நேரம்
Thursday, June 12, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 27
இது ஒன்றும் என்னைப் பற்றிய சுய மதிப்பீடு இல்லை. எனவே பயப்படாமல் படிக்கவும்.
பித்தன் யார் என்ற கேள்வி இன்னமும் பலருடைய மனதைக் குடைந்து கொண்டிருப்பது நண்பர்கள் பலரோடு பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தெரிந்தது.
அன்பே சிவம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்
"நாட்டுக் கொரு சேதி சொல்ல நாகரீகக் கோமாளி வந்தேனுங்க ...."
அதில் முத்தாய்ப்பாக ஒரு சில வரிகள்
"கரைகள் தூங்க விரும்பினாலும், அலைகள் விடுவதில்லை,
இலைகள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை,
ஓடி ஓடி ஒளிந்த போதும் வாழ்க்கை விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை, விடுவதில்லை....."
இதைப் போல நான் விலகி போக எவ்வளவு முயன்றாலும் நான் யார் என்று தெரிந்து கொள்ள பலர் ஆவலாக இருக்கிறார்கள். நான் யார் என்பதை நானே தேடி கண்டு கொள்ள முடியாத போது, என்னை யார் என்று பகுத்து, ஒரு கூண்டுக்குள் அடைக்க பலரும் முயன்று கொண்டிருக்கிறார்கள். அது ஏன் என்று விளங்கவில்லை.
அதோடு சேர்த்து என் நண்பர்கள் பலரையும் அவர்கள்தான் 'பித்தன்' என்ற பெயரில் எழுதுவதாக நினைத்துக் கொண்டு சற்று கோபத்தோடு பார்ப்பதாகவும் தகவல்.
என் நண்பன் ஒரு ஞாயிறு மாலை (6/1) அவனுடைய நண்பர் வீட்டுக்கு போயிருக்கான், அப்போ அங்க இன்னொரு friend-அ பார்த்திருக்கான், அவர் என் freiend-ப் பாத்து "நீ தானே அந்த பித்தன், எனக்கு எல்லாம் தெரியும்ன்னு அவனை சதாய்ச்சுருக்கார். அதுக்கு என் friend என்ன சொல்றதுன்னு தெரியாமல், அசட்டுத்தனமாக சிரிச்சுட்டு, சரி இந்த விளையாட்டு எவ்வளவு தூரம் போறதுன்னு பார்த்திடலாம்ன்னு சகட்டு மேனிக்கு ரீல் சுத்திட்டு வீட்டுக்குப் போறதுக்குள்ள எனக்கு கால் பண்ணி;
"அய்யா, ஒரு வழியா உம்மை காப்பாத்திட்டேன், அநேகமாக இனிமே உங்கள யாரும் திட்ட மாட்டாங்க, தப்பிசீங்க"ன்னான்.
"ஏன், என்ன ஆச்சு, எதை வெச்சு அப்படி சொல்ற, யார் கிட்டயிருந்து என்னைக் காப்பத்தின, அதைச் சொல்லு"
"யார் கேட்டாங்க, எங்க வெச்சு கேட்டாங்கன்னு சொல்ல மாட்டேன், ஆனா நிறைய பேர் நாந்தான் பித்தன்னு கண்டு பிடிச்சுட்டாங்களாம், இன்னிக்கு ஒருத்தர் என் கிட்ட சொல்லி என் ரெஸ்பான்ஸ் என்னன்னு குறு குறுன்னு பார்த்தார், எனக்கும் அதைக் கேட்டதும் கொஞ்சம் காமெடியா இருந்தது, சரி இந்த சாக்குல எனக்கும் கொஞ்சம் பாபுலாரிட்டி கிடைக்கட்டுமேன்னு நான் ஒன்னும் பெரிசா ஆர்க்யூ பண்ணாம அப்படியா, அதை ஏன் இப்படி அப்பட்டமா கேக்கரீங்கன்னு கேட்டவர் கிட்ட சொல்லிட்டு அந்த மேட்டரை அப்படியே கொஞ்சம் ஊதி பெரிசாக்கி விட்டுட்டேன். கேள்வி கேட்டவர் எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நிறைய பேர்கிட்ட சொல்லிடுவார், என்ன, இனிமே நான் எழுதர கதையை யாரும் படிக்க மாட்டாங்க, என்னை வெளியில வாசல்ல பார்த்தா, இதோ போறான் பித்தன்னு எல்லோர் எதிரிலும் சொல்லப் போராங்க, கோபமா முறைக்கப் போறாங்க, ஆனா, நீங்கதான் பித்தன்னு உங்களை யாரும் திட்ட மாட்டாங்க, இது எப்படி இருக்கு"ன்னான்.
"ஏன் இப்படி பண்ணினே, பேசாம, பித்தன் யாருன்னு சொல்லிடரதுதானே"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், "அட சும்மாயிருங்க, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நீங்கதான் பித்தன்ங்கரத கண்டு பிடிச்சேன், அதை சட்டுன்னு அடுத்தவங்களுக்கு ஏன் சொல்லனும், அவங்களே கண்டு பிடிக்கட்டும். இப்போ இந்த விஷயம் பரவினா பலர் என்னை பாக்கர இடத்திலேயே அடிப்பாங்கன்னு நினைக்கிறேன், அப்படி அடிச்சா, வலி தாங்காம ஒரு வேளை நான் சொல்லிடுவேன் அப்ப பாத்துக்கலாம், அது வரைக்கும், உங்க ஐடெண்டிடிய மறைச்சே வையுங்க"ன்னான்.
"சரி நான் இதையே ஒரு போஸ்டிங்கா ப்ளாக்ல போட்டா, உன்னை கேள்வி கேட்டவர் இதைப் படிச்சுட்டு உன்னைத் தப்பா நினைச்சுட்டா"ன்னு கேட்டேன்.
