எப்போதும் துளிர்த்து விழுவது அருமை. அது அவருடைய பாணி, அது இந்தப் படத்தில் பளிச்சென பதிந்திருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும், மனைவியில்லாமல், மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் கணவர்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களை தடை செய்யச் சொல்லி, தாங்க முடியாத அந்த கதை இந்தப் படத்திலும் இருக்கிறது அது ஜான் குசாக் என்று சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். படத்தில் விருவிருப்பிற்கு குறையில்லை. ஒரு முறை பார்க்கலாம், ஆனால் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளோடு இதைப் பார்க்க வேண்டாம்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....

Thursday, August 30, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 14

இந்தியாவின் 60 வது சுதந்திர தினம்

60 வருடங்கள் ஓடி விட்டது இந்தியா சுதந்திரம் அடைந்து. இந்த நாளை பலர் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்தியிருந்தார்கள். இப்படி வாழ்த்துக்கள் வருவது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் இதைக் கொண்டாடும் அளவிற்கு சாதித்து இருக்கிறோமா என்ற கேள்வி என் மனதை பல வருடங்களாக குடைந்து கொண்டே இருந்தது அதை இன்று வெளிப்படுத்தி விடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.


சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில்
- குடி தண்ணீருக்கு காத்திருக்கும் வரிசை குறையவில்லை
- நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
- அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்கள் குறையவில்லை
- அரசியல் குற்றங்கள் குறையவில்லை
- ஜாதிக் கலவரங்கள் குறையவில்லை
- அடுத்த மாநிலத்திடம் குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலை மாறவில்லை
- தமிழ்நாட்டில் தைரியமாக தேசிய மொழி பயில முடியவில்லை.
- மற்ற மாநிலத்தில் தமிழர்கள் கூலி வேலையும், அதுவும் கிடைக்காதவர்கள் சிக்னலுக்கு சிக்னல் பிச்சையெடுக்கும் நிலையும் மாறவில்லை.
- போலிச் சாமியார்களை நம்பி சொத்தை இழக்கும் படித்த முட்டாள்களின் எண்ணிக்கை குறையவில்லை
- தேர்தலுக்குத் தேர்தல் தரங்கெட்டவர்களை தேர்ந்தெடுத்து விட்டு அதைப் பற்றி விரக்தியாக பேசும் பொது மக்களின் மன நிலை மாறவில்லை.
- குற்றப் பின்னனி இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம் என்ற நிலை 60 வருடங்களில் மாறி, இன்று இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் பெறும் நிலை வந்திருக்கிறது.
- அண்டை நாடுகள் இந்தியாவில் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் நிலையைத் தாராளமயமாக்கிய கேடுகெட்ட அரசியல்வாதிகளை தண்டிக்கும் வழி இன்னும் தெரியவில்லை.
- கடவுள் நம்பிக்கை பற்றி கேவலமாக பேசிவிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போட்டு வழிபாடு செய்யும் பகுத்தறிவுவாதிகளின் கூட்டங்கள் குறையவில்லை.
- பகுத்தறிவு என்பது இந்து மத எதிர்ப்பு, ப்ராமண துவேஷம் என்பதில் இருந்து மாறுவதாக தெரியவில்லை.
- 95% மார்க் எடுக்கும் முற்பட்ட வகுப்பைச் செர்ந்தவர்கள் பொறியியல் (அ) மருத்துவப் படிப்பு, ஏன் சாதாரண கணிதம் படிக்கக்கூட வழியில்லாமல் இட ஒதுக்கீட்டினால் படும் அவதி மாறவில்லை.
- அண்டை மாநிலத்துடனான ப்ரச்சனைகளை பேசிதீர்த்துக் கொள்ளாமல் நினைத்த போதெல்லாம் கடையடைப்பு, இரயில் நிறுத்தப் போராட்டம் செய்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் அராஜகம் அழியவில்லை.

ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி இன்னமும் நாம் சுதந்திரம் அடைந்த தினத்தை நினைத்து ஆனந்தப்படும் நம் மக்களின் இந்த செயல் மட்டுமே என்னை சந்தோஷப் படுத்துகிறது.


புத்தகம்:
ஆங்கிலப் புத்தகம் Dark Justice by Jack Higgins சமீபத்தில் படித்தேன். இவருடைய முந்தய புத்தகம் The Eagle Has Landed பலப் பல வருடங்களுக்கு முன்பு படித்தது. அதில் ஈர்க்கப்பட்டு, இவர் இப்பொழுது எப்படி எழுதுகிறார் என்பது தெரியாமல் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். கதை அருமையான கருவுடன் இருந்தது. அமெரிக்க அதிபரை கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது அதன் மூலம் என்ன என்பதை துப்பறிவதுதான் கதை.

ஒரு 15-18 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று பாக்கெட் நாவல் பதிப்புகள் வந்தது. அதை வெளியிட்ட அசோகன் என்ற அந்நாள் இளைஞர் ஒருவர் அதன் மூலம் மிகப் ப்ரபலமானார், அதில் எழுதியே அதிகம் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் ராஜேஷ் குமார் என்ற எழுத்தாளர். அவர் ஒரு பேட்டியில் நான் ஒரு மணி நேரம் யோசித்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதிவிடுவேன் என்று பெருமையாக சொல்லியிருந்தார். இது எனக்கு இந்த புத்தகத்தைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. Jack Higgings-ன் நிலைக்கு இந்தப் புத்தகத்தை எழுத, ஒரு அரை மணி நேரம்தான் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன நிர்பந்தமோ, இப்படி ஒரு த்ராபையாக எழுத வேண்டும் என்று என்பது தெரியவில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பதில் சன் டிவியில் வரும் ஆனந்தம் வில்லி அபிராமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்றும், கோலங்கள் தேவயாணி என்ன ஆகப் போகிறார் என்றும், அரசியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் மண்டை உடைத்து கொண்டால் தப்பே இல்லை.


உள்ளூர் விவரம்:
நமது தமிழ் சங்க வலைதளத்தில் சமீபகாலமாக அதிகம் எழுதப் படவில்லை என்று நாகு குறிப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையை அனுபவிப்பதை விட கோடையில் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக இருப்பதும் ஒரு காரணம். எனது தனிக்கட்சி பற்றி என்னிடம் நேரிடையாகவே சில முறை கேட்டிருந்தார், எனது வலைதளம் ஒரு சைளகரியத்தை உத்தேசித்தே துவங்கப் பட்டது. என்னால் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் யோசித்து விட்டு ஒரு பதிவை எழுத முடிவதில்லை. (ஹூம் அவ்வளவு திறமை இருந்தால் Jack Higgins போல பாக்கேட் நாவலே எழுதுவேனே.) என்ன சொல்ல வந்தேன்? ஒரு பதிவை எழுத ஆரம்பித்தால் முடிக்க ஏறக்குறைய 5-10 நாட்கள் ஆகிவிடுகிறது, RTS ப்ளாகில் நிறுத்தி நிறுத்தி எழுதி முடித்து வெளியிடும் போது, அது நாலாவது அல்லது ஐந்தாவது பக்கத்தில் வெளியாகிறது, பதிவு வந்திருப்பது வழக்கம் போல நாகுவையும் என்னையும் தவிர யாருக்கும் தெரிவதில்லை. மேலும் தப்பித் தவறி யாராவது எனது பதிவுகளை படித்து விட்டு எனது முந்தைய பதிவுகளை படித்து விட்டு பிறகு இவனைத் திட்டலாம் என நினைத்தால் அதை RTS ப்ளாகில் தேட மெனக்கெட வேண்டாம், சட்டென எனது ப்ளாக்கில் கிடைத்து விடும்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

நிரபராதிகள்

இந்தியாவின் தாஜ் மஹால் சமீபத்திய 7 உலக அதிசயங்கள் கருத்து கணிப்பில் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது.

புதிய உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்க கடை பிடிக்கப் பட்ட வழிமுறைகளின் அபத்தங்களைப் பற்றி நான் விமர்சிக்கப் போவதில்லை, மாறாக சமீபத்தில் வெளிவந்த ஒரு சில செய்திகளைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன்.

செய்தி 1:
உத்திரப் பிரதேச முதல்வர் மாயாவதி மீது பதிவாக இருந்த வழக்கு முதல் தகவல் அறிக்கையுடன் சேர்ந்து மாயமாக மறைந்து விட்டது. அதை மாயமாக மறைத்தவர் அம்மாநில ஆளுனர் திரு. ராஜேஸ்வர்.

யமுனை நதியின் போக்கைத் திருப்பி விட்டு, தாஜ்மஹாலுக்கு அருகில், கேளிக்கை, வர்த்தகம் நடைபெற ஒரு வணிக வளாகம் கட்டப்பட வேண்டும் என்று தனது முந்தைய ஆட்சியில் மாயாவதி முனைந்துள்ளார், இத்திட்டம் தாஜ்மஹாலுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும் என்ற ஆட்சேபம் எழுந்ததால் குற்றச்சாட்டு பதிவானது.

ஸி.பி.ஐ இதற்குப் போதிய ஆதாரம் இல்லை என்று தற்போதைய மத்திய அரசு வந்தவுடன் தெரிவித்தது. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வழக்கு நடத்த போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறியதும், உச்சநீதி மன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று ஸி.பி.ஐ க்கு உத்தரவிட்டது. அதன்பிறகு ஸி.பி.ஐ விசாரணை நடத்தி அவர் மீது வழக்கு பதிவு செய்ய அம்மாநில ஆளுனரின் உத்தரவை நாடியது. அவர் அப்படி வழக்கு தொடுக்க எந்த ஆதாரமும் இல்லாததால் வழக்கிற்கு அனுமதி மறுக்கப் படுகிறது என்று சொல்லி முடித்துவிட்டார்.

செய்தி 2:
பீகார் மாநில முன்னாள் முதல்வர்கள் லாலு ப்ரசாத் யாதவ் மீதும் அவருடைய மனைவி ராப்ரி தேவி மீதும் அளவுக்கு மீறி சொத்து குவித்ததாக கருதப்பட்ட வழக்கில் இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தீர்ப்பு மிக நியாயமான தீர்ப்பு என்று இருவரும் கருத்துத் தெரிவித்தனர்.

இவைகளை கேட்டவுடன் எனக்கு நினைவிற்கு வந்தது சுமார் ஒரு 20 வருடங்களுக்கு முன்பு ஆ.விகடனில் வந்த ஒரு ஜோக்:

ஜட்ஜ்: முனுசாமி, வாதியின் பண்ணைக்குள் இரவில் நுழைந்து ஆடுகளைத் திருடியதாக உன் மீது சாட்டப் பட்ட குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால், நீ நிரபராதி என்று தீர்ப்பளித்து உன்னை விடுதலை செய்கிறேன்.

முனுசாமி: ரொம்ப நன்றிங்க அய்யா, அப்ப அந்த ஆடுகளை நானே வெச்சுக்கலாமா?

இதற்கும் மேலே சொன்ன செய்திகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருவாளர் - திருமதி:
சனிக்கிழமை தோறும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் துர்பாக்யம் அடிக்கடி ஏற்படும். எப்போதும் இந்நிகழ்ச்சி முடியும் தருவாயில்தான் பார்க்க நேரிடும், இதைப் பற்றி எழுத வேண்டும் என்று பல முறை நினைத்திருந்தேன் கை கூடவில்லை.

அடிப்படையில் இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்கு எப்படி பங்கேற்க வருகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. பணமா, சமூகத்தில்/சமுதாயத்தில் இதனால் ஏதும் வித்தியாசமான அங்கீகாரம் கிடைக்கிறதா, அல்லது வேறு ஏதாவதா?

புதிதான மணமக்கள் சரி, மத்திய வயதைக் கடந்தவர்களும், முதியவர்களும் கூட இந்த நிகழ்ச்சியில் எப்படி பங்கு பெற வருகிறார்கள்? முதல் சுற்றில் திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். சகிக்கவில்லை. எல்லோருக்கும் விளக்கெண்ணைய் குடித்தது போன்ற ஒரு முக பாவம், தாங்கவில்லை, வழியில் அசிங்கத்தை மிதித்து விட்டு ஒரு குழந்தை தடுமாறி நடப்பது போன்ற நடனம், கபடி ஆடுவது போல இருவரும் சுற்றி சுற்றி வந்து ஆடுகின்றனர். அடுத்த சுற்றில், கொடுக்கப் படும் ஒரு சந்தர்ப்பத்திற்குத் தேவையான வகையில் நடிக்க வேண்டும், கணவன் மனைவியாகவும், மனைவி கணவனாகவும் மாறி நடிக்க வேண்டும், கஷ்டம்டா சாமி.

2-3 வாரங்களுக்கு முன்பு ஒரு முதிய தம்பதியினர் கலந்து கொண்டு முதல் பரிசையும் வென்றார்கள். அவர்கள் சொன்ன ஒரு தகவல், எதற்கும் வயது ஒரு தடையில்லை. எதற்காகவும் கலங்கி நிற்காதீர்கள், எதற்காகவும் வருந்தாதீர்காள் என்பது. அதெல்லாம் சரிதான், ஆனால், 65 - 70 வயது தம்பதியினரை இப்படி நாட்டியம் ஆட வைத்து நமக்கு ஆலொசனை தரச் சொல்லுவதை விட அவர்களை வெறும பேட்டி கண்டு நமக்குத் தெரிவித்திருக்கலாம்.

தமிழ் விழா 2007
இந்த பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை நடத்தும் தமிழ் விழா 2007 வட கரோலினா மாநிலத்தில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியவில்லை. நமது நகரத்திலிருந்து சிலர் சென்றிருப்பதாக தலைவர் நாகு தெரிவித்தார். அப்படி நேரில் சென்று பார்த்தவர்கள் அவர்களது அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள முடிந்தால் நம் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்.

இடைத்தேர்தல் முடிவுகள்
மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. காங்கிரஸ், ஆளும் கட்சியின் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. விஜயகாந்தின் தேமுதிக 3-வது இடத்தில் வந்திருக்கிறது. அவரை தி.முகவும், அதிமுகவும் சற்று ஜாக்ரதையாக அணுகுவது நல்லது. அவரது வேட்பாளரால், 21000 வாக்குகள் பெற முடிந்திருக்கிறது. அது அதிமுக வை விட 9ஆயிரம்தான் குறைவு. இந்த வெற்றி அழகிரியின் வெற்றி என்று அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த வெற்றிக்கு திமுக உதவியிருந்தாலும், வெற்றி பெற்றது காங்கிரஸ் தான் என்று சொல்லி விவாதத்தை சூடாக்கியிருக்கிறார். அதே சமயம் பாமாக தலைவர் ராமதாஸ் திமுகவுடனான உறவு தேர்தல் உறவுதான் அது முடிந்து விட்டது என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இது எங்கு போய் முடியுமோ, சொந்தத் தொலைக்காட்சி இன்னமும் வராத இந்த கால கட்டத்தில், குடும்ப தொலைக்காட்சியுடன் சண்டை ஓயாத நேரத்தில், ஆட்சி கவிழ்ந்தால், மத்தியில் செல்வாக்கு சரிந்தால், என்னன்ன நடக்குமோ. அடுத்த டமாஸ் காட்சி வரப்போகுதா?
தமிழ்த் திரைப்படம்
நான் அவன் இல்லை

ஜெமினி கணேசனின் நடிப்பில் ஒரு மைல் கல்லாக இருந்த இந்தப் படத்தை மறுபடி தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு படம் வெளியாகும் கால கட்டத்தைப் பொறுத்தே அதை ரசிக்க முடியும். இன்றைய நவீன கால கட்டத்தில் ஒரு கூட்டமே ஏமாறுவதாக காட்டியிருப்பதும், அதையும் தாண்டி ஒரு தொழில் துறை வல்லுனராக வரும் நமீதா (இதை நம்ப வேண்டியிருப்பது நமது தலையெழுத்து) கதாநாயகன் ஜீவனிடம் ஏமாந்த பிறகும் ஜீவன் இவரை மனதார காதலித்தார் என்று நம்பி பித்துக்குளித்தனமாக இருப்பதும் பார்த்தால், தலையில் அடிச்சுக்க ரெண்டு கை பத்தாது.

ஜெமினியின் நடிப்பு, சற்றும் மிகையில்லாதது, அது ஒரு தெளிந்த ஒடையைப் போல இருக்கும், ஜீவன் பாவம் தலையை ஒரு பக்கம் சாய்த்த மாதிரி இருப்பதுதான் நடிப்பு என்று தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பக்கத் தோள்பட்டையை தூக்கி மறு பக்கத்தை சாய்த்து நடப்பது அவருடைய ஸ்டைல் போல, படம் முழுவதும் அப்படியே வருகிறார். ஜெமினியின் அப்பாவித்தனம் அவருடைய மிக பெரிய வெற்றி, ஜீவனின் நடை, பாவனை, வசன உச்சரிப்பு, எல்லாம் அவர்தான் குற்றவாளி என்பதை படம் ஆரம்பித்த உடன் தெரிவித்து விடுகிறது.

ஒரு போலீஸ் அதிகாரி அவரை கைது செய்யும் சமயம், அவரிடம், நீ 5 பெண்களை ஏமாற்றியிருக்கிறாய் என்றதும், நாமாக இருந்தால், நான் அப்படி செய்யவில்லை என்று சொல்லியிருப்போம், ஜீவன், 'நான் அவன் இல்லை' என்று டைலாக் அடிக்கிறார். அப்படியே படம் முழுக்க பேசியபடி தப்பிக்க முயற்சி செய்கிறாராம். அட போங்கப்பா என்ற ஆயாசம்தான் வருகிறது. பாடல்களில் 'ஏன் எனக்கு மயக்கம்' மட்டும் சுமார் ரகம், மற்ற பாடல் காட்சிகள் யாருமே பார்க்க முடியாத அளவு ஆபாசம் கொட்டி கிடக்கிறது. இதை நிஜமாகவே தணிக்கை செய்துதான் வெளியிட்டார்களா என்ற கேள்வி கண்டிப்பாக தோன்றுகிறது. இந்தப் படத்தை பார்காமல் விட்டாலும் ஒன்றும் நஷ்டமில்லை.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Wednesday, July 04, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

இன்னொரு புதிய கட்சி
நாட்டு மக்களுக்கு ஒரு தண்ட செய்தி. நடிகர் சரத்குமார் சொந்த கட்சி ஆரம்பிக்கிறார். இந்த கட்சி சாதி மத பேதமின்றி இருக்கும் என்றும் நாளைய தமிழகம் வளம் பெறவும், இளைஞர் சமுதாயம் வளம் பெற என் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்லி அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் ஓட்டை நம்பி ஒரு கட்சியை ஆரம்பிக்கிறார். இவர் விஜயகாந்த் போல இல்லாமல், உயிரை கொடுப்பேன் என்று மிரட்டி கட்சியை ஆரம்பிக்கிறார். எந்த அரசியல்வாதியும் எந்த பொது நலத்திற்காக உயிரைக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிருபிப்பாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். ஆனால் இவருடைய வசனத்தைக் கேட்டு விட்டு எனக்கு 1960-65 களில் "இருப்பது ஒரு முறை சாவது ஒரு முறை, அது தமிழுக்காக செல்லட்டும்", "ரூபாய்க்கு மூனு படி அரிசி தருவோம், இல்லை எங்களை முச்சந்தியில் நிற்க வைத்து சவுக்கால் அடியுங்கள்", "எங்கள் உடம்பில் கடைசி சொட்டு குருதியிருக்கும் வரையில் தனித் தமிழ்நாட்டிற்காக போராடுவோம்" என்ற பழைய வசனங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாடாதீர்கள்.

குடியரசுத் தலை(வி)வர்.
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்/தலைவி தேர்தல் களை கட்டியிருக்கிறது. முதன் முறையாக ஒரு பெண்மணி தேர்ந்தெடுக்கப் படும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. ப்ரதீபா பாடில் என்ற முன்னால் மஹாராஷ்டிர அமைச்சர், தனது தற்போதைய ராஜஸ்தானின் ஆளுனர் பதவியை ராஜினாமா செய்து விட்டு களம் இறங்கியிருக்கிறார். துக்ளக்கில் 'சோ' இது ஒரு தமாஷ் என்று சாடியிருக்கிறார். அதையும் தாண்டி இவரை பீஹாரின் முன்னால் முதல்வர் ராப்ரி தேவியோடு ஒப்பு நோக்கியிருக்கிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் இருப்பதால், இவர் போட்டியிலிருந்து தானே விலகிக் கொள்ள வேண்டும் என்று, தன் மீது நீதி மன்றத்தில் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் செல்வி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். இவர் ஒருவர் இந்தியாவின் மிக உயர்ந்த பதவிக்கு வந்துவிட்டால், பெண் சுதந்திரம் பாதுகாக்கப் படும், பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டின் முதல் கல் நகர்த்தப்பட்டு விட்டதாகி விடும் என்று தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்திருக்கிறார். அவருடைய கூட்டணியில் இருக்கும் பா.மா.க தலைவர் இந்த பதவி வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவி இதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று சாடி இருக்கிறார். இதில்

பதவி மிக உயர்ந்த பதவி, அதன் வேட்பாளராக இவர் அறிவிக்கப் படுவதற்கு இவருடைய சாதனைகள் என்ன என்பது இதுவரை தெளிவாக்கப் படவில்லை. இவர் முன்னால் அமைச்சராக இருந்தவர் என்பதுதான் என்றால், இவரை விட மேம்பட்ட முன்னாள்/இன்னாள் அமைச்சர்கள் பலர் இந்தியாவில் உண்டு, இவரை விட தற்போதைய குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் பன்மடங்கு தகுதியானவர் என்பது என் எண்ணம். என்ன செய்வது அவருக்கு அரசியல் தெரியவில்லை. கேள்விகள் வேறு கேட்கிறார். ராமதாஸ் சொன்ன மாதிரி ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க முடியவில்லை. 'சோ' சொன்ன மாதிரி ஒரு டமாஸ் நாடகம் அரங்கேற்றம் ஆகப் போகிறது.



யார் இந்த பித்தன்

கொஞ்ச நாட்களாக வெளிகாட்டாமல் இருந்த இந்த கேள்வி மீண்டும் தலை தூக்கியிருப்பதாக தலைவர் நாகு போன வாரம் தெரிவித்தார். எனது முதல் கிறுக்கல் 10/2006-ல் வந்த போது பலரும் கேட்டதாக நாகு வலைதளத்தில்
நகைச்சுவையாக குறிப்பிட்டார். எனது முதல் பதிவில் எழுதியதைத்தான் மீண்டும் சொல்ல விரும்புகிறேன். எனது எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு கால விரயம். பாவம் நல்லா எழதரவங்களையெல்லாம் இவர்தான் பித்தன்-கர பேர்ல எழுதரார்னு சொல்லி அவங்க எழுதர ஆர்வத்தை உடைச்சிடாதீங்க.

எனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னு வலையில வர்ர செய்திகளைப் படிச்சுட்டு விமர்சனம் பண்றது. விமர்சனம் பண்றதுக்கு எனக்கு எந்த பயமும் இல்லை, காரணம் நான் சொல்ற பலதும் உங்களுக்கும் ஏற்புடைய கருத்துக்கள்தான் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் சபை மரியாதை கருதி உங்கள் கோபங்களை வெளியில சொல்றது இல்லை, நான் சொல்றேன். தமிழ் சங்கத்தின் வலை தளத்தில் எழுதும் பலரும் எனது நல்ல நண்பர்கள். அவங்கள்ளாம் அடச் சீ போயும் போயும் இவன் மாதிரி நாம எழுதறோம்ன்னு சொல்லிட்டாங்களேன்னு அவங்கள கோபப்பட வெச்சுடாதீங்க.

நாகு என் பங்கிற்கு ஒரு கேள்வி: பரதேசி, சண், சதங்கா, அஜாதசத்ரு, பட்டாம்பூச்சி, நீர்வைமகள், தருமி, எதிரொலி என்ற பெயர்களில் எழுதுவது யார்?

தமிழ்த் திரைப்படங்கள்

உயிர்:
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தை பார்க்க வேண்டிய கஷ்டம் வந்தது. ஸ்ரீகாந்த் எனக்கு ரொம்ப பிடித்த நடிகர், இவரைப் போல இன்னொரு நடிகர் தமிழ்த் திரை உலகத்திற்கு வருவது ரொம்ப கஷ்டம். டைலாக் டெலிவரியாக் இருந்தாலும் சரி, நடனம், முக பாவங்கள் இவையெல்லாம் இவரிடம் இருப்பது போல யாரிடமும் இல்லை. இவருடைய முதல் படமான ரோஜாக்கூட்டத்தில் எப்படி கேணத்தனமாக 2002-ல் வந்தாரோ, அப்படியே 5 வருடங்கள் கடந்த பிறகும் இருக்கிறார். நடிப்பு என்றால் அது வெறும வந்து போவது என்று எந்த மகானுபாவன் இவருக்கு சொல்லி கொடுத்தாரோ தெரியவில்லை, அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு படத்துக்கு படம் வந்து போய் கொண்டிருக்கிறார். இவருடைய படங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு
"உங்களுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்திருக்கிறது, உங்களுக்கு புற்றுநோய் என்று கண்டுபிடுத்திருக்கிறோம், உங்கள் உறவினருக்கு சாலை விபத்தில் பலத்த காயம், உங்களை வேலையில் இருந்து நீக்குகிறோம், உங்களை வெளிநாட்டிற்கு வேலை நிமத்தமாக அனுப்புகிறோம் என்ற பல விஷங்களுக்கு ஒரே விதமான முகபாவத்தைக் காட்டக்கூடிய அதி அற்புதமான நடிகர்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டார்கள்" என்று அமரர் கல்கி சுமார் ஒரு 40 வருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகின்றன. அப்படி பட்ட நடிகர்களின் தலைவர் இந்த ஸ்ரீகாந்த்.

கதை தனது கொழுந்தன் மீது ஆசைப்படும் அண்ணி. அண்ணன் சாவிற்கு காரணமாக இருக்கிறார், தன் குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றுகிறார், இதற்கெல்லாம் அவர் கொடுக்கும் காரணம், நான் இறந்து போயிருந்தால், என் தங்கையை உன் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பீர்களே, அது போலத்தான் இது என்று சட்டம் பேசுகிறார். இதை இயக்கிய சாமியை ரோட்டில் போட்டு மிதிக்க வேண்டும் என்று வைகைப் புயல் வடிவேலு தாக்கியிருந்தார். ஒரு ப்ரபலமான நடிகர் இப்படி பேசுகிறாரே என்று யோசித்தேன், அவர் சொன்னது தவறு என்று இப்போது தெரிந்து விட்டது. அந்த இயக்குனரை, இப்படி சில திராபை படங்களை எடுக்க விட்டால் தானே மார்கேட்டை இழந்து ரோட்டோர டீக்கடையில் வேலை செய்ய போய் விடுவார்.


சென்னை 600028
இந்தத் திரைப்படம் எஸ்.பி.பி யால் தயாரிக்கப் பட்டு, கங்கை அமரனின் மகன் வெங்கட் ப்ரபுவால் எழுதி, இயக்கப்பட்ட ஒரு லோ பட்ஜெட் படம். கதை இரு அணிகளிடையே நடக்கும், நடக்க இருக்கும் நள்ளிரவு ஒளி வெள்ள கிரிகெட் பந்தயங்கள் பற்றியது. அதில் ஒரு அணியினர் பெயர் ஷார்க்ஸ் (சுறா), இன்னொரு அணியினர் ராக்கர்ஸ். வெறும் பொழுது போக்கிற்காக வந்துள்ள படம், பாடல்களில் வாழ்கையை யோசிங்கடா மட்டும் தேறுகிறது மற்றவை மனதில் நிற்கவில்லை. ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆங்கிலத்திரைப் படங்கள்
Oceans 13

படத்தில் பலர் இருந்தாலும், மனதில் நிற்பது Brad Pitt, George Clooneyயும்தான், சிறந்த நடிகர் Al Pacinoவும் இந்தப் படத்தில் இருக்கிறார் என்ற அளவில் வந்து போகிறார். எது நடைமுறையில் சாத்தியம் இல்லையோ, அதை எல்லாம் செய்து Al Pacinoவின் சூதாட்டக் விடுதியை சூறையாடுகிறார்கள். அதைச் செய்ய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அதன் விவரங்கள் என முன் பாதி வரை நேரம் செலவிடுகிறார்கள், பின் பாதியில் அதை முடித்து விடுகிறார்கள். திரையரங்கில் பார்க்கத் தவறினாலும், குறுந்தகட்டில் வரும்போது பார்த்தாலும் போதும்.