அதுக்கு அவன், "மொதல்ல உங்க ப்ளாகை ரிச்மண்டில் யார் படிக்கராங்க, நான், நீங்க, இன்னும் ஒன்னு ரெண்டு பேர், அதனால ரொம்ப Film காட்டாதீங்க, இருந்தாலும் உங்களப் போய் காப்பாத்த நினைச்சேனே என் புத்திய எதால அடிக்கரது, என்னமோ பண்ணித் தொலைங்க"ன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான்.
அதுக்குப் பிறகு, இந்த பதிவை எழுதலாமா, வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சேன், அப்புறம் எழுதினா என்ன ஆகும்னு யோசிச்சேன், என்ன என் friend கொஞ்சம் கோபப் படுவான், அவனை எப்படியாவது சமாளிச்சிடலாம்னு இதை எழுதிடறேன். அதோட என் மேல இருக்கர கோபத்தில அவனையும் அவனைப் போல கொஞ்ச நஞ்சம் எழுதர மற்ற பதிவர்களை எல்லாம் விரோதமா பாக்கரது நல்லா இருக்காதுங்கரதுனாலயும் இந்த பதிவை எழுதிட்டேன்.
நான் என் முதல் பதிவுல சொன்னது போல, என்னைக் கண்டு பிடிக்க முயல்வது ஒரு கால விரயம். என் கருத்துக்களை வைத்து பலரையும் 'பித்தன்' இந்த ஆளா, ஒரு வேளை அந்த ஆளோ? இல்லவே இல்லை இது அவந்தான், அட போங்கப்பா பித்தன் இவந்தான், என்று போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம், ஒரு வேண்டுகோள் என் மீதுள்ள கோபத்தில் பல நல்ல பதிவர்களை இழந்து விடாதீர்கள்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
ஒரு வழியாக டெமாக்ரட் பார்ட்டியின் ஒபாமாதான் அதிபர் தேர்தலுக்கு போட்டியிடப் போகும் வேட்பாளர் என்று தீர்மானம் செய்திருக்கிறார்கள். இப்போது அவரும் ரிபப்ளிக்கன் பார்ட்டியின் மெக்கெய்னும் இனி களத்தில் நேரடியாக மோதப் போகிறார்கள். அலுவலகத்திலும், நண்பர்கள் வட்டாரத்திலும் வாயைக் கிண்டியதில் கிடைத்த சில தகவல்கள்:
போட்டி சற்றுக் கடுமையாக இருக்கும்.
இருவரில் இவர் ஒசத்தி இவர் மட்டம் என்று சொல்ல முடியாது, ஏன் என்று அவர்கள் சொன்னதை நானும் சொல்லப் போவதில்லை.
இருவரில் ஒபாமா நல்ல பேச்சாளி.
இருவரில் மெக்கெய்னுக்கு அரசியல் அனுபவம் அதிகம்
இருவரில் ஒபாமா இளையவர், அதுவே அவருடைய பலம் மற்றும் பலவீனம்.
இருவரும் வாய்ப் பந்தல் போடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள்.
யார் வந்தாலும் போர் நிறுத்தம் (எங்கிருந்து என்று சொல்ல வேண்டியதில்லை) உடனடியாக இருக்காது
யார் வந்தாலும் பெட்ரோல் விலை குறையப் போவதில்லை
யார் வந்தாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையப் போவதில்லை.
யார் வந்தாலும் தனி மனித சம்பாத்தியம் உடனடியாக உயரப் போவதில்லை.
அது சரி இதெல்லாம் ஓட்டுரிமை இருந்து அந்தக் கடமையை செய்யரவங்களுக்கு, மற்றவர்கள்... வழக்கம் போல படிச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
Sunday, May 25, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 26
கவிக்கோ அப்துல் ரகுமான்
இவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பித்தன் என்ற பெயரில் நான் எழுத என்னுள் பல வருடங்களுக்கு முன்பே வித்திட்டவர் இவர். இவருடைய பித்தன் கவிதைத் தொகுப்பு குங்குமம் பத்திரிகையில் 90-ன் ஆரம்பத்தில் வெளியானது அதுதான் நான் முதன்முதலாக படித்த இவருடைய கவிதைகள். அதன் பிறகு இவருடைய பால்வீதி, நேயர் விருப்பம் தொகுப்புகளைத் தேடித் தேடி படித்தேன்.
பால்வீதித் தொகுப்பில் தீக்குளியல்(1974) என்ற கவிதை
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக் கொண்டு
இருவரும் எரிவோம் மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்டு
அணைந்ததும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக் கொண்டிருக்கும்.
இவரது பித்தன் கவிதைத் தொகுப்பை பற்றி நதியலை என்ற வலைப்பூவிலிருந்து :-
கவிக்கோவின் முன்னுரை:
என் ‘ஆலாபனை’யின் பாடகன் ‘நேர்’களின் ரசிகன்.
பித்தன் ‘எதிர்’களின் உபாசகன்.
எந்த நதியானாலும் எதிர் நீச்சலே போடுபவன்.
காரணம், அவன் உண்மையின் பின் பக்கத்தைப் பார்த்துவிட்டவன்.
அதனால் அறிவுச் சிறையிலிருந்து விடுதலை அடைந்தவன்.
அவன் இருளால் ஒளி பெற்றவன்
மர்மங்களின் ரசிகன்.
அதனால் ‘இருளிலிருந்து ஒளிக்கு’ என்ற முழக்கத்திற்கு எதிராக
‘ஒளியிலிருந்து இருளுக்கு’ என்று முழங்குபவன்.
அவன் புறப்படுகிறவன் அல்ல; திரும்புகிறவன்.
எழுப்ப அல்ல உறங்கவைக்க வந்தவன்.
அத்தனை முகங்களுக்கும் முத்தம் தருபவன்.
- அப்துல் ரகுமான்.
"பித்தன், பித்தன்" என்ற கூச்சல்களையும்
கற்களையும் அவன் மேல் எறிந்து கொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக் கோண்டிருந்தான். அவன்
காயங்களும் சிரித்துக் கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை முதன்முதல் கண்டேன்.
"நீ பித்தனா?" என்று கேட்டேன்.
"நீ கல்லா?" என்றான்.
நான் வலித்தேன்.