Live Free or Die Hard
எனக்கு மிகவும் பிடித்த, (நமது நடிகர் ஸ்ரீகாந்த் போல இல்லாமல், நிஜமாகவே) ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர் Bruce Willis மீண்டும் ஒரு முறை காவல்துறை துப்பறிவாளர் John Mclaine ஆக வந்து கலக்கியிருக்கும் படம். இப்படியெல்லாம் நடக்குமா, இவர்கள் சொல்வது போல நடந்து விட்டால் நம் கதி என்ன என்று யோசிக்காமல், லாஜிக் என்ற ஒன்றை தூக்கி வீட்டில் போட்டு விட்டு வெறும் சண்டை, அதிரடி, க்ராஃபிக்ஸ் என்று பார்க்க வேண்டிய படம் இது. தமிழ்த் திரைப் படங்களில் கதாநாயகன் 20-30 பேரை பறந்து பறந்து சண்டை போடுவது சுத்த பம்மாத்து என்று எகிறும் பலர், இந்த படத்தைப் பார்ப்பது முக்கியம். இதில் Bruce F-23 ரக நவீன சண்டை விமானத்தின் குண்டு மழையில் இருந்து தப்பி, பாலத்தின் மேலிருந்து விழுந்து சின்ன சிறாய்ப்புடன் எழுந்து வில்லனைப் பந்தாடுகிறார். அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் (அதாவது நாம் இருக்கும் இந்தப் பகுதியில்) உள்ள அனைத்து செல் போன்கள் மற்றும், சாதா போன்களின் இணைப்பைத் துண்டித்து விடுகிறார் வில்லன், அத்தோடு மின் இணைப்பும் கிடையாது, ஆனால் அவர் கணிணியைத் தட்டினால் ஒரே ஒரு அலுவலகத்தில் ஒரே ஒரு மின் தூக்கியில் மட்டும் மின் இணைப்பு கிடைக்கும், அவர் தெருவில் ஒரு வேனில் சென்றால் அவருக்கு மட்டும் இணைய தளம் வேலை செய்யும், அவர் யாரோடும் பேச முடியும், யாருக்கும் எந்த கட்டளையும் இட முடியும், அட போங்கப்பா, எனக்கு என் வீட்டிலிருந்து வெளியே 'டெக்'-குக்கு வந்தாலே போதும் இணைய தளம் 'ஹெ ஹெ' எனச் சிரித்து வழிகிறது.


-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Monday, June 25, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

சிசேரியன் ஆப்ரேஷன் செய்த மாணவன், தப்பி ஓட்டம்.

திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த 15 வயது மாணவனை அவனது மருத்துவப் பெற்றோர், கின்னஸ் சாதனைக்காக சிசேரியன் ஆப்ரேஷன் செய்ய வைத்து அதை ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பித்துக்குளித்தனத்திற்கு என்று எந்த வரைமுறையும் கிடையாது என்பதை தெளிவாக்கியிருக்கிறார்கள். 15 வயது மாணவன், முறையான மருத்துவப் படிப்பு படிக்காதவன் கடினமான சிசேரியன் அறுவை சிகிச்சை செய்திருக்கிறான். அதை அவனது தந்தை பெருமையாக ஒரு டாக்டர்கள் சங்க கூட்டத்தில் பேசி இன்று கைதாகி சிறையில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பாலமுரளி அம்பாட்டி தான் உலகின் குறைந்த வயது மருத்துவர் என்ற சாதனையை நிகழ்த்தியிருப்பவர். அதை முறியடிக்க பாவம் ஒரு அப்பாவி பெண்ணிற்கு ப்ரசவம் பார்த்திருக்க வேண்டாம், யாராவது ஒரு தமிழக அரசியல் வாதிக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கலாம், அதுவம் இலவசம் என்று சொல்லியிருந்தால், அவர்களும், போட்டி போட்டுக் கொண்டு வந்திருப்பார்கள். ஒரு சமூக சேவையாகவாவது இருந்திருக்கும்.

துணை ராணுவம் குவிப்பு

தேர்தல் வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறும். 216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாகவும், சில வாக்குச் சாவடிகள் மிகப் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர்கள் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம். கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்குப் பதிவு மையத்திற்குள்ளும் போலீஸார் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே போலீஸார் செயல்படுவர். வாக்காளர்கள் வரிசையில் நிற்பதைக் கூட துணை ராணுவப் படையினர்தான் ஒழுங்குபடுத்துவார்கள். போலீஸார் அதில் தலையிட மாட்டார்கள். வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி உத்தரவிட்டால் மட்டுமே மாநில போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைய முடியும் என்றார். நகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள், திருமண மண்டபங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதெல்லாம் பீகாரில் என்றால் நாமெல்லாம் அது வழக்கம்தானே என்று விட்டு விடுவோம், இது நடப்பது மதுரை மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், அதற்கு இவ்வளவு செலவு, அதைவிட கொடுமை, தமிழக முதல்வர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதாக அறிக்கைக்கு மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

சிவாஜி
இந்தப் படத்தைப் பற்றி பலரும் பலவிதமாக பேசி எழுதி விட்டனர். சதங்காவும் ரொம்ப நொந்து போய் எழுதியிருந்தார். இந்தப் பெயரைச் சொன்னாலேயே அடித்து விடுவார்கள் போல இருக்கிறது. நமக்கு யாரிடம் என்ன பயம், என்ன தயக்கம், அதோடு யாராவது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்றால் முதலில் அதைத்தான் செய்வோம், எனவே, சிவாஜி படத்தைப் பற்றிய என் கிறுக்கல்கள்.

56 வயது இளைஞர், சிவாஜி படத்திற்கு காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட உடனே படத்தின் வினியோகஸ்தர்கள் படத்தை 50 கோடி விலை பேசி வாங்கி விட்டனர். மீதி இடங்களில் பலவற்றை நடிகரே விலை பேசி வெளியிட்டதாக செய்தி. படம் தமிழ் நாட்டில் மட்டும் 140 கோடிக்கு கடைசியாக விற்கப்பட்டிருக்கிறது.

கதை என்று ஒன்றும் ப்ரமாதமாக இல்லை, இந்தியாவில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை சாடி, அதிகார வர்கத்தின் அடக்குமுறையை சாடி, காதல், காமெடி, சண்டை, க்ராஃபிக்ஸ் என்று விளையாடி வழக்கம் போல சங்கர் தந்திருக்கும் மற்றோரு படம்தான் சிவாஜி.

படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் தன் தோளில் சுமந்து படத்தை நகர்த்தியிருக்கிறார் ரஜனி. கதாநாயகி வரும் சாதா இடங்கள் பரவாயில்லை, பாடல் காட்சிகளில் அவரது உடை எப்போது மொத்தமாக அவிழ்ந்து விடுமோ என்று ரொம்ப பயமாகவே இருந்தது.

முத்துவிற்கு பிறகு விவேக், ரஜனியோடு நடிக்கும் படம் இது, அவருக்கு நிறைய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. பன்ச் டைலாக் பேசுகிறார், படம் முழுக்க ரஜனியோடு ஒட்டியபடியே வருகிறார். ஆனால், அவருடைய நகைச்சுவைகூட ரஜனி அனுமதித்ததால் வருவது போன்ற உணர்வு தோன்றுகிறது. வேறு யாருக்கும் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை. கடைசியாக இந்தப் படத்திற்கு வசனம் சுஜாதா என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

இந்தப் படம் பற்றி இப்படி பேசப் படுவதற்கு என்ன காரணம், பால் குடம், ஆடு பலி, பால் அபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாவற்றிற்கும், என்ன காரணம்? ரஜனி என்ற ஒரு தனி மனிதன் தான். அவர் சொல்கிற நாளில் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு, அன்றே தணிக்கை செய்யப்படுகிறது. அவர்கள் சொல்லும் மாற்றங்கள் செய்த பிறகு அவர் சொல்லும் நாளில் மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப் படுகிறது. அவர் சொல்லும் நாளில் அவர்கள் சான்றிதழ் தருகின்றனர், அவர் சொல்லும் நாளில் படம் திரையிடப் படுகிறது. எம்.ஜி.ஆர் -க்கு பிறகு தமிழ் திரைஉலகில் ஒருவர் சொல்லும் படி எல்லாம் நடக்கிறது என்றால் அது ரஜனிக்கு மட்டும்தான்.

அதே சமயம், இந்தப் படத்தை ஒரு பொழுது போக்குக்கு என்று பார்த்து விட்டு நமது அடுத்த வேலையை கவனிக்க போயிடனும், அதை விட்டுட்டு, அந்தப் படத்தை நோண்டி நொங்கெடுக்கனும்னு புறப்பட வேண்டியதே இல்லை. இந்தப் படத்தால், இளம் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா எல்லோருக்கும் கொஞ்சம் கதி கலங்கிதான் இருக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் ரஜனியிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். தன்னால் எது முடியும் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது, எதை, எந்த விகிதத்தில் தர வேண்டும் என்பது தெரிகிறது. அவருடைய அந்த கணக்கு பிடிபடுவது கடினம்தான், ஆனால் அதை தெரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றிதான்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்

Wednesday, May 09, 2007

தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.

குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.

முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:

அவர்கள் மேடையேறிப் பாடும் போதும் சரி, ஆடும் போது சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் நான் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம். அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.

மெல்லிசை நிகழ்ச்சி

ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.

பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.

பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.

நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.

அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார். சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.

ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.

ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.

பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.

- பித்தன்.

Saturday, April 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 10

காலம் கலிகாலம்

நீதித்துறை எல்லை தாண்டக் கூடாது
நாடாளுமன்றம், அரசின் நிர்வாக செயல்பாடுகளில் நீதிமன்றங்கள் குறுக்கிடக் கூடாது. தனது எல்லையிலிருந்து நீதித்துறை விலகக் கூடாது என ஒருவர் எச்சரித்துள்ளார். டெல்லியில், மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அவர் - அரசியல் சட்டத்தின் முக்கியத் தூண்களாக நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை உள்ளன. இதில் ஒரு அமைப்பு இன்னொன்றின் செயல்பாடுகளில் தலையிடுவது சரியாக இருக்காது. ஒவ்வொரு அமைப்புக்கும் சில எல்லைகள் உள்ளன, கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றிலிருந்து மீறி நடக்க யாரும் முயற்சிக்கக் கூடாது. குறிப்பாக நாடாளுமன்றம், நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் குறுக்கிட நீதித்துறை முயலக் கூடாது. நீதித்துறை தனது எல்லையைத் தாண்டி போகக் கூடாது. அரசியல் சட்டத்தை மதித்து அதை நிறைவேற்ற வேண்டிய முக்கியக் கடமை நீதித்துறைக்கு உள்ளது. மூன்று அமைப்புகளும் தங்களது எல்லையை மீறி நடந்து கொண்டால் அது மக்களுக்கு விரோதமானதாக மாறி விடும். ஒன்றுக்கொன்று நல்லிணக்கத்துடன், தங்களது அதிகார வரம்புக்குள் செயல்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

இப்படி சொன்னது தமிழ்நாட்டில் நீதிபதிகளை மிரட்டும் மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ, அவருடைய கருத்தை ஆதரிக்கும் தமிழக முதல்வரோ இல்லை. இப்படி பேசியிருப்பது இந்தியாவில் அதிகம் படிததவர், இந்திய வங்கிகளுக்கெல்லாம் தாயகமான ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரும், இந்தியாவின் தற்போதைய பிரதமருமான டாக்டர். மன்மோகன் சிங்.

'இது நம்ம ஆளு' என்ற பாக்யராஜின் படத்தில் சங்கீதம் நன்கு தெரிந்த!!! ஷோபனாவிற்கும், அது சிகப்பா கருப்பா என்றுகூடத் தெரியாத பாக்யராஜுக்கும் நடக்கும் போட்டியில் பாக்யராஜ் வெற்றி பெற்றவுடன், போட்டியின் தலைவர் (ஷோபனாவின் தாத்தா) சொல்லும் ஒரு வசனம்:

'பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் எனறு சொல்வார்கள், இங்கு நாரோடு சேர்ந்த பூவும் நாறிவிட்டது' என்று. பிரதமர் இப்படி பேசியதை சூர்ய தொலைக்காடசியில் பார்த்தவுடன், அதுதான் ஞாபகத்திற்கு வந்தது.

இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதே மேடையில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட நீதித்துறைக்கு அதிகாரம் உண்டு என்று வலியுறுத்திப் பேசி, நீதித்துறைக்கு சுந்திரமாக செயல்படும் அதிகாரம் உள்ளது. அதேபோல நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்யும் அதிகாரமும் நீதித்துறைக்கு உண்டு. நீதித்துறை எடுக்கும் சில நடவடிக்கைகள், நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையே பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இது இயற்கையானது என்று சரியான பதிலடி தந்துள்ளார், ஆனால், மன்மோகன் சிங் போன்றவர்களே இப்படி பேச ஆரம்பித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.


எளியோரை வலியோர் வாட்டப் போகின்றனர்

இதை எப்படி இந்திய குடி மக்களாகிய நாம் தாங்கிக் கொள்ளப் போகிறோம்? இதை தவிர்க்க இந்திய அரசு ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை. நம் நாடு இன்று இருக்கும் நிலையில் இது தேவையா? இதனால் ஏற்பட இருக்கும் விளைவுகளை நம் நாடு தாங்குமா? திருவள்ளுவர் நட்பியல் - பகைமாட்சியில் இப்படி பாடுகிறார்.

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை

மெலியோரை விடுத்து வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும். இப்படி சொன்ன வள்ளுவர் வலியறிதல் அதிகாரத்தில் இப்படி பாடுகிறார்.