"நீ எப்படி பித்தன் ஆனாய்?" என்றேன்.
"ஒரு முறை தற்செயலாய் உண்மையைப்
பின்பக்கமாய்ப் பார்த்துவிட்டேன். முக்கால
இரவுகளுக்கும் ஆன சூர்யோதயம் நடந்தது.
எதிர்ப்பதங்கள் கை கோர்த்து நடனம் ஆடின.
அந்த தருணத்தில் அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்" என்றான்.
"அவர்கள் ஏன் உன்மேல் கல்லெறிகிறார்கள்?' என்றேன்.
நான் அவர்களுடைய அந்தரங்கத்தின்
கண்ணாடி. அதனால்தான் என்னை உடைக்கப் பார்க்கிறார்கள்" என்றான்.
"ஏன்?" என்றேன்.
"அவர்கள் வெளிப்படுவதற்கு பயப்படுகிறார்கள்.
வேஷங்களில் வசிப்பது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேஷம் கலைந்தால் மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய அம்பலம். கவனி!
அம்பலம் என் மேடையல்ல, என்
நடனம். அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள்" என்றான்.
நான் உடைந்தேன், யுகங்களின்
சீழ் வடிந்தது.
ஆடை
பித்தன் தன் சட்டையைக் கிழித்துக் கொண்டிருந்தான்
"ஏன் கிழிக்கிறாய்?" என்று கேட்டேன்.
"கடிதத்தை படிக்க வேண்டும் என்றால் உறையைக் கிழிக்கத்தானே வேண்டும்" என்றான்.
...
நீங்க்ள் ஆடைக்குள் காணாமல் போனீர்கள்.
உங்கள் முகவரி உங்கள் ஆடைகளில் இல்லை.
...
நீங்கள் நெருப்பாக இல்லை ஆனால் சாம்பலை அணிந்து கொள்கிறீர்கள்.
...
உங்கள் கண்ணில் துச்சாதனனும் இமையில் கண்ணனும் இருக்கிறார்கள்.
உங்கள் வண்ணான் குறிகளும் கறைதான் என்பதை
எப்போது உணரப் போகிறீர்கள்?
***********
நிகழ்
பித்தன் ஒரு காலைத் தூக்கியபடி நின்று கொண்டிருந்தான்.
"என்ன நடராஜ நடனமா? என்று கேட்டேன்.
அவன் சொன்னான் -
"இல்லை ஒரு காலையாவது நிகழ்காலத்தில் வைக்கப் பார்கிறேன். முடியவில்லை.
இட்ட அடி இறந்த காலத்தில், எடுத்த அடி எதிர்காலத்துக்கு, அந்த அடியிலும் இறந்த காலத்தின் புழுதி.
நிகழ்காலம் எங்கே இருக்கிறது?
'இருக்கிறேன்' என்று நீ சொல்லும் போதே
ஒவ்வோர் எழுத்தையும் இறந்த காலம் விழுங்கிக் கொண்டிருப்பதைப் பார்.
இறந்தகாலத்திலிருந்து எதிர்காலம் நோக்கிப் பறந்து கொண்டிருப்பதற்குப் பெயர்தான் வாழ்க்கை.
ஒய்ந்து அமரும் கிளைதான் மரணம்.
இறந்த காலம் கையை விட்டுப் போய்விட்டது. எதிர் காலம் கையில் வராதது. அதனால்தான் மனிதன் வெறுங் கையோடு நிற்கிறான்.
இறந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையில் கோடு கிழிக்க முயல்கிறாய். ஓடும் நீரில் கோடு எப்படி கிழிப்பாய்?
காலம் என்பதே ஒரு பொய்க் கணக்கு.
அதிலும் வரவு செலவு என்ற இரண்டுதான் உண்டு. நடுவில் ஒன்று இல்லை.
இறந்தகாலமும் எதிர்காலமும் காதலர்கள் நீங்கள் ஏன் பிரிவை உண்டாக்கப் பார்க்கிறீர்கள்.
காலண்டர்களும் முன்கூட்டியே அச்சடிக்கப்பட்டு விடுகின்றன. அதிலிருந்து கிழிக்கப்படும் தாள்களை வாங்கிக் கொள்ளச் சரித்திரம் காத்து நிற்கிறது.
நீங்கள் காலமாக விரும்புவதில்லை; அதனால்தான் காலமாகிவிடுகிறீர்கள்.
என்னைக் பாதித்த மற்ற சில வரிகள்:
*********
கூண்டுப் பறவை கூண்டின் கூரையையே வானம் என்றுவாதாடும்
ஓர் உரையை மட்டும் ஏற்பவன் உண்மையின் பல பரிமாணங்களைக் காணாமல் போய்விடுவான்
உங்களைக் குத்துவதற்காக முளைத்ததல்ல முள்.நீங்கள்தான் குத்திக்கொள்கிறீர்கள்.
அந்தச் சிறகு இல்லையென்றால் நீங்கள்
இந்த உயரங்களை அடைந்திருக்க மாட்டீர்கள்
Saturday, May 10, 2008
பித்தனின் கிறுக்கல்கள்
சென்னையில் +2 ரிசல்ட்ஸ் வந்தாச்சு. வழக்கம்போல மாணவிகள் அதிக சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ரொம்ப பாவம். சன் டிவி, பேர் வெச்ச டிவி, பேர் வெக்காத டி.வி எல்லாவற்றிலும் வரும் நடன நிகழ்ச்சிகள், ஸ்டார் ஷோஸ், எல்லாம் ஜொள் விட்டு பார்த்துட்டு, ரஜனி, விஜய், சிம்பு, அஜித் எல்லார் படங்களுக்கும் பாலபிஷேகம், பீர் அபிஷேகம் எல்லாம் பண்ணிட்டு அவங்க எப்ப பள்ளிக்கூடம் போகரது, எப்ப பாடம் படிக்கரது. மாலை வீட்டுக்கு வந்ததும், கல்லி கிரிக்கேட், மாடில கிரிக்கேட், வாசல்ல கிரிக்கேட், டிவி-ல 20-20 மாட்ச் எல்லாத்தையும் முடிச்சுட்டு படிக்கலாம்னு உக்காந்தா, 2 ரிவிஷன் எக்ஸாம் முடிந்து 3 வது ரிவிஷன் ஆரம்பிக்கர நாள் வந்துடரது, இதுக்கு பிறகு அவங்க புத்தகத்தை தேடி, படிச்சு, எப்படி அதிக சதவிகிதத்தில பாஸ் பண்றது. இதுக்கும் மேல எழுதினால் என் பதிவை படிக்கிர என் அம்மா அப்பா " பரிட்சை நேரத்துல இவன் ஆடாத கிரிக்கெட்டா, செய்யாத அக்கரமமா இப்ப என்னவோ இவன் ரொம்ப ஒழுங்கு மாதிரி எழுதரான் பார், இதுதான் கலி"ன்னு திட்ட ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி முடிச்சுக்கறேன்.
தங்கம் விற்பனை
தங்கம் என்னவோ அரிசி ரேட்டுக்கு வித்தாலும், வாங்கர கூட்டம் என்னவோ குறையவே இல்லை. அட்சய திரிதியையொட்டி கடந்த 2 நாட்களில் 70 டன் தங்க நகைகள் விற்பனையாகியிருக்கு. ஒரு க்ராம் விலை ரூ.1090/-. அதாவது 7,630 கோடி ரூபாய்க்கு விற்பனை ரெண்டு நாளில தமிழ்நாட்டில் மட்டும் நடந்திருக்கு. இதில் இந்தியா ஏழை நாடு என்று இன்னமும் சொலிக்கொண்டு, மூன்றாம் உலக நாடுகளில் இந்தியா ஒன்று என்று கிண்டல் வேறு செய்து கொண்டிருக்கிறார்கள்.
'வெத்து' அன்புமணிக்கு உச்ச நீதி மன்றம் கண்டனம்.
எய்ம்ஸ் முன்னால் இயக்குனர் வேணுகோபாலை பதிவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்ட திருத்தம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து மீண்டும் ஒரு முறை இந்தியாவில் சட்டத் துறையின் மாட்சிமையை காட்டியிருக்கிறது.
ரகுவரனுக்கு ஓர் அஞ்சலி
இது ஒரு காலங்கடந்த அஞ்சலி. எரிமலைகள் வெடிக்கும் போது சில ரோஜாக்கள் கருகுவது சாதாரணம் என்று சொல்லி கேட்டிருக்கிறேன். இதைச் சொன்னதற்காக ஒரு முறை வெட்டிப் பயலோடு சின்ன வாக்குவாதமும் செய்தேன். இப்போது ரகுவரனின் இந்த அஞ்சலியை எழுத முற்படும் போது, இந்த வரிகள் என் காதுகளில் ரீங்காரமிட்டது தற்செயல் என்று தள்ள முடியவில்லை.
ரகுவரன் ஒரு சிறந்த நடிகர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருடைய சிறந்த படங்கள் என்று கணக்கிலடங்காத பல படங்களைச் சொல்லலாம். ஏழாவது மனிதனின் சாதாரண ஒரு கதாபாத்திரத்தில் பரிமளித்தவர். என்னடா இந்த ஆள் இப்படி நெடு நெடுவென உயரமாக இருக்கிறாரே, இன்னொரு அமிதாப் பச்சனா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தது அந்த கால கட்டத்தில். அதற்குப் பிறகு அவருடைய காதாநாயகன் அந்தஸ்து கொஞ்சம் கீழே போன பிறகு சடாரென்று வில்லன் ரோல் செய்ய ஆரம்பித்து, சிரித்தபடியே கதாநாயகர்களை சித்தரவதை செய்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார். 'I Know' என்ற ஒரு வார்த்தையின் மூலமாக தான் எப்படி பட்ட குரூரமான மனநோயாளி என்பதை விளக்கியவர். சூர்யாவின் முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவருடைய அக்காவின் கணவராக வந்து அவருக்கும் விஜய்க்கும் பாலமாக நடித்ததும் எனக்கு நிரம்ப பிடித்த ஒன்று. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்.
முதல்வன் படத்தின் ஆணிவேர் என்றால் அது ரகுவரன் என்பது என் கருத்து. அர்ஜுன் ஒரு சராசரி நடிகர் அந்த நடிப்பு முதல்வன் படத்திற்கு போதாது என்பதைத் தெரிந்து கொண்டு ரகுவரனின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்து அந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ததில் ரகுவரனின் பங்கு மிகப் பெரியது. சிவப்பதிகாரம் படத்தில் ஒரு IAS அதிகாரியாக இருந்து பின்னர் ஒரு தேர்ந்த கல்லூரி பேராசிரியராக மாறி மாணவர் ஒருவரை வழிநடத்தி கேடு கெட்ட அரசியல் வாதிகளை பழிவாங்குவார். அவர் கைது செய்யப் பட்டு நீதி மன்றம் செல்லும் போது அவரிடம் ஒரு நிருபர் "இப்படி செய்ய நீங்கள் வெக்கப் படலையா" என்பார், அதற்கு அவர் ஒரு சிறிய சிரிப்போடு கடந்து செல்வார் அது நூறு வார்த்தைகளுக்கு சமம்.
இவருடைய மறைவு தமிழ் திரைஉலகிற்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னட திரை உலகிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதிலிருந்து இவருடைய முக்கியத்துவம் தெரிகிறது. அவருடைய மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், திரைஉலகத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
Democrats கட்சியில் தேர்தல் முஸ்தீபுகள் பரபரப்பாக இருந்தாலும், யார் அதிபர் தேர்தலில் நிற்கப் போகிறார்கள் என்பது புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஒபாமாவும், ஹில்லேரியும் இன்னமும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டிருக்கிறார்கள். இதே நேரம் Republican கட்சி மெக்கெய்னை தேர்ந்தெடுத்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி விட்டது. தற்சமயம் ஒபாமா முன்னனியில் இருப்பதாக தெரிந்தாலும், ஹில்லேரி எப்படியும் முன்னால் வந்துவிடுவார் என்று என் அலுவலகத்தில் வேலை செய்யும் சிலர் ஆரூடம் சொல்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் அவர்கள் சொன்னாலும் மிக முக்கியமாக அவருடைய மற்றும் பில் க்ளிண்டனின் அரசியல் செல்வாக்கு என்பது அவர்களுடைய கருத்து. இருந்தாலும் இந்த தேர்தல் முறை சற்று வியப்பாகத்தான் இருக்கிறது.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......