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

அதாவது, செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாரருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபடவேண்டும். தோல்வி நிச்சயம், இழப்பு நிச்சயம் என்று கண்கூடாக தெரிந்த பிறகு இப்படி ஒரு பெரிய தற்கொலைக்கு இந்திய அரசு எப்படி ஒப்புக் கொண்டது? இதன் காரணமாக நம் நாட்டு வெட்டி ஆபீசர்களுக்கு அடுத்த வேலை வந்து விட்டது. மாரியம்மன் கோயில் தீ மிதிக்க வேண்டும், மண் சோறு சாப்பிட வேண்டும், அஸ்வமேத யாகம் செய்ய வேண்டும், அப்புறம் நாம் தோற்று விட்டால், தோற்ற வீரர்கள்(?) வீட்டை இடிக்க மண் வெட்டி, கடப்பாறை வாங்க வேண்டும், எவ்வளவு பணச்செலவு, கால விரயம்.


அட போங்கப்பா இவன் இப்படி ஒரு விஷயமும் சொல்லாம ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுக்கரானேன்னு திட்டரதுக்கு முன்னாடி சொல்லிடறேன். இந்திய கிரிகெட் அணி நம்மை விட பலம் வாய்ந்த, தென் ஆப்ரிக்காவையே தோற்கடித்த வங்கதேச அணியுடன் 3 ஒரு நாள் ஆட்டங்களும், 2 - 5 நாட்கள் ஆட்டங்களும் ஆட அடுத்த மாதம் அவர்கள் நாட்டிற்கு போகிறார்கள். அதைப் பற்றிதான் கவலைப் பட்டு எழுதி விட்டேன். தயவு செய்து கோவிக்காமல் எல்லோரும் உங்கள் வீட்டில், நீங்கள் வணங்கும் சாமிக்கு ஒரு ரூபாய் (அ) டாலர் முடிந்து வைக்கவும். எந்த சாமி அருள் தரும் என்று தெரியாததால், எந்த சாமியையும் விட்டுடாதீங்க.

இந்த வள்ளுவரை நினைத்தால் ரொம்ப கோபம் கோபமா வருது, நட்பியல் - பகைமாட்சியில் இப்படியும் பாடியுள்ளார்.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.

போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலி புரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும், இது இந்திய அணிக்குன்னு அவர் பாடினதா நீங்க நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை. அது சரி, நாம அதெல்லாம் எங்க படிக்கப் போறோம், அப்படி படிச்சாலும், அதை சீரியசா எடுத்தக்க போறோமான்னு நீங்க கேக்கரது காதுல விழுது, என்ன, இன்னும் ஒரு 10-15 தலைமுறைக்கு இந்தியா, பெர்மூடாவை உலகக் கோப்பை 2007-ல பின்னி, பெடலெடுத்து, பிரிச்சு மேஞ்சதையே சொல்லிட்டிருப்போமில்ல.

கடைசீயா இந்திய நன் மக்களுக்கு ஒரு சின்ன அறிவுரை, கடப்பாறை நல்லதா வாங்குங்க, டோனி வீடு நல்லா ஸ்ட்ராங்கா இருக்காம், அவரு இந்தத் தொடர்ல எல்லா நாளும் விளையாடப் போறாராம்.

-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Saturday, March 31, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 9

அண்டப் புளுகர், ஆகாசப் புளுகர் வெட்டிப்பயல்

யாரை இப்படி சொல்றேன்னு நீங்கல்லாம் கொஞ்சம் யோசிப்பீங்க. யோசிக்கலேன்னா இப்படி நான் சொன்னதுக்காகவாவது யோசிங்கப்பா.

சமீபத்தில் வெட்டிப்பயல் என்கிற ஒரு ப்ளாக்கரை பற்றித் தெரிஞ்சுகிட்டேன். அவருடைய எல்லாப் பதிவுகளும் நல்லா இருக்கு. அவரோட ரசிகர் கும்பலை பார்த்தா மலைப்பா இருந்துச்சு, அவருக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது. நான் எழுதினா, 'ஆண்பாவம்' படத்தில ஜனகராஜ், ஒட்டல்ல ஈ ஓட்ர மாதிரி ஒரு பின்னூட்டம் கூட வரதே இல்லையேன்னு யோசிச்சேன். அதை தெரிஞ்சுகிட்டா நாம்பளும் பெரியாளாயிடலாமேன்னு, மொதல்ல அவருக்கு ஒரு 10 கிலோ ஐஸ் வெச்சு ஒரு மின்னஞ்சல் (அதாங்க e-mail) அனுப்பினேன். ரெண்டு நாள் கழிச்சு அவர்கிட்ட இருந்து 'நீங்க விரிச்ச வலையில நான் மாட்டிகிட்டேன்'-ங்கர மாதிரி, 'நான் கொஞ்சம் பிஸி, நாளைக்கு உங்களை கூப்பிடரேன்'-ன்னு மின்னஞ்சல் அனுப்பினாரு. சரிதான் மீனு புழுவை பிடிச்சிட்டுதுன்னு இருந்தேன். இதுக்கு நடுவுல அவரோட அடுத்த பதிவு 'கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்' வந்துச்சு. உடனே இன்னும் ஒரு 10 கிலோ ஐஸ் சேத்து கனமா இன்னொரு மின்னஞ்சல் அனுப்பி அவரை கூப்பிட வெச்சு கொக்கியையே கடிக்க வெச்சேன்.

அவர் என்னைக் கூப்பிட்டு, "இவன் ரொம்ப படுத்தரான்" ஒரு 10 நிமிஷம் பேசிட்டு வெச்சிடலாம்னு இருந்திருப்பார், நாங்க ராங்க் கால் வந்தாலே அரை மணி அறுக்கரவங்கன்னு அவருக்கு தெரியலை. நான் 55 நிமிஷம் அறுத்ததும், தாங்க முடியாம, "ஆஸ்திரேலியா கிரிக்கேட் டீம் வேர்ல்ட் கப் வின் பண்ண என்ன பண்ணனும்னு என் கிட்ட கேக்கராங்க அதுக்கு ஒரு மீட்டிங் இன்னும் 5 நிமிஷத்தில இருக்கு"-ன்னு சொல்லிட்டு நழுவிட்டார்.

அவர்கிட்ட பேசின 55 நிமிஷ சிறு உரையாடலை முழுசா தந்தாதான் நான் ஏன் அவரை அண்டப் புளுகர்-ன்னு சொல்றேன்ங்கரது புரியும். ஆனா அதை நான் கொடுத்தா, சாதாரணமாவே என் பதிவுகளை, நுனிப்புல் மேயரமாதிரி படிகரவங்க கூட படிக்க மாட்டீங்க, அதனால அந்த உரையாடலின் ஒரு சிறு தொகுப்பு.

அவருடைய முதல் பொய்:
"நான் எழுத ஆரம்பிச்சு ஒரு 1 அல்லது 1 1/2 வருஷங்கள்தான் இருக்கும், எனக்கு கதையெல்லாம் எழுதத் தெரியாது "

அவருடைய கொல்ட்டி கதையைப் படிச்சுட்டு, இது இவரோட முதல் கதை, இதுக்கு முன்னால் இவருக்கு கதை எழுதும் பழக்கமே இல்லைன்னு சொன்னால் எப்படி நம்பரது. வடிவேலு பாணியில சொல்லனும்னா "நாங்க பார்த்தா ஜாதாரனமாத்தான் இருப்ப்ப்போம், ஆனா வெவ்வ்வரமான பார்ட்டி, ஏதோ நம்ம பயபுள்ள எழுதுதேன்னு படிக்க வந்தா, என்னா? சின்ன புள்ள தனமாயிருக்கு!"

அவருடைய ரெண்டாவது பொய்:
"கவுண்டரின் டெவில் ஷோ ஒரு 10-15 நிமிஷம் யோசிச்சுட்டு எழுதிடுவேன், நான் எழுதரது அந்த character பேசரமாதிரியே இருக்கா?"

"இவ்வளவு நேரம் நல்லாத்தானே போயிகிட்டிருக்கு, என்னத்துக்கு நடுப்பர இப்டி ஒரு பிட்ட போடர, நாங்கல்லாம், இப்டி படக்கு படக்குன்னு எழுதரது இல்லைங்கரத எதுக்கு வெளிய சொல்லி அசிங்க படுத்திக்கிட்டு, போய் சோலியப் பாப்பியா"

அவருடைய மூனாவது பொய்:
"எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அதனால நிறைய எழுதித் தள்ள முடியுது"

"என்ன சொல்ல வர்ரிங்க, நாங்களும் பேச்சிலரா இருந்தா நல்லா எழுதிடுவோமா? நாங்க ஏன் சரியா எழுதரது இல்லைன்னு கேட்டமா, இல்லைல, பொரவு எதுக்குப்பா இப்டி போட்டு வாங்கரே".
உங்க எல்லாருக்கும் கடைசியா ஒருதடவை சொல்றேன், வெட்டிப்பயல் தனக்கு ஒன்னும் தெரியாதுன்னு பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்தரார். என்னடா இவன் இவ்வளவு சொல்றானேன்னு ஒரே ஒரு தடவை அவரோட பதிவ போய் பாப்போம்ன்னு போயிடாதீங்க, அப்பரம், தெனமும் காலைல சுப்ரபாதம் படிக்கர மாதிரி அவரோட பதிவு வந்திருக்கான்னு மனசு அலைபாய அராம்பிச்சிடும். பிறகு என்னைத் திட்டாதீங்க.

உலகக் கோப்பை - கிரிக்கெட்
இந்திய அணி நம்ப எல்லாருக்கும் ஒரு பெரிய ஆப்பு வெச்சிட்டு, ஊருக்கு போய் செட்டில் ஆயிட்டாங்க. இன்னும் ஒரு 2-3 மாசம் அவங்களை திட்டிகிட்டு இருப்போம், அப்பரம், எல்லாத்தையும் மறந்துட்டு வழக்கம் போல அவங்களுக்காக, பால் காவடி, பன்னீர் காவடி எடுத்துகிட்டு இருப்போம். வர வர இந்திய கிரிக்கெட் அணியும், நம்ம அரசியல் வாதிங்க மாதிரி ஆயிட்டாங்க. நம்ப மறதி அவங்களுக்கு ஒரு பெரிய பலம். நாம திருந்தர வழியாவும் இல்லை, அவங்க மாற்றதாவும் இல்லை. இல்லைன்னா ரூபாய்க்கு 3 படி அரிசி போடறேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாங்க அது என்ன ஆச்சுன்னு இன்னமும் நம்பளும் கேக்கல, அவங்களும் கொடுக்கல. நிலமில்லாத ஏழை விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம்ன்னு சொன்னாங்க, அது இப்ப கையளவு நிலமாவது தருவோம்ங்கரதுல வந்து நிக்குது. அவங்க எல்லாம் விவரமாத்தான் இருக்காங்க நமக்குதான் அது புரியல. சமீபத்தில பார்த்த புரட்சித் தலைவரோட எங்க வீட்டுப் பிள்ளைல ஒரு பாட்டு பாடரார். 'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால், இங்கு ஏழைகல் வேதனைப் படமாட்டார்.....' அவர் என்ன சொல்ல வரார், மொதல்ல நான் ஆனையிட மாட்டேன், அப்படியும் என்னை மீறி ஆனையிட்டால், அது நடக்காது, அதையும் மீறி அது நடந்து விட்டால், இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார். இது நமக்குத்தான் புரியல.
உலககோப்பை ஆரம்பிக்கரதுக்கு முன்னாடியே ஒருத்தர் இன்வெஸ்ட் மெண்ட் பத்தி சொல்றார், ஒருத்தர் க்ரெடிட் கார்ட் யூஸ் பண்ணுங்க உங்களுக்கு பென்ஸ் கார் கிடைக்கலாம்-ன்னு சொல்லிட்டு, தலைக்கு பூசர க்ரீம் பத்தி விளம்பரம் பண்ணினார், ஒருத்தர் அதே க்ரீமோட இன்னோரு விளம்பரத்துல வந்துட்டு, ஒரு சோப் விக்கரார். ஒரு பெரும் பேர் ஆள், எனக்கு ஃபோன் பண்ணுங்க நான் உங்களுக்கு ஸ்கோர் சொல்றேன்றார். அவங்க யாராவது ஒரு தடவையாவது நாங்க உலக கோப்பையை வெல்லுவோம்னோ, அல்லது அறையிருதிக்கு போவோம்னோ சொன்னாங்களா.
பட விமர்சனங்கள்
சமீபத்தில் பார்த்த படங்கள் ஒன்னு - Shooter ஆங்கிலப் படம், அடுத்தது - போக்கிரி தமிழ்ப் படம், அதற்கு அடுத்தது ஈ தமிழ்த் திரைப்படம்.
முதலில் Shooter
நல்ல மசாலாப் படம். லாஜிக்கை மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டுவிட்டு பார்க்க வேண்டிய படம். அடிதடி, வெட்டு குத்து எல்லாம் உண்டு, யார் எவ்வளவு சுட்டாலும், ஹீரோ மேல் படாது. பக்கத்தில் இருந்து ஒரு முறை ஒரு போலீஸ் சுட்டும் அவர் சின்ன குண்டு காயங்களோடு தப்பி விடுகிறார். ஹேலிகாப்டரில் இருந்து மிஷின் கன் மூலம் சுட்டாலும் இதே நிலைமைதான். அமெரிக்காவில் அனைவராலும் தேடப் படும் ஒரு குற்றவாளியாக, கவலை இல்லாமல் அவர் பாட்டுக்கு காரில் கண்ட இடங்களுக்குப் போய் வருகிறார், ஆனால் போலீஸ், FBI எல்லோரும் பிடிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். கடைசியில் அவர் என்ன ஆகிறார் என்பதுதான் கதை.
போக்கிரி - தமிழ்த் திரைப்படம்
பரதேசி இந்தத் திரைப்படத்தை ரொம்ப சிலாகித்து எழுதியிருக்கிறார் அதனால் அவரை அப்பரம் தனியா விசாரிச்சுக்கறேன். விஜய் படத்தில் லாஜிக் எதிர்பார்த்தால் தப்புதான், ஆனால், அதுக்காக இப்படி மக்களை நோகடிக்க வேண்டாம். அது எப்படியா எல்லா ஹீரோயின்களும் அடிதடி பண்ற, வெத்து ஹீரோவை லவ் பண்றாங்க. கடைசி சீன்ல அவர் போலீஸ் ஆஃபீசர்-ன்னு சொன்னா எல்லாரும் நம்பராங்க. ஒரு போலீஸ் ஆஃபீசர் ரொம்ப மோசமாம், ஆனால் அவரை கடைசீ காட்சி வரை ஒன்னும் செய்யாம விட்டுடுவாராம். அட போங்கப்பா இதுக்கு ஆங்கிலப் படம் Departed எவ்வளவோ மேல்.
ஈ தமிழ்த் திரைப்படம்