Tuesday, April 29, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 24
ஞானக்கூத்தன்
நான் முதன் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு இவருடைய 'அன்று வேறு கிழமை' தான். படித்து சுமார் ஒரு 20 வருடங்கள் இருக்கும். சமீபத்தில் மீண்டும் ஒரு முறை படித்த போது, காலங்களை கடந்த அவருடைய பார்வை ப்ரமிக்க வைக்கிறது. இவருடைய இந்த கவிதைத் தொகுப்பை பற்றி சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கங்களில் (அக்டோபர் 1973) இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"அழகாகப் பதிப்பிக்கப்பட்ட 'அன்று வேறு கிழமை'யில் ஞானக்கூத்தனின் திறமையை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.
ஞானக்கூத்தனின் கவிதைகள் யாப்புடன் அமைந்தவை. (மேலாகப் பார்த்தால் இது தெரியாது) எண்சீர், அறுசீர் கலிவிருத்தங்களில் அமைந்தவை. இஷ்டத்திற்குச் சில வேளைகளில், விஷயம் தெரிந்த ஒருவரின் பெயர் நிலையிலிருந்து, சந்தங்களைக் கலக்கிறார். கிடைப்பது ஞானக்கூத்தனுக்கே உரித்தான ஒரு அமைப்பு. ஆனால் யாப்புடன் இன்றைய தின நவீன விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை மறுபடி மறுபடி நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் யாப்பை மீறிப் புதுக் கவிதை எழுதும் முதல் தகுதியை இவர் சுலபமாகப் பெறுகிறார். இது இவர் துருப்புச்சீட்டு, வைத்திருக்கிறார் இன்னும் உபயோகிக்கவில்லை.
'கால வழு அமைதி' என்கிற கவிதையைத் தொகுப்பில் சிறந்த கவிதையாக நான் சொல்வேன். இந்தக் கவிதையை துல்யமான எண்சீர் விருத்தமாகப் படிக்கலாம். அதைவிட ஒலி பெருக்கி அலறும் பொதுக் கூட்ட இரைச்சலின் பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக் குரலில் படிக்கலாம். படிக்க வேண்டும்.
ஞானக்கூத்தனின் உவமைகளில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன. எது எதற்கு உவமையாகப் போகிறது என்கிற ஆச்சர்யம்.
உதாரணங்கள்
மணி அறியாப் பள்ளிகளில் மணியாக உதவும் தண்டவாளத் துண்டு - பாரதி இல்லாத நாட்டில் லோக்கல் கவிஞன்
எழுதக் குவிந்த கை - குன்று,
தையற்காரன் புறக்கணித்த துணித் துண்டுகள் - பூக்கள்,
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி - நிலம்
.....
.....
.....
ஞானக்கூத்தனைப் பாகுபடுத்துவது கஷ்டம். அவர் வரிகளை ரசிப்பதும், அவைகளில் நம்மையே கண்டுபிடிப்பதும் சுலபம்.
சுஜாதாவின் அணிந்துரையைக் கடந்து 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகள்.....
கால வழு அமைதி (ஜூலை 1969)
"தலைவரார்களேங்.......
தமிழ்ப் பெருமக்களேங் ... வணக்கொம்
தொண்ணூறாம் வாட்டத்தில் வாழும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தினம்
கண்ணீரில் பசிதொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்"
'வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ'
"வளமான தாமிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொணக்குவியல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வண்க்கொம்"
இன்னுமிரு வர்பேச இருக்கிறார்கள்
அமைதி ... அமைதி ...
நாய் (அக்டோபர், 1969)
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலத் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?
ஸ்ரீலஸ்ரீ (ஏப்ரல் 1971)
யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்
கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்
காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பை பொத்து வரக்கண்டான்
யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார், அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்
நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு.
இவருடைய கவிதைகளில் யாப்பு அணி எண்சீர் என்று சுஜாதா சொல்வது எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் இருக்கும் நிஜம் முகத்தில் அறைவது அருமை. உதாரணத்திற்கு சில கீழே, இவர் எழுதியிருப்பது 70களில் என்றாலும் அவை இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவது சிறப்புதான்.
(1)
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்
ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்
(2)
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்.
(3)
சூளைச் செங்கல் குவியலில்
தனிக்கல் ஒன்று சரிகிறது
(4)
சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்......
Tuesday, April 22, 2008
பித்தனின் கிறுக்கல்கள்
தமிழ் புத்தாண்டு
இனி தை மாதம்தான் தமிழ் புத்தாண்டு என்று ஒரு தீர்மானம் தமிழ சட்ட சபையில் கொண்டு வரப்பட்டதே அதை நீ மதிக்க வேண்டாமா என்று என்னை திட்ட யோசிப்பவர்கள், அடுத்த இரண்டு பத்தியை தாண்டி மூன்றாவது பத்தியிலிருந்து படிக்கவும்.
ஒரு பழமையான வழக்கத்தை, ஒரு சில அதி மேதாவிகள் தங்களின் ஆணவத்தினால் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மாற்றியது சரி என்றால், அதைப் பின்பற்ற வேண்டாம் என்கிற எனது தீர்மானமும் சரி. ஆமாம், இனி ஜனவரி முதல் தேதிதான் ஆங்கில வருடத்தின் முதல் தேதி என்பதை ஏப்ரல் முதல் தேதி என்று வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், வருட முதல் தேதியை கொண்டாடும் அதே நேரம் முட்டாள்கள் தினம் கொண்டாடியது போலவும் இருக்கும்.
பாரதி தனது யோக சித்தி பாடலில் பாடுகிறார்.
தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
இதில் கடைசி வரியைத் தவிர மற்ற அனைத்து வரிகளும் இன்றைய தமிழக அரசியல்வாதிகளை பார்த்து பாரதி எழுதியதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
இனி ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சிகள்
வழக்கம் போல நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் 3 நிகழ்ச்சிகள் முடிந்த பிறகுதான் கலந்து கொண்டேன். அதற்கு முழு காரணம் மொத்த காரணமும் அடியேன் தான். 'அடியேன்'னு சொன்ன உடனே அடிக்க வராதீங்க.
முதலில் வந்த தமிழ்த் தாய் வாழ்த்து, காவடியாட்டம், மற்றும் கண்ணன் குழலோசை நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியவில்லை. மொத்த நிகழ்ச்சியையும் சங்கத்தின் சார்பாக ஒளிப்பதிவு செய்வதாக அறிவித்தார் நண்பர் கார்த்திகேயன், அது வெளிவரும் போது பார்த்து விட்டு எழுதுகிறேன். ஆமா அவர் என்ன பின்னனிக் குரல் மட்டும் தருவதாக ஒப்புக் கொண்டாரா? அறிவிப்பாளர்கள் வெளியில் வந்து பேசினால்தான் கொஞ்சமாவது யாராவது கேட்பார்கள், பூனை மாதிரி திரைக்கு பின்புறமே இருந்தால் அதற்கு எதற்கு அறிவிப்பாளர்? கார்த்திகேயன் எனது நல்ல நண்பர் (இந்த பதிவு வரும் வரையில், இதைப் படித்த பிறகு அனேகமாக என்னை வழியில் பார்த்தால் அடி தான் என நினைக்கிறேன்).
பாரத விலாஸ் பாடல்
என் இள வயதில் இந்தப் பாடலுக்கு பல முறை வீட்டில் ஆடியிருக்கிறேன். 'இந்திய நாடு என் வீடு' என்று பாடுவதற்கு ஒரு கவிஞருக்கு நிஜமாகவே மிகப் பெரிய மனது வேண்டும். இந்தப் பாடலை எழுதியது வாலி என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் என்று சொல்லக் கூடாது, சிறு மொட்டுகள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் அழாமல், அருமையாக வந்து நடந்ததே ஒரு நடனம்தான். இந்தக் குழந்தைகளை தயார் செய்த தாய்மார்களின் உழைப்புக்கு ஒரு ஜே போட வேண்டும். அதோடு இப்படி அழகு நடை நடந்த குழந்தைகள் அனைவருக்கும் ஒர் சூப்பர் ஜே போட வேண்டும்.
மாமா மாமா பாடல்/ குறத்தி நடனம்
MR ராதா நடித்து நடனம் ஆடுவது போல பாவ்லா காட்டி டூயட் பாடுய ஒரு (ஒரே) பாடல் இதுதான் என்று நினைக்கிறேன். படம் பெயர் நினைவில் இல்லை. ஆனால், அந்தப் பாடலின் எளிமை, பின்னனி இசையின் இனிமை காலத்தால் அழியாத ஒன்று. அதற்கு நடமாடிய குழந்தைகள் பின்னி விட்டார்கள். பல குட்டி குறத்திகளின் நடுவே ஒரே ஒரு குட்டிக் குறவன் வந்து கலக்கிய நிகழ்ச்சி குறத்தி நடனம். அவர்கள் உடை, அவர்களின் நடனம், அவர்களின் சிரிப்பு என்று எதை எடுத்தாலும் அழகு மிளிர்ந்தது இந்த நிகழ்ச்சியில். தற்சமயம் தமிழ் சங்க நிகழ்ச்சிகளில் நாட்டியமாடும் பலருக்கு வெகு விரைவில் மேடையில் இடம் கிடைக்காமல் செய்ய போகிறார்கள் இந்த சிறுமிகள்.
பையன்களின் நடனம்
பையன்களின் நடனங்களில் முதல் நடன நிகழ்ச்சி ஒயிலாட்டம். ஆடிய அனைவரும் தாளத்துக்கு ஏற்ப ஆடினாலும், மனோஜ் சிரித்தபடியே ஆடி கலக்கி விட்டார். அடுத்த நடனம் எல்லாம் வல்ல இறைவா பாடலுக்கு இன்னும் நாலு பேர் ஆடி பின்னினார்கள்.
பரத நாட்டியம் / சின்னக் குயில் நடனம்
நான்கு சிறுமிகள் அவர்களே நடன ஒருங்கிணைப்பு செய்து கொண்டு அசத்தினார்கள். அடுத்து 5 சிறுமிகள் சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலுக்கு நடனமாடி பின்னினார்கள்.
புதுவருடம் சேர்ந்திசை
மிக நன்றாக இருந்த மீனாவின் பாடலை பலரும் சேர்ந்து பாடிய இந்த நிகழ்ச்சி ஒரு புதிய முயற்சி. பல வருடங்களுக்கு முன்பு சென்னைத் தொலைக்காட்சியில் M.B. ஸ்ரீனிவாசன் என்று ஒருவர் இப்படி ஒரு சேர்ந்திசை நிகழ்ச்சியை நடத்துவார். அப்படி ஒரு நிகழ்ச்சியைப் பார்த்த உணர்வு கிட்டியது. சங்கீதம் பவுண்ட் என்ன விலை என்றுகூடத் தெரியாத எனக்கு சேர்ந்திசைக்கு பதில் ஏன் ஒருவரோ அல்லது இருவரோ பாடியிருக்கக் கூடாது என்று தோன்றியது. பலர் சேர்ந்து பாடும் போது, கும்பலில் யார் பாடுகிறார் யார் பாடவில்லை என்பது தெரியாமல் போய் கும்பலில் கோவிந்தா மாதிரி ஆகிவிடுகிறது. அடுத்த முறை நானும் பாடலாம் போல இருக்கிறது. யாரும் கல் எடுத்து என்னை அடிக்க முடியாது, கேட்டால், நான் நல்லா தான் பாடினேன், பக்கத்தில இருக்கரவங்கதான் சுருதி தப்பி பாடினாங்கன்னு சொல்லி தப்பிச்சுக்கலாம், நானும் மேடையேறியது போலவும் இருக்கும், நாகு, அடுத்த கலை நிகழ்ச்சியில் எனக்கும் ஒரு இடம் ப்ளீஸ்.....
குச்சுப்புடி நடனம்
பவனரூபா என்பவர் கண்ணனின் லீலைகளை ரசிக்கும் படியாக ஆடினார். குச்சுப்புடி நடனத்தை தகுந்த நடன ஆடைக்கு பதிலாக சாதாரண சூடிதார் அணிந்து ஆடியதால் சற்று ஒட்டாமல் இருந்தது.
திரை இசை நிகழ்ச்சி
நிவிதா சரவணனின் பாடல்: இவர் ரிச்மண்டிற்கு புதியவரா என்பது தெரியவில்லை. சற்றும் தயக்கமின்றி ஷலாலா பாடலைப் பாடினார். பாடலை பின்னனி இசையின்றி பாடுவது ஒரு வகை, மேடையில் பின்னனி இசையோடு பாடுவது மற்றொரு வகை, அதிலும் பின்னனி இசையை கரியோக்கி முறையில் ஒலிபரப்பி அதனூடே பாடுவது மூன்றாவது வகை. அதற்கு தகுந்த பயிற்சி அவசியம். இவர் அந்த மூன்றாவது வகையில் பாடல் பாடினார், சொல்லப் போனால், குறையொன்றும் இல்லை பாடிய ப்ரியங்காவைத் தவிர பாடிய அஷ்வின் நாராயணன், ஹரிணி, அரவிந்த், சூர்யா, ஜனனி, அங்கிதா மற்றும் நாராயணன் அனைவரும் இதே முறையில்தான் பாடினர். அரவிந்தனும், நாராயணனும் பண்பட்ட பாடகர்கள் ஆகையால் அவர்கள் பாடியது வழக்கம் போல அசத்தலாக இருந்தது. அதிலும் அவர்கள் சற்று ராக ஆலாபனை போல செய்து விட்டு பொன் ஒன்று கண்டேன் பாடியது கலக்கல். சில காலங்களுக்கு முன்பு இருவரும் சேர்ந்து 'நாளை நமதே' பாடினார்கள், இப்போது 'பொன் ஒன்று கண்டேன்' பாடியிருக்கிறார்கள். அடுத்து என்ன பாடுவார்கள் என்று யோசித்தால் "காட்டுக் குயிலு மனசுக்குள்ள" பாடுவார்கள் என்று நினைக்கிறேன், அதற்கு பிறகு "என்னம்மா கண்ணு" பாடுவார்களோ? இந்த வரிசையில் வேறு என்ன பாட்டு இருக்கிறது என்று யாராவது பின்னூட்டமிடலாம்.
ஜனனி, மொழி படத்திலிருந்து 'காற்றின் மொழி' பாடி அசத்தினார். மிக அனுபவித்து பாடி சக்கை போடு போட்டார். அஷ்வின், கஜனி படத்திலிருந்து 'ஒரு மாலை இளவெயில் நேரம்' பாடினார், சில இடங்களில் மைக் தொந்தரவு செய்தாலும், இவர் சர்வ சாதாரணமாக பாடி அசத்தினார். டிங் டாங் கோயில் மணி பாடிய ஹரிணி சற்று பயந்தது போலவே பாடினாலும் மிக நன்றாகவே பாடினார். சூர்யா பாட, கார்த்திக் ஆடினார், அங்கீதாவும் நாராயணனும் பாட, ஜனனியும் ஸ்வேதாவும் ஆட புதிய முறையில் பாடல் நிகழ்ச்சியைத் தந்தார்கள். ஆர்த்தி ஜூன் போனால் ஜூலை காற்றே பாடலை க்ளாரினெடில் வாசித்தார்.
மகளிர் நடனம்
இந்த முறை பல பெண்மணிகள் குத்துன்னா குத்து எங்க வீட்டு குத்தா, உங்க வீட்டு குத்தா என்று தெரியாத வகையில் இரண்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு அசத்தினார்கள். சிறு பெண்கள் சினிமா பாடலுக்கு ஆடுவது அவ்வளவு வித்தியாசமாகத் தெரியவில்லை, ஆனால் பெண்மணிகள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடாமல், நம் சங்கத்தின் முந்தைய ஒரு விழாவில் சிலர் ஒரு தொலைக்காட்சித் தொடரின் Title Song-க்கு நடனம் ஆடியது போலவோ அல்லது ஒரு கும்மியாட்டம், கோலாட்டம் போலவோ செய்தால் நன்றாக இருக்கும். சினிமாவில் வரும் குத்தாட்டம் 'D' சென்டர் ரசிகர்களை மகிழ்விக்கவும், Movie Distributor-களையும் மகிழ்விக்க இருக்கும் ஒரு உத்தி, அந்தப் பாடல்களின் வரிகளும் அபத்தம், இசை அபத்தமோ அபத்தம் என்பது என் கருத்து. அது, நமது சங்கத்தின் லட்சோப லட்சம் உறுப்பினர்களின் கருத்துக்கு எதிர் என்றும் எனக்குத் தெரியும், இந்த விமர்சனத்திற்காக என்னை சற்று கட்டம் கட்டி திட்டப் போகிறார்கள் என்பதும் தெரியும்.