இதற்கும் Extreme Mesures(EM) ஆங்கிலப் படத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
1. ஈ-தமிழ்ப் படம் - EM ஆங்கிலப் படம்
2. ஈ-யின் ஹீரோ ஒரு ப்ளாட்பாரம் கேஸ் - EM - ஹீரோ ஒரு டாக்டர்
3. ஈ-யின் ஹீரோயின் க்ளப் டான்ஸர் - EM - ஹீரோயின் ஒரு நர்ஸ்.
4. ஈ-யில் பாட்டு உண்டு - EM -ல் அது கிடையாது.
5. ஈ-யில் காமெடி உண்டு - EM -ல் அது கிடையாது.
6. ஈ-யில் எல்லோரும் கத்தி பேசுகிறார்கள் - EM-ல் அது கிடையாது.
தமிழ் படத்தில் ஒரே ஒரு ஆறுதல் - இயக்குனர் இது ஆங்கிலப் படத்தின் ஈயடிச்சான் காப்பி என்பதைக் காட்ட 'ஈ'ன்னே பேர் வெச்சுட்டார்.
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

நான் மிகவும் ரசித்த ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்து பொங்கல் நிகழ்ச்சிகள்.
இந்த முறை சற்று வித்தியாசமாக 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள், 3:00 மணிக்கே ஆரம்பித்து சாதனை படைத்திருக்கிறார்கள். சங்கத்தலைவர் நாகு, சங்கத்து காரியதரிசிகள், இந்த முயற்சியை ஆதரித்த உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள். எனக்குத் தெரிந்த பலர் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்து "என்ன விளையாடராங்களா, யாரை கேட்டு 3:00 மணிக்கே program-ஐ ஆரம்பிச்சாங்க?" என்று கோபப் பட்டாங்க, இதையும் தமிழ்ச் சங்கம் கொஞ்சம் பரிசீலிக்கவும். இதை கேட்ட போது, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, மாநில அரசு ஊழியர்களுக்கு 6 நாட்களும் வேலை என உத்தரவு பிறப்பித்த போது, 'சோ' தனது கேள்வி-பதில் பகுதியில், அது மிகவும் தவறான முடிவு, முதலில் அவர் வாரத்துக்கு ஒரு நாள் வேலை என்று உத்தரவிட்டு பிறகு படிப்படியாக உயர்த்தி வாரத்துக்கு 6 நாட்கள் வேலை என உத்தரவிட வேண்டும் என சொல்லியிருந்தார். அதுபோல முதலில் 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சிகள் 3:30க்கு ஆரம்பித்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் வந்து 3:00 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும். பரவாயில்லை இந்த முறை மன்னித்து விடுவோம்.
ஒலி, ஒளி அமைப்பு:
இதில் சற்று கவனம் செலுத்த வேண்டியது மிக முக்கியம். எந்த ஒரு நிகழ்ச்சியும் பார்வையாளர்களை கவர மிக மிக முக்கியம் ஒலி மற்றும் ஒளி.
தொகுப்பாளர்கள்:
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டும் இவர்களது பணி இல்லை. - கூட்டத்தை கட்டுப் படுத்துவது
- நிகழ்ச்சியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள், சுவாரசியமாக சொல்வது.
- நிகழ்ச்சி சரியான நேரத்தில் ஆரம்பித்து முடிக்கப் படுகிறதா என்று கண்காணிப்பது, இல்லையெனில் அவர்களைத் துரிதப் படுத்துவது
- அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பங்கேற்பாளர்களைப் பாராட்டுவது
- இடையிடையே, சங்கத்து நடவடிக்கைகளை புகழ்ந்து சொல்லி, புதிய உறுப்பினர்களாகச் சொல்லி வேண்டுவது
- அடுத்து வர இருக்கும் சங்கத்து நடவடிக்கைகளை சொல்லி சங்க நிர்வாகிகளை உற்சாகப் படுத்துவது.
- இடையிடையே சங்கத்து நிர்வாகிகளின் நல்ல யோசனைகளை பாராட்டி அதை எப்படி இந்த நிகழ்ச்சியில் பின்பற்றுகின்றோம் என்று சொல்லி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
- நல்ல வெளிச்சமான இடத்தில் நின்று கொண்டோ அல்லது நடந்தபடியோ, சகஜமாக பேசுவது அவசியம்
- பேப்பர் வைத்துக் கொண்டு பேசும் போது, இவர்கள் எந்த விஷயத்தையும் உணர்ந்து பேசாதது போல இருக்கிறது. பங்கேற்பவர்கள் பெயரை சொல்ல மட்டும் எழுதி வைத்து படித்தால் பரவாயில்லை.
- தெளிவாகப் பேசுவது மிக மிக முக்கியம். குரல் கணீரென இருத்தல் அவசியம் இல்லையெனில் அதை ஒலி பெருக்கியின் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.
- சமயோசித அறிவு தேவையான ஒன்று.
துருவன்
துருவன் குறும்படம் பற்றி அதிகம் சொல்லப் போவது இல்லை. அதைப் பற்றி பல பின்னூட்டங்கள் வந்து விட்டது.
நாட்டியம்:
கவிதா மலைச்சாமியின் தலைமையில் மிக அருமையான நடன நிகழ்ச்சியைத் தந்தார்கள். நல்ல பயிற்சி என்பது தெரிந்தது.
லக்ஷ்மி வடிவழகு வழங்கிய குழந்தைகளின் நாட்டியம் Super. அதில் நாட்டுப்புறப் பாடலுக்கு நடுவே, 'ராக்' டைப் டைலாமோ டைலாமோ பாட்டின் இடைச் செறுகலும் நல்லா இருந்தது.
அண்ணன் சித்தார்த்தின் இசைக்கு தங்கை மேகனாவின் அபிநயம் ஒரு புதிய முயற்சி, ரொம்ப நல்லா செய்தாங்க.
நாடகம்:
சொல்வதற்கு அதிகம் இல்லாமல் இருந்தது.
சுடர்
நாகு சுடரில் ஐக்கியமாகச் சொல்லி அழைப்பு விடுத்திருக்கிறார். அது பற்றி தனியே எழுதுகிறேன். பெரியோர்களே, தாய்மார்களே இதுக்கு காரணம் நான் இல்லை, நாகுதான். அவரை வேணும்னா 'தனியா' விசாரிச்சுக்கங்க.
சமீபத்திய அபத்தம்:
சன் டிவியில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கேட் போட்டியில் வேற்றி பெற எங்கே யார், என்ன செய்கிறார்கள் என்று காட்டினார்கள்:
மூன்றாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
சென்னையில் ஒரு வாலிபர் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கைனடிக் ஹோண்டா (குழந்தைகள் ஓட்டும் குட்டி சைக்கிள் போல ஒரு பாலன்சிங் வீல்களுடன்) 25 கி.மீ ஓட்டி சென்று வேண்டிக் கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வேறு.
இரண்டாவது இடம் பிடிக்கும் அபத்தம்:
இடம் நினைவில் இல்லை, விஷயம் இதுதான். நடு ரோட்டில் பலர் அங்கப் ப்ரதக்ஷணம் செய்து வேண்டிக் கொண்டுள்ளனர்.
முதல் இடம் பிடிக்கும் அபத்தம்:
மஹாராஷ்ட்ராவில் ஒரு அசுவமேத யாகம் செய்திருக்கிறார்கள்.
கேணத்தனமாக இதையெல்லாம் செய்வதற்கு பதில் தோற்றுவிட்டு ஊர் திரும்பினால், உங்களை யாரும் மதிக்கப் போவதில்லை, நீங்கள் விளம்பரப்படுத்தும் பொருள்களை நாங்கள் வாங்கப் போவதில்லை, என்று முடிவு எடுத்து அதன் படி நடந்தால் போதும். இந்திய அணி ஒரு மேட்ச் ஜெயித்தவுடன் அவர்களைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதும் வேண்டாம், அவர்கள் தோற்றவுடன் அவர்கள் வீட்டை கல்வீசி தாக்குவதும் வேண்டாம். அவர்களை நம்மைப் போலவே சாதாரணமானவர்கள் என நினைத்து அவர்களை உதாசீனப் படுத்தினாலே போதும் அவர்கள் தானாகவே சரியாகி விடுவார்கள். இதை எழுதும் இதே நேரத்தில் இந்தியா, பங்ளாதேஷிடம் பேய் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. இதுக்கு என்ன பரிகாரமோ?
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Sunday, March 11, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 7

சமகால அபத்தங்கள் என்று சிலவற்றை சுஜாதாவின் 'நிதர்சனம்' சிறுகதையில் முன்பு எப்பவோ படித்தது சமீபத்தில் அவருடைய ஒரு கருத்தை விகடனில் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் படித்ததும் நினைவுக்கு வந்தது.

முதலில் சன் டிவியில் சமீபத்தில் பார்த்த சில அபத்த விளம்பரங்கள், அதன் பிறகு சுஜாதாவின் எந்த கருத்து அபத்தம் என்பதைப் பார்ப்போம்:

1. ஒரு பெண் சிரித்தபடி கூட்டத்தோடு படிகளில் இறங்கி வருகிறாள், கீழே அவளுடைய நண்பர்களைப் பார்த்து, வலக்கையைத் தூக்கி பக்கவாட்டில் தமிழி 'ப' போல (அ) ஆங்கில 'C' போல காட்டி என்ன என்று கேட்கிறாள், அவர்கள் தெரியாமல் விழிக்க, மறுபடி வலக்கையைத் தூக்கி அதேபோல செய்ய, அவர்களும் ஏதோ புரிந்தது போல அவளைப் போலவே செய்ய, அனைவரும் சிரிக்கின்றனர். பிறகு பின்னனியில் 'சொல்லாமல் சொல்லுமே, பேசாமல் பேசுமே' என்று பாடல் ஒலிக்கிறது இது அமுல் காஃபிக்கான விளம்பரம். என்ன சொல்ல வருகிறார்கள், கையை அப்படி காட்டினால் அது அந்த காஃபி வாங்க வேண்டும் என்றா, அது இருக்கிறதா என்று கேட்கிறார்களா, அது எங்கே என்று கேட்கிறார்களா, அதுவும் படி இறங்கி வரும்போது எப்படி ஞாபகம் வருகிறது? இது முதல் அபத்தம்.

2. ஒரு விளம்பரம் - தமிழில் நம்பர் 1 நாளிதழ் - தினகரன் என்று . இதை யார், எதை வைத்து தீர்மானிகிறார்கள்? கடைசியில் அந்த விளம்பரத்தில் பேப்பர் படிக்கும் ஒருவர் 'நான் படிக்கரது நம்பர் 1 நாளிதழ், அப்ப நீங்க?' என்ற கேள்வியுடன் முடிக்கிறார். இது எப்படி இருக்குன்னா, எங்க தாத்தா மாடு மேய்ச்சாரு, எங்க அப்பா ஆடு மேய்ச்சாரு, மேய்கரது எங்க பரம்பரைத் தொழிலு அதனால நானும் ' அந்தப் பெருமைக்கு இப்ப பன்னி மேய்க்கிறேன்னு சொல்ற மாதிரி இருக்கு. படிக்கர ந்யூஸ் சரியா இருக்கான்னு பாருங்கப்பா, பேப்பர் நம்பர் ஒன்னா, ரெண்டான்னு பார்த்துகிட்டு இருந்தா விடிஞ்சுடும். இது ரெண்டாவது அபத்தம்

3. மேலே சொன்ன நாளிதழ் மாதிரி, 'இந்தியாவின் நம்பர் 1 டீலர் வசந்த் அண்டு கோ' என்று விளம்பரம் செய்கிறார்கள், எந்தப் பொருளுக்கு என்று சொல்வதில்லை, ஒருவேளை சொன்னால் ப்ரச்சனை வரும் என்று சொல்ல பயமோ? இது மூன்றாவது அபத்தம்.

4. பாம்பே ஞானம் அவர்கள் வெயிலில் மிளகாய் காய வைத்து கொண்டு இருக்கிறார். தேவயானி அவரிடம் அதைப் பற்றிக் கேட்க அவர், இப்படி செய்து, நல்லா அரைச்சாதான் நல்ல மிளகாய்ப் பொடி கிடைக்கும் என்று சொல்ல, அதற்கு தேவயானி, 'ஆச்சி மிளகாய்த் தூள்' அழகா பாக்கெட்ல கிடைக்குதேன்னு சொல்லி, அவரை ஆச்சர்யப் பட வைக்கிறார். வீட்டில மிளகாய் காய வைத்து அவர்களே அரைத்து வைத்தால், 1 கிலோ மிளகாய்த்தூள் 80- 100 ரூபாய் ஆகும், அதுவே பாக்கெட் தூள் வாங்கினா 50 கிராம் 25ரூபாய் ஆகும். நாடு விட்டு நாடு வந்திருக்கும் நம்மை போன்றவர்களுக்கு வேற வழியில்லாம தூள் பாக்கெட் வாங்கரோம். அங்க இருக்கரவங்களுக்கு இது தெரியாம இருக்குமா! இது நாலாவது அபத்தம்.

5. இனி சுஜாதாவின் எழுத்தில் கண்ட அபத்தம். இது அவர் எழுதிய படியே
"காஷ்மீர் பற்றி நான் சில வாரங்களுக்கு முன் எழுதியதற்குக் கண்டனம் தெரிவித்து, சில கடிதங்கள் எனக்கு வந்தன. நான் ‘political will’ தேவை
என்று சொன்னது சிலருக்குப் புரியவில்லை. ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்டில் ‘stop loss’ என்று ஒரு நிலைமை வரும். ஏற்கெனவே தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். அந்த மாதிரி சமயங்களில் அந்தக் காரியத்தைக் கைவிடுவதுதான் உத்தமம் என்று தீர்மானிக்க வேண்டி வரும். காஷ்மீரில் அந்த நிலைமைக்குத்தான் வந்திருக்கிறோம். தீர்வு ஏதும் தென்படவில்லை. இதில் நாம் என்ன சாதிக்க விரும்புகிறோம் என்பதுகூடத் தெளிவாக இல்லை. தமிழ்நாட்டிலிருந்தும் மற்ற மாநிலங்களிலிருந்தும் செல்லும் சி.ஆர்.பி.எஃப். ஜவான்களான கந்தசாமியும், வடிவேலுவும், கரம்சந்தும், பரஸ்நாத்தும், ஹீராவும், தினம் ஸ்ரீநகர் தெருக்களில் ரத்தம் சிந்துகிறார்கள். காஷ்மீரில் ராணுவத்தையும் போலீஸையும் வைத்து தேசபக்தியைப் புகட்ட முடியாது என்பது நம் தலைவர்களுக்குத் தெரியவில்லை. காஷ்மீரில் ஒரு நாளைக்கு ராணுவத்துக்கும் போலீஸுக்கும் ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. காஷ்மீரிகள் இருபது பேருக்கு ஒரு ஜவான் என்ற ரீதியில் மூன்று லட்சம் வீரர்கள் அங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்கா... வியட்நாமிலும் இராக்கிலும், ரஷ்யா... ஆப்கானிஸ்தானிலும் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு நிலைமைதான் இது என்பதை நம்ப மறுக்கிறோம். ‘A debilitating war costing millions of dollars and thousands of innocent lives with no coherent policy to control it, and little chance of victory’ என மில்லியன்கள் கணக்கில் டாலர் செலவுசெய்து, ஆயிரக்கணக்கில் அப்பாவி உயிர்களை இழந்து, கோவையான அரசியல் அணுகுமுறை இல்லாமல் வெற்றி வாய்ப்பு இல்லாது பலவீனப்படுத்தும் போர் இது என்று மூரும், ஆண்டரசனும் 1993-ல் சொன்னது இன்றும் மாறவில்லை. இது ‘stop loss’ நிலையா... நீங்களே தீர்மானியுங்கள்! "

இந்த பேச்சை ஒரு அரசியல்வாதி சொல்லியிருந்தால் அதை பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை. நன்கு படித்த ஒரு எழுத்தாளர் அடிக்கடி இப்படி அபத்தமாக பேசி வருவது வியப்பாக இருக்கிறது.

தாமதமாகிவிட்ட ஒரு காரியத்தை மேலும் தொடர்ந்து முடிப்பதால் நஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும்

இது ஒரு கம்பெனிக்கு வேண்டுமானால் ஒத்து வரக்கூடும். இது ஒரு மாநிலம் சார்ந்த விஷயம். மாநிலம் மட்டும் இல்லாமல் இரு நாடுகள் சார்ந்த விஷயம். இதில் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்க முடியாது. தாமதமாகி விட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை முடிக்காமல் விட்டால் அதன் விளைவுகள் இன்னமும் பயங்கரமாக இருக்கும். திருவள்ளுவர் சொன்னது போல் :

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

எனவே தொடங்கியது முடிக்கப் படவேண்டியதுதான். கால தாமததுக்கு முதல் காரணம், முக்கிய காரணம் நமது அரசியல்வாதிகள், அவர்களை அடையாளம் காட்டாமல் இப்படி அபத்தமாக எழுதியிருக்கிறார்.

-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Wednesday, February 21, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 6

அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். சந்திச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு, சரி இனிமே இவன் தொல்லையில்லைன்னு நினைச்சிட்டு இருந்திருப்பீங்க. ஒரு 3 மாசமா எதுவுமே எழுதலைங்கரதால இன்னிக்கு நிறைய எழுதிட மாட்டேன். கவலைப் படாதீங்க.

மகான் சத்ய சாய் பாபா அவர்கள் நாத்திகவாதி முதல்வர் கருணாநிதி வீட்டிற்கே சென்று அவரை சந்தித்தது சரியா?


இதில் சர்ச்சைக்கு என்ன இடம் என்று எனக்குத் தெரியவில்லை. மகானின் மனதில் என்ன இருந்தது, என்ன இருக்கிரது என்பதை நம்மைப் போன்ற சாமானியர்களால் கண்டு பிடிக்க முடியும் என்று யோசிப்பதே சற்று வேடிக்கையாக இருக்கிறது. மகான் அங்கு சென்று விட்டு இத்தனை நாள் நாத்திகவாதம் பேசி வருபவர்களின் முகத்திரையைக் கிழித்து இருக்கிறார்.


1. ஆட்சியைக் தன் கைப்பிடியில் வைத்து இருக்கும் அவர்கள், மகானின் அடிபணியும் புகைப் படத்தை வெளியிடாமல் தடை செய்திருக்கலாம்.


2. அவர் கருணையோடு அளித்த மோதிரத்தை மத்திய அமைச்சர் பெற்றுக் கொண்ட உடன் அருகில் இருந்த மாநில அமைச்சர் தனக்கும் ஒன்று என்று கேட்டு பெற்றதிலிருந்து அவர்களும் இலவசம் என்றவுடன் கை நீட்டத் தயங்கவில்லை என்பதை காட்டியது. கேட்க கேட்க மகான் தருவதிலிருந்து இது ஒன்றும் கண்கட்டு வித்தையில்லை என்பதை தெளிவாக்கியது.


3. வில்லிபாரத்திலிருந்து ஒரு சிறிய செய்தியைச் சொல்லிவிட்டு அடுத்த வில்லங்கத்திற்குச் செல்கிறேன்.


கண்ணன், பாண்டவர்களுக்கு நாட்டை பெற்றுத்தருவதற்காக ஹஸ்தினாபுரம் வருகிறான். அது தெரிந்தவுடன் துரியோதனன் அவையோரைப் பார்த்து, கோகுலத்து இடையன் ஒருவன் நாடு நல்கி இவ்விடம் வருகிறான் அவன் வரும்போது அவனை அவமானப் படுத்த நான் திட்டமிட்டிருக்கிறேன்.ஆகவே அவன் வரும்போது அவனை யாரேனும் எழுந்து அவனுக்கு மரியாதை செலுத்தினால் அவர் ஆளும் ஊரை தீவலம் செய்விப்பேன் அதாவது தீயிட்டு கொளுத்துவேன் என்கிறான். கண்ணன் அவைக்குள் வருகிறார். கண்ணன் வாய் திறந்து ஏதும் சொல்லாமலே அவருடைய ஆளுமைத்தன்மை அனைவரையும் மயக்குகிறது. அவர் நடந்து வர வர, அனைவருக்கும் முன்னால் துரியோதனனே எழுந்து வணங்கி நிற்கிறான். பிறகு அவையோர் அனைவருக்கும் தான்தான் பரம்பொருள் என்பதை உணர்த்த விச்வரூப தரிசனம் தருகிறார்.

இது நான் கேட்டறிந்த கதை, இதற்கும் நான் மேற்கூரிய சம்பவத்திற்கும் ஏதும் தொடர்பு உண்டு என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறல்ல.


ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் இடிக்கத் தடையில்லை - சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு.


இந்த இடிப்பினால் ஒரே ஒரு பலன் விஜயகாந்தின் செல்வாக்கு 1% - 5% உயருவதற்கு உதவியிருக்கிறார்கள். அவருக்கு கிராமத்துப் பக்கம் இருந்த செல்வாக்கு சென்னையில் இருக்கவில்லை, அதை அவருக்கு ஆளும் கட்சி இந்த இடிப்பின் மூலம் தந்திருக்கிறது. அவர் இதற்காகவே அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எத்தனை நாட்கள் அவர் இப்படி தனித்து போட்டியிடுவார் என்பது தெரியாது, சீக்கிரம் அவரும் மற்ற கட்சியினருடன் கூட்டு சேரலாம், அது காங்கிரஸாகக் கூட இருக்கலாம் அப்போது இந்த இடிப்பு முயற்சி தள்ளிப் போகலாம். அப்போது இவரை வளர்த்து விட்டதுதான் ஆளும் கட்சிக்கு மிஞ்சும்.


கேரளாவை எதிர்த்து கோவை, திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம் ஒரு நாள் அடையாள கடையடைப்பு.


இதனால் என்ன பலன் என்று எனக்குத் தெரியவில்லை. கடையடைப்பதால் அதற்கு முதல் நாள் வியாபாரம் கொஞ்சம் களை கட்டியிருக்கும். ஆனாலும் அந்த ஒரு நாள் நஷ்டம் தமிழகத்திற்குத்தான் குறிப்பாக அந்த நகரங்களுக்குத்தான். கேரளாவிற்கில்லை. பஸ், ஆட்டோ, ரயில் போக்குவரத்து இல்லை இது தமிழகம் முழுக்க ப்ரச்சனை. ஆட்டோ ஓட்டிகளின் ஒரு நாள் வியாபாரம் போச்சு, தமிழகத்துக்கு இதனால் 500 கோடி இழப்பு என்று ஒரு கணெக்கெடுப்பு சொல்கிறது. ப்ரயாணிகள் அவஸ்தை ஒருபுறம், நோயாளிகள் ஹாஸ்பிட்டல் செல்ல முடியாத அவதி ஒருபுறம். இன்ன பிற விசேஷங்கள் வீடுகளில் ஏற்பாடு செய்தவர்கள் மனக்கஷ்டம், பணக்கஷ்டம் ஒரு புறம். இது எல்லாம் தெரிந்தும் எதற்காக பந்த் செய்கிறார்கள், யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.

சற்று நேரம் முன்பு கேட்ட சில கடி ஜோக்ஸ்:
சன் டிவியில், முன்பு விஜய் டிவியில் ப்ரபலமாக இருந்த 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியை, 'அசத்தப் போவது யாரு' என்று அதே கலைஞர்களை வைத்து ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் இன்று கேட்ட சில கடி ஜோக்ஸ்:

நடுவர் சிட்டிபாபு அவர்களே, என்னதான் உங்கப் பேர் சிட்டி பாபுன்னு இருந்தாலும் அந்த சிட்டில ஒரு சின்ன பெட்டி கடைகூட வைக்க முடியாது.

மீன் புடிக்கரவனை மீனவன்னு சொல்ல முடியும், ஆனா மான் பிடிக்கரவனை மாணவன்னு சொல்ல முடியாது

புள்ளிமானுக்கு உடம்பெல்லாம் புள்ளியிருக்கும், ஆனா கன்னுக்குட்டிக்கு உடம்பெல்லாம் கண்ணு இருக்காது.

என்னதான் பெரிய டான்ஸ் மாஸ்டரா இருந்தாலும், அவருடைய சாவுக்கு அவரால டான்ஸ் ஆட முடியாது.

நீங்க ஆம்பிளையா இருந்தாலும் உங்க செல் நம்பர் (இந்தியாவில) '9' ல தான் ஆரம்பிக்கும்.


ஆயிரம் ரூபா கொடுத்து ஜீன்ஸ் வாங்கினாலும், அதுல இருக்கர 10 ரூபா ஜிப்புதான் உங்க மானத்தைக் காப்பாத்தும்.

தங்கச்சியோட ஃப்ரெண்ட, ஆசையா தங்கச்சின்னு சொல்ல முடியும், ஆனா நம்ம பொண்டாட்டியோட ஃப்ரெண்ட .....?

என்னதான் பெரிய கராத்தே மாஸ்டரா இருந்தாலும், வெறிநாய் தொரத்தினா ஓடித்தான் ஆகனும்.


- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Saturday, November 18, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 5

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கத்தில் தீபாவளி க்ருஸ்மஸ் கொண்டாட்டங்கள்
வழக்கம்போல 30 நிமிஷம் லேட்டா ஆரம்பிச்சு பல நல்ல நிகழ்ச்சிகளைத் தந்தாங்க, முக்கியமா குழந்தைங்க கலக்கராங்க, என்ன talent! என்ன ஒரு involvement! amazing performance!! இவங்களை எல்லாம் சேர்த்து ஒரு நாடகம், சின்னதா ஒரு சொற்பொழிவு (தமிழ்ல இல்லைனா ஆங்கிலத்தில) தரச் சொல்லலாம் அது குழந்தைகளுக்கு ரொம்ப encouraging-ஆ இருக்கும். அங்கிதா, அவினாஷ் ரெண்டுபேரும் நல்லா MC பண்ணினாங்க. கௌதம் audio control பார்த்துகிட்டான். ஆக இது முழுக்க முழுக்க youngsters பண்ணின Program, நான் முன்னாடி சொன்ன மாதிரி சும்மா ஏதோ செய்யனுமேன்னு செய்யாம ஒரு ஈடுபாட்டோட செய்யராங்க இதை யாரும் notice பண்ணினாங்களான்னு தெரியல.
இந்த முறையின் முதல் சங்கு: இனி நடக்க இருக்கும் தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளில் குழந்தைகளோட item இல்லைன்னாதான் பெரியவங்களுக்கு நேரம் ஒதுக்கனும்ன்னு ஒரு ரூல் போடச்சொல்லி புதிய தமிழ் சங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் விடறேன்.
இரண்டாவது சங்கு: Audio system சரியாவே இல்லை. வசீகரா பாடினவங்க குரல் எடுக்கவே இல்லை, எல்லோரும் கௌதம் இருந்த பக்கம் பார்த்து கல்யாணத்துல கெட்டிமேளம் கொட்ட மேளக்காரரை மிரட்ற மாதிரி அவனை மிரட்ட ஆரம்பிக்க, யாரோ அங்க போயி ப்ரச்சனை audio system-லன்னு கண்டுபிச்சாங்க.
மூன்றாவது சங்கு: பட்டிமன்றத்து மேடைல monitor ஒர்க் பண்ணலை, அதனால அதையும் கொஞ்சம் சரி பார்க்கனும்.