சுஜாதா
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலி மறக்காமல் வந்து பார்க்கும் படி நாகு சொல்லியிருந்தார். அதை ரவியும் முரளியும் சேர்ந்து அளித்த முறை நன்றாக இருந்தது. அதில் நேரமின்மையோ என்னவோ தெரியவில்லை, பல விஷயங்களைச் சொல்லாமல் விட்டு விட்டார்கள். அவருடைய கணையாழியின் கடைசிப் பக்கங்கள், அதிலும் அவருடைய நாடக உலக மாற்றங்கள் கண்டிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று. அவர் நாடகங்களில் மாறுதல்களை கொண்டு வந்த போது, சமூக நாடகங்கள் (கோமல் ஸ்வாமிநாதன், விசு,கல்தூண் திலக் போன்றோர்), சரித்திர நாடகங்கள் (R.S. மனோகர், ஹெரான் ராமசாமி), நகைச்சுவை நாடகங்கள் (S.V. சேகர், க்ரேஸி மோகன்) என்று மூன்று வகையான நாடகங்கள்தான் வெளிவந்து கொண்டிருந்தன, இவருடைய, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு வந்த பிறகு நாடக உலகமே ஆட்டம் கண்டது, பிறகு வந்த ஊஞ்சல், அன்புள்ள அப்பா, வந்தவன் போன்ற நாடகங்கள் ஒரு வட்டத்துக்குள் நாடகம் நடித்தவர்களை புரட்டிப் போட்டது.
அவர் ஸ்ரீகாந்தின் முதல் டெஸ்ட் மாட்சை பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார், அதில் ஸ்ரீகாந்த் எதற்கும் பொறுமையில்லாமல், டாஸ் போட்ட உடனே விளாசத் தயாராகி விடுகிறார் அது சரியில்லை என்பது என் கருத்து. முதல் டெஸ்ட்டில் பந்தை டிஃபன்ஸ் செய்து விட்டு ரொம்ப வேர்கிறதே என்று க்ரீஸுக்கு வெளியே கொஞ்சம் காத்து வாங்கப் போனார், படக் கென்று ஸ்டெம்பை முறித்து ரன் அவுட் என்று வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்று எழுதியிருந்தார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியையும் சட்டென்று முடித்தது இதைப் போலத்தான் இருந்தது.
நிகழ்ச்சி நிரல் தயாரித்தவர்கள் அருமையான ஒரு ஏற்பாடு செய்திருந்தனர். முதலில் சின்னஞ் சிறார்களின் நிகழ்ச்சி, அடுத்து சற்று பெரிய குழந்தைகளின் நிகழ்ச்சி, என்று படிப் படியாக உயர்ந்து கடைசியில் பெண்மணிகளின் நடனம் என்று முடித்த விதத்தினால் கடைசி வரை எல்லோரும் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க வைத்தனர். அதே போல் நிகழ்ச்சிகளில் பங்கு பெறாத குழந்தைகளின் குடும்பங்களை எப்படி இது போன்ற விழாவிற்கு வர வைப்பது என்று யாராவது கண்டு பிடிக்க வேண்டும். போன முறை விழாவிற்கு வந்த குடும்பங்கள், நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற குடும்பங்கள் பல இந்த முறை வரவில்லை. ஒரே சமயத்தில் அத்தனை பேருக்கும் அவ்வளவு முக்கியமான வேலை இருந்திருக்குமோ?
கடைசியாக ஒரு செய்தி - சங்கத்தின் விழாவில் கலந்து கொள்ளுபவர்களின் எண்ணிக்கை அதிகமாவதோடு, அவர்களின் ஒப்பனைகள் மிக மிக அற்புதமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக குறவன் - குறத்தி உடை மற்றும் சின்னச் சின்ன வண்ணக் குயில் பாடலுக்கு ஆடியவர்களின் உடை அபாரம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்
Sunday, March 30, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 21
Monday, March 17, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 20
God Father
இந்த புத்தகத்தை சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒரு முறை படித்தேன். இது ஒரு சரித்திர ப்ரசித்தி பெற்ற கதை. வரிக்கு வரி (சில வரிகள் R ரகம் அவை தவிர மற்ற வரிகள்) எல்லாமே அருமையான வரிகள். நாயகன் கதை இந்தக் கதையின் உல்டா இல்லை, அது 80 களில் தாராவியில் வாழ்ந்த வரதராஜ முதலியார் கதையும் இல்லை என்று கமலும், மணிரத்தினமும் சூடம் அடித்து சத்தியம் செய்திருக்கிறார்கள். அதை நம்பி விடுங்கள். இந்தக் கதை பற்றியோ, அந்தத் திரைப் படம் பற்றியோ நான் எழுதப் போவதில்லை. ஒரு கதை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும், ஒரு திரைக்கதையை எப்படி அமைக்க வேண்டும் என்பதற்கும் இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு. கதாபாத்திரங்களின் படைப்பு, அவர்களின் குணாதிசயங்கள், காட்சிகளின் தொகுப்பு என்று வரிக்கு வரி படிப்பவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருத்தல் என்று கதாசிரியரின் சாமர்த்தியம் நம்மை ப்ரமிக்க வைக்கிறது.
Shall we tell the President
இந்த புத்தகத்தை பல வருடங்களுக்குப் பின்பு மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அன்று இருந்த அதே விறுவிறுப்பு இன்றும் இருப்பது ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். கதை: அமெரிக்க அதிபரை கொலை செய்ய நடக்கும் முயற்சியும் அதைத் தடுக்க முயலும் அதிகாரிகளும் பற்றிய கதை.
இதைப் படிக்க ஆரம்பித்ததும் நண்பரிடம், "கதை என்ன விறுவிறுப்பு தெரியுமா, அன்னிக்கு படிச்ச மாதிரியே இன்னிக்கும் இருக்கு" என்று பெருமையாக பீத்திக்கொண்டேன். அதற்கு அவர், "நீ, இதுக்கு முன்னாடி புத்தகமே படிச்சதில்லையா? குப்பை எழுத்தாளருக்கெல்லாம் இப்படி வக்காலத்து வாங்கரே? என்னவோ கிறுக்கரேன்னு சொல்லிட்டு, புத்தக விமர்சனம் சமீபத்தில பண்ணினியே, அந்த தமிழ் கதையாவது படிச்சுட்டு எழுதினியா, இல்லை கேட்டுட்டு எழுதினியா? என்றார். சொடேர் சொடேர் என்று யாரோ தலைமேல் போட்ட மாதிரி இருந்தது. நாம என்னவோ பெரிய பருப்பு மாதிரி விமர்சனம் எழுதறோம், ஆனா யாரும