பட்டிமன்றம்:
எதிர்பார்த்த விருவிருப்பு இல்லை. ரெண்டு அணியும் பேசவும், சண்டைபோடவும் நிறைய scope இருந்தும் அதை யூஸ் பண்ணிக்காம விட்டுட்டாங்க. இதெல்லாம் பரவாயில்லை, நடுவருக்கு ரெண்டு அணியும் பேசினது காதுல விழாம பாவம் அவர் கடைசி வரை கலக்கமாவே இருந்தார். நான் முன்னாடி சொன்ன மாதிரி முடிஞ்சவரை காமெடியா தலைப்பு கொடுத்துட்டா எல்லாரும் நல்லா ரசிச்சிருப்பாங்க இப்படி குழப்படியா கொடுத்தா கஷ்டம்தான். இருந்தும் புவனா ரொம்ப நல்லா பேசினாங்க, அழகா அழுத்தம் திருத்தமா தன்னுடைய பக்க நியாயத்தை தெளிவா பேசினாங்க. ரவி தன்னை திடீர்னு சேர்த்ததுக்கு வருத்தப்பட்டாரா, சந்தோஷப்பட்டாரான்னு தெரியலை, prepare பண்ண டைம் இருந்திருந்தா நல்லா பேசியிருப்பார்ன்னு நினைக்கிறேன். முரளி ஏன் கத்தி பேசினார்ன்னு யோசிச்சேன் அப்பரம்தான் தெரிஞ்சுது மேடையில monitor வொர்க் பண்ணலை அதனால அவர் கத்தி பேசினார்ன்னு. கீழ இருந்த எங்களுக்கு அவர் சண்டை போட்ட மாதிரி இருந்தது.

புதுக் குழு
சங்கத்தின் புது குழு பதவி ஏற்று விட்டது. முந்தைய தலைவர் தன்னுடைய மன வருத்தங்களை கொட்டித் தீர்த்து விட்டார். நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், நடப்பவை நல்லதாக இருக்கட்டும். புதிய குழுவை வரவேற்போம்.
நம்ம ப்ளாக்
அஜாத சத்ரு கொஞ்சம் வில்லங்கமான ஆள் போல, ஆரம்பிக்கும் போதே, குத்தலோடு ஆரம்பித்து இருக்கார், 'உஜாரையா உஜாரு, ப்ளாகிகளே உஜாரு'.

எதிரொலி என்னப்பா ஆச்சு, நாகு நீங்க பீனிக்ஸ்-ல இருக்கரதா சொல்றாரு, நீங்க மெட்ராசுன்னு சொல்றீங்க, அதெல்லாம் இருக்கட்டும், அப்பரம் என்ன ஒன்னும் எழுதக் காணோம். என்னை சீண்டிவிட்டு வேடிக்கை வேற பார்த்தீங்க. இப்ப உங்களுக்கு என்ன 'writer's block'ஆ.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

Thursday, October 26, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 4

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ரிச்மண்ட் தமிழ்ச் சங்கம்:

புதிய தமிழ் சங்க செயற்குழு உறுப்பினர்களை முடிவு செய்திருப்பதாக கடிதம் வந்து இருக்கிறது. இந்தக் கடினமானப் பணி இவ்வளவு சீக்கிரம் முடிந்தது ஒரு சாதனையே. பொறுப்பேற்க வரும் புதிய உறுப்பினர்களை வருக வருக என வரவேற்கிறேன். பட்டிமன்றத் தலைப்பு வந்து விட்டது. நடுவர், பேச்சாளர்கள் பெயர் இன்னமும் ரகசியமாகவே இருக்கிறது. தலைப்பு நாம் கற்ற பழக்கவழக்கங்கள், வளர்ந்த வளர்ப்பு இவற்றை இங்கு வளரும் நம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது அவசியமா? அதை ஆங்கிலத்தில் As parents of our children who are growing up here, is it proper and necessary to bring them up the same way our parents did decades ago? Is it proper to expect and enforce the culture, habits, and customs on them that we were expected to follow? என மொழி பெயர்த்துள்ளனர். இந்த முரண்பாட்டை பேச்சாளர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தப் பட்டிமன்றத்திற்கு நல்ல ஒரு நடுவர் அவசியம், பேச்சாளர்கள் வரம்பு மீறாமல் பேசுவது மிக மிக அவசியம். இது சற்று கத்திமேல் நடக்கும் ஒரு முயற்சி. எப்படி கையாளுகின்றார்கள் என்பதைப் பொறுத்து இதன் வெற்றியும் அமையும். கூடுமானவரை நகைச்சுவையான தலைப்பு தந்து விட்டால், ஒருவரை ஒருவர் அதிகம் திட்டிக் கொள்ளாமல் இருப்பார்கள், இல்லை என்றால், நிகழ்ச்சி முடிந்து பல வாரங்களுக்கு 'சின்ன' பசங்க மாதிரி 'காய்' விட்டுக் கொள்வார்கள். பார்க்க சகிக்காது. இந்த நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என்று முயற்சி செய்யப் போவதாக முடிவு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். (அப்பாடா வரலைனா அதான் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தானே, அப்பவே தெரியும் அவன் வரமாட்டான்னு நாகு எழுதிவிடுவார்).

இலக்கியப் போட்டிக்கு இந்த வாரச் சங்கு:
ஒரு நகைச் சுவை கதை, கட்டுரை (டுபுக்கு எழுதுவது போல - http://dubukku.blogspot.com/ அல்லது வெட்டிப் பயல் எழுதுவது போல - http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_19.html), நாடகம் என்று எதை வேண்டுமானாலும் எழுதித் தள்ளுங்கன்னு போட்டி வைத்து அதை இந்த ப்ளாக்கில் வெளியிடலாம், நாடகமென்றால் அதை மேடையேற்றலாம். Talent show போல ஒன்று ஏற்பாடு செய்து கொடுக்கப் படும் 5 நிமிடத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என வரம்பில்லாமல் செய்துவிட்டால் நிச்சயம் களைகட்டும். American Idol போல ஒன்று கூட செய்யலாம்.

நாகுவின் கூட்டாங்கதை

கதை நான்கு அல்லது ஐந்து வரிகள் ஆனவுடன் அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என யோசிப்பதற்குள் அதை ஈழத்திற்கு
கடத்திக் கொண்டு போய் விட்டனர். எனக்கு ஈழத் தமிழ் சுத்தமா தெரியாது, (சாதாரணத் தமிழே தெரியாது) என்பது நினைவுக்கு
வந்தவுடன் படால் என நிறுத்தி விட்டு வுடு ஜூட் (அப்பாடி மீசையில மண் ஒட்டல).

நாகு: பூஜையில் காதில் விழுந்ததாக நீங்கள் எழுதி இருப்பது மிக அருமை. சுஜாதாவின் சாயல் அதிகம் தெரிகிறது. சொல்ல வந்த விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லுவது ஒரு கலை அது உங்களிடம் இயல்பாக இருக்கிறது. நிறைய எழுதவும்.

பித்தனைப் பற்றி இத்தனை பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றால் கொஞ்சம் ஜாக்ரதையாதான் இருக்கனும். பித்தனைப் பற்றி விசாரித்தவர்கள் கத்தி விசாரிச்சங்களா? கத்தி வெச்சுண்டு விசாரிச்சாங்களா?

மதுரை மத்திய இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் முடிவு ஆளும் கட்சிக்கு சாதகமாகவே வந்திருக்கிறது. இது ஆட்சியாளர்களின் அராஜகத்தால் வந்தது என்று தோற்ற அனைத்துக் கட்சியினரும் சொல்லி தங்கள் காயங்களுக்கு மருந்து போட்டுக் கொண்டுள்ளனர். எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விட்டார்கள் அல்லது மறந்து விட்டதாக நடிக்கிறார்கள். இந்த இடைத் தேர்தல் புதிய அரசு அமைந்து 4 மாதங்களுக்குள் நடக்கும் ஒன்று, புதிய அரசின் மீது பெரிய மனக் கசப்பு மக்களிடம் இல்லை, கடந்த ஆட்சியில் 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தோற்ற பிறகும் அவர்கள் பின்னர் வந்த சட்ட மன்ற இடைத் தேர்தலில் கணிசமான அளவில் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்கள், ஆக மக்களுக்கு இடைத்தேர்தலை பற்றி அவ்வளவுதான் அக்கறை. இதை விட்டுட்டு அந்த காரணம், இந்தக் காரணம்-நு பாயப் பிறாண்டறாங்க.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:

அடிதடி, கலாட்டா, தடியடி, கத்திச் சண்டை எல்லாம் போட்டு (Duet Song மட்டும் இல்லை) ஒரு மசாலாப் படம் ரேஞ்ஜில் ஒரு தமாஷ் நடந்து முடிந்துள்ளது. இவ்வளவு பேர் இத்தனை தூரம் அடிச்சுக்கராங்களே, அவ்வளவு காசா இந்த போஸ்ட்ல இருக்கு?

கேரளாவில் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் அவர்களுடன் ஆட்சி அமைத்துள்ளது சரியான சந்தர்ப்பவாதம் என்று 'கரித்துக் கொட்டும்' சோ-வின் முகத்தில் கரியை பூசாமல் நல்லா ஒரு தார் டின்னையே கவுத்த மாதிரி ஆளும் கட்சியுடன் சென்னையைத் தவிர மற்ற இடங்களில் கூட்டு சேர்ந்து விட்டு, சென்னையில் அவர்களோடு 8 இடங்களில் போட்டி போட்டு CPI(M) ஒரு புதிய புரட்சியே நடத்தி இருக்கிறார்கள். இதன் க்ளைமாக்ஸ் காட்சியாக ஆளும் கட்சி MLA வை கைது செய்யச் சொல்லி ஒரு பேரணியும் நடத்துகின்றனர்.

சமீபத்தில் பார்த்த திரைப்படம்:

'Click' வீட்டில் கண்டிப்பாக குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம் இல்லை. கதாநாயகன் மைக்கேல் ஆக Adam Sandler வழக்கம் போல் அசாதாரணமாக நடித்து இருக்கும் படம். கதை நம்மை (மன்னிக்கவும் என்னை) போன்ற ஒரு சராசரி குடும்பத் தலைவன், அவனுடைய மனைவி, இரண்டு குழந்தைகள், அவன் அவர்கள் எதிர்காலத்திற்காக ஓயாது உழைக்கும் ஒரு மிகச் சிறந்த வேலைக்கார அடிமை. ஆனால் வாய் ரொம்ப நீளம். ஒரு யுனிவர்சல் ரிமோட் வாங்க கடைக்குப் போய், யுனிவர்ஸையே கண்ட்ரோல் பண்ணக்கூடிய ஒரு ரிமோட்டுடன் வருகிறார். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு அவர் அதை இயக்க முடியாமல் அது இவரை இயக்குவதும், அதன் முடிவு என்ன என்பதை நிறைய காமெடியும் கொஞ்சம் செண்டிமெண்டும் கலந்து அழகாக சொல்லி இருக்கிறார்கள். சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல், வேலை, குடும்பம் இதில் எது சிறந்தது என்று பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.


பித்தனின் கிறுக்கல்கள் - 3

பித்தனின் கிறுக்கல்கள் - 3

http://richmondtamilsangam.blogspot.com/2006/10/3-2006.html

தமிழ் சங்கத்துக்கு ஒரு யோசனை:
சமீபத்தில் இலக்கியப் போட்டி 2006-க்கான அறிவிப்பு வந்து இருக்கிறது. மேலும் பரிசுன்னு சொல்லாம, எல்லா படைப்புகளையும் படைப்பாளர்களின் புகைப்படங்களோடு இந்த வளைத்தளத்தில் வெளியிடலாமே? இதனால, ஒன்னு - நிறைய பேர் கலந்து கொள்வார்கள், ரெண்டு - பொறாமை இருக்காது, ஒரு அறிஞன் சொன்னது We see things not as they are but as we are-னு இது இந்த போட்டிக்கு கண்டிப்பாகப் பொருந்தும் காரணம், இந்தப் போட்டியில தலைப்பு எதுவும் தராததினால யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுத முயற்சி செய்யலாம், அது நடுவர் குழுவுக்குப் பிடிக்கலைன்னா நல்லா எழுதியிருந்தாலும் பரிசு கிடைக்காதே? ஊதர சங்கை ஊதிட்டேன், இனி சங்கத்தின் பொறுப்பு, பண்ருட்டியார் பொறுப்பு. 'நாராயண, நாராயண'.


தமிழ் சங்கத்தின் தற்போதைய செயற் குழுவின் பணிக்காலம் முடியப் போவதால், அடுத்த குழுவினர்களைத் தேர்ந்து எடுக்கும் பணியும், பொறுப்பும் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் இந்த முயற்சி இனிது முடிய என் வாழ்த்துக்கள்.


போன வெளியீட்டில் ஒரு சில யோசனைகளைச் சொல்லியிருந்தேன், அது அந்த வெளியீட்டில் கடைசியில் இருந்ததால், பலர் பார்வையில் பட்டிருக்காது எனவே, மீண்டும் ஒரு முறை - சங்கு ஊதி விடுகிறேன்.


பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.

இந்த ப்ளாக் பற்றி
இந்த ப்ளாக்ல நிறைய இலக்கிய படைப்புகள் வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சந்தோஷம் எனக்கு போட்டியா யாரும் இன்னும் அரசியல் விமர்சனம் எழுத ஆரம்பிக்கல, அது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.

55 வார்த்தைல கதை கேட்டு இருக்கார் முரளி:

சுஜாதா சொன்னது:

ஒரு ஊர்ல ஒரு நரியாம் அத்தோட கதை சரியாம்

சுவற்றில் ஆணி அடிக்கும் முன் வேலைக்காரப் பையன் கேட்ட கடைசி கேள்வி, ஏங்க வீட்டில concealed wiring-நு சொன்னீங்களே, மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா?

நான் சமுதாய அவலங்களைச் சாடுவதாக முரளி எழுதியிருக்கார், உங்க எல்லோருக்கும் உள்ள கோபம் என்னிடத்தில் வார்த்தைகளாக வெடிக்கிறது நீங்கள் மனதுக்குள் பொருமுகிறீர்கள் அவ்வளவுதான்.

சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேஷ் பேஷ், இதைவிட கீழே இறங்கி வேறு யாரும் ஓட்டு கேக்க முடியுமா?

************************************************************************
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்படி போடு அறுவாள! ஓட்டும் கிடைக்கும், கள்ள நோட்டும் கையை விட்டு போயிடுச்சுன்னு கட்சிகள் சந்தோஷப் படும். வாங்கினவங்கதான் பாவம், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு.
************************************************************************
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சபாஷ், இது போன்ற தீர்ப்புகள்தான் நம் நாட்டில் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துகின்றன.
************************************************************************
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிமுக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னங்க இப்படி சொல்றீங்க, அவங்க தயவால ரெண்டு MLA சீட் கிடைச்சு இருக்கு, அதை வெச்சு எவ்வளவு சம்பாதிக்க முடியும்!
************************************************************************
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
மெய்யாலுமா!!! ஐ, சும்மா டமாஸ் பண்ணாதீங்க.
************************************************************************
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார், எனவே அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரியுள்ளார்.
அதோட விடுவானேன், அவங்களுக்கு ஒரு MLA சீட்டும் வாங்கி கொடுத்துடுங்க பாவம் பொழைக்கரதுக்கு ஒரு வழி கிடைச்சாமாதிரி இருக்கும்.
************************************************************************
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பிறகு தலைநகர் வந்து சேர்ந்தனர்.
விமானத்துக்கு பறவைக் காய்ச்சல் வந்து இருக்குமோ?
************************************************************************
இந்தவாரம் அரசியல் விமர்சனம் இல்லை! உள்ளாட்சி தேர்தல் முடிவும், மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் முடிவும் வந்ததும் நிறைய எழுதலாம்.

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

பித்தனின் கிறுக்கல்கள் - 2

http://richmondtamilsangam.blogspot.com/2006/10/2-2001-talk-of-town.html
மரண தண்டனை ஒழிப்பு:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001-ல் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் முகமது அப்சலின் தூக்கு தண்டனை தீர்ப்பு இன்று இந்தியாவில் மாநகரத்தின் முக்கிய பேச்சாக (அதாங்க talk of the town) இருக்கிறது. நம்ம ஊர் அரசியல்வாதி திருமாவளவன் இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் என்றும், உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள்' வெளிக்காட்டியுள்ளன என்றும், மக்கள் விரோதச் சட்டம் என்று பெருவாரியான அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு பின்னர் கைவிடப் பட்ட பொடோசட்டத்தின் கீழ் இந்த தண்டனை விதிக்கப் பட்டுள்ளது இதனால் இதை ரத்து செய்து மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடாக உலக அரங்கில் இந்தியா பெருமையுடன் விளங்க வேண்டும் என்று தன் 'திரு' வாய் மலர்ந்தருளியிருக்கிறார். என்ன ஒரு ஆய்வு, என்ன ஒரு கண்டு பிடிப்பு, என்ன ஒரு நாட்டுப் பற்று, என்ன ஒரு மனித நேயம் இவை எல்லாம் மெய் சிலிர்க வைக்கிறது. எப்படி இதுபோல சிந்திக்க கற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி யோசிப்பதற்கு படிப்பு என்ற ஒன்று அவசியமே இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறார்.

இந்த மரணதண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து மன்னிப்பும் கருணையும் காட்ட வேண்டும் - மிக ஞாயமான கோரிக்கை, அவர் என்ன ஆங்கிலத்தில் தமிழ்த் திரைப்படத்துக்கு பெயர் வைத்தாரா? தங்கர் பச்சானை திட்டினாரா? விரப்பனை கொடுங்கோலன் என்று சொன்னாரா? பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று சொன்னாரா? இல்லையே சும்மா நமது மரியாதைக்குரிய பாரளுமன்றத்தை தாக்கி அவருடைய பல சகாக்களை அநியாயமாய் இழந்து, பல அப்பாவி மக்கள், தோட்டகாரர், பாதுகாப்புப் படையினர் என்று பலரையும் கொன்று, இன்று பிடிபட்டு, இந்திய நீதிமன்றம் அவரது வாதங்களை கேட்ட பிறகு இப்படி ஒரு தண்டனை பெற்று, அதற்காக கொஞ்சமும் வருத்தப்படாமல் இருப்பவருக்கு கண்டிப்பாக கருணை காட்டத்தான் வேண்டும்.

உலகில் 129 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று 'அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன': என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு. மரணதண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்று அறிவியல்பூர்வமான ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன என்றால், ஒரு நாட்டில் எதற்கு ராணுவம், எதற்கு போலீஸ், எதற்கு சட்டங்கள், எதற்கு தண்டனைகள் அட எதற்கு இவரைப் போல அரசியல்வாதிகள், எந்த சட்டத்தாலும், தண்டனையாலும் குற்றங்கள் குறையப் போவது இல்லையே, மக்களே அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளட்டுமே. உலக அரங்கில் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த இன்று இருக்கின்ற சட்டங்கள், தண்டனைகள் போதவில்லை என்று எல்லா நாடுகளும் கவலைப் பட்டுக்கொண்டிருக்கும் போது, உலகில் தீவிரவாதத்தால் தினம்தோறும், அதிகம் பாதிக்கப்படும் இந்தியாவில் இவரைப் போன்றவர்கள் இப்படி பேசி வருவது நமக்கெல்லாம் ஒரு சாபம்.

மக்கள் விரோதச் சட்டம் என்று கைவிடப் பட்ட பொடோ சட்டம்
தீவிரவாதத்தை முழுவதும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதன் வளர்ச்சியை தடுக்க முயன்ற ஒரு சட்டமே பொடோ. அதையும் இவரைப் போன்ற கையாலாகாத அரசியல்வாதிகள் குழி தோண்டி புதைத்து விட்டனர். 1000 பொதுமக்கள் உயிர் இழக்கலாம், ஆனால், இவர்களுக்கு ஒரு தீவிரவாதி உயிர் இழக்கக் கூடாது, மனித உயிர்களை மதிக்க முடியாத தீவிரவாதிக்கு எப்படி மனித உரிமைக் கமிஷனும், இவரைப் போன்றவர்களும் வக்காலத்து வாங்குகின்றனரோ தெரியவில்லை.

ஒரு ஏழை பாடகன் முக்காலத்தையும் அறிந்து இந்திய விடுதலைக்கு முன்பே எழுதினான்:
நெஞ்சி லுரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே வாய்ச்சொல்லில் வீரரடீ.

கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே நாளில் மறப்பாரடீ.

சொந்த அரசும்புவிச் சுகங்களு மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ? - கிளியே அலிகளுக் கின்பமுண்டோ?

சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல்கண்டும்
சிந்தை யிரங்காரடீ - கிளியே செம்மை மறன்தாரடீ.

மேல் குறிப்பிட்ட அரசியல் வாதியை நம்பும் நம் நாட்டு மக்களைப் பற்றி இந்த மகா கவி பாடுகிறார்:

நெஞ்சு பொறுக்குதிலையே - இதை நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சமென்றே - நிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே - இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
-பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.

பித்தனின் கிறுக்கல்கள் - ஒரு துவக்கம்.
வலையில் வந்த முதல் பதிப்பு.
http://richmondtamilsangam.blogspot.com/2006/10/blog-post_04.html
'பித்தனின் கிறுக்கல்கள்' என்ற தலைப்பில் பல காரசாரமான விவாதங்களுக்கு அடித்தளமிடக்கூடிய கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிவு செய்து இந்த பகுதியைத் துவக்குகிறேன். இதில் இந்திய அரசியல், சமூகம், விளையாட்டு, அறிவியல், இலக்கியம், புதுக் கவிதைகள் (மரபுக் கவிதை அதிகம் பரிச்சயமில்லை), கட்டுரைகள், புத்தகங்கள், நகைச்சுவை காட்சிகள், கதைகள், பத்திரிகைகளின் திரை விமர்சனம், தொலைக்காட்சி, திரைப்படம் பற்றிய பல விஷயங்களை (நாகு, மூர்த்தி, முரளி, பரதேசி, பட்டாம்பூச்சி, தருமி(எந்த ஊர்) - ஷ - வட மொழியாச்சே பரவாயில்லையா?) இங்கு அலச இருக்கிறேன்.
இந்த கருத்துக்கள் என் தனிப்பட்ட கருத்துக்கள், இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை. இந்த எழுத்துக்கள் மூலம் என்னை எடை போட முயல்வது ஒரு காலவிரயம். எனக்கு இந்தப் பகுதியை துவக்கி எழுதலாம் என்கிற துணிவைத் தந்தது பலருடைய எழுத்துக்கள். 'சோ' -வின் - நினைத்தேன் எழுதுகிறேன், சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (கணையாழி இன்னும் வருதான்னு தெரியல), கண்ணதாசன் எழுதிய கடைசிப் பக்கங்கள், தி.ஜா வின் தெளிவான மற்றும் புதுமைப் பித்தனின் தைரியமான எழுத்துக்கள்.
பீடிகை போதும்னு நினைக்கிறேன். இனி......
தமிழ் நாட்டில் உள்ளாட்சி மற்றும் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல்.
இதனால் என்ன பயன்? எல்லா சுவர்களும் மேலும் கறைபடியும், சாராய விற்பனை வானைத்தொடும், முட்டை, கோழி வறுவல் வியாபாரம் தூள் பறக்கும், எல்லா காய்கறிகளும் கிலோ ரூ.50 க்கு விற்கும். ரேஷனில் எல்லா நாட்களும் எல்லா பொருட்களும் எல்லோருக்கும் கிடைக்கும். எல்லா கட்சிகாரர்களையும் (முதல்வரை கூட) சுலபமாக பார்க்கலாம். சன் டிவியில் தமிழ் நாடு எப்படி சுபிட்சமாக இருக்கிறது என்று காட்டுவார்கள். பஞ்சம், பட்டினி எல்லாம் தமிழ்நாட்டில் இல்லை என சத்தியம் செய்வார்கள். ஜே டிவியில் தமிழ்நாடு எப்படி குட்டிசுவராக இருக்கிறது என்று பட்டிமன்றமே போடுவார்கள். சோ துக்ளக்கில் கருணாநிதி எப்படி 2 ஏக்கர் கொடுக்காமல் இழுத்தடிப்பார் என்ற தன் சந்தேகத்தை எழுதுவார். விகடன்/ஜூ.விகடன் கருணாநிதியின் ராஜதந்திரம் பற்றி இரண்டு வாரம் எழுதுவார்கள். சென்னை தெருக்களுக்கு உடனடி மேக்கப் நடக்கும். கார்ப்பரேஷன் தண்ணீர் சென்னையில் நல்லா கிடைக்கும். மழை அதிகமானால் நிவாரணம் உடனே கிடைக்கும். அரசு ஊழியர்கள் சின்னதாக ஒரு அடையாள ஸ்ட்ரைக் செய்வார்கள், முதல்வர், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிபந்தனையின்றி உடனே ஒப்புக் கொள்வார். ஸ்டாலினும் - அழகிரியும் சண்டை இல்லாமல் பத்திரிகைகளுக்கு சிரித்த படி போஸ் கொடுப்பார்கள். சுப்ரமணியஸ்வாமி பத்திரிகையாளர்களைக் கூட்டி கருணாநிதி, தயாநிதி மாறன், சோனியா மூவரும் சேர்ந்து செய்த ஊழலைப் பற்றிய ஒரு முக்கிய தடயம் தன்னிடம் இருக்கிறது, இன்னும் ஒரே வாரத்தில் இவர்கள் அனைவரையும் பதவியிறக்குவேன் என்று சவால் விடுவார். தமிழக காங்கிரஸில் எந்த சண்டையும் இல்லை என்று எல்லா தமிழக காங்கிரஸாரும் அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிப்பார்கள். வைகோ தன் புலிப்பாசத்தை கொஞ்ச நாட்களுக்கு வெளிக் காட்டாமல் இருப்பார். தேர்தல் தினமும் மற்ற எல்லா தினங்களைப் போலவே சாதாரணமாக இருக்கும்.
சரி நமக்கு என்ன பயன்?
முகத்தை சோப்பு போட்டு அலம்பி நல்லா துடைத்து வைத்துக் கொண்டால் போதும், கழகங்கள், கட்சிகள் நல்லா, அழகா, பட்டையா ஒரு நாமத்தைப் போட்டுட்டு போயிட்டே இருப்பாங்க. ஜாக்கிரதை.
சமீபத்தில் பார்த்த படம்
'நாளை' - மிகச் சாதாரணமான கதை, நடிக-நடிகைகள் 4 அல்லது 5 பேர்தான் பழைய ஆட்கள் மற்ற அனைவரும் புதுசு. நிறைவான நடிப்பு, நல்ல காட்சி அமைப்பு எல்லாம் இருந்தும் வழக்கம் போல் கமர்ஷியலுக்காக 2 குத்து பாட்டு புகுத்தப்பட்டு, கடைசி காட்சியில் எல்லோரும் செத்து போய்விட 'அட போங்கடா'-ன்னு திட்டத்தான் தோணுது. S.V.சேகர் ஒரு நாடகத்தில் ஒரு drawing கொண்டு வந்து காட்டி அதில் "நான் ஒரு ரெயில்வே ஸ்டேஷனை வரைந்சு இருக்கேன், அதுல ரெயில் வந்து நிக்குது, ஜனங்க இறங்கி போறாங்க இதை எல்லாம் நான் தத்ரூபமா வரைந்சு இருக்கேன்", என்பார்.
அவர் friend "ரெயில் எங்கடா?"
சேகர்: "ஜனங்களை எறக்கி விட்டுட்டு ரெயில் போயிடுத்து"
friend: "ஜனங்க எங்கடா?"
சேகர்: "அவங்க என்ன ஸ்டேஷன்லேயேவா இருப்பாங்க, வீட்டுக்கு போயிட்டாங்க"
friend: "ஸ்டேஷன் எங்கடா?"
சேகர்: "அது சமீபத்தில புயல் அடிச்சுது இல்லை அப்ப அதுவும் அடிச்சுட்டு போயிடுத்து" என்பார். அதுதான் ஞாபகம் வந்தது.
-- கிறுக்கல்கள் தொடரும்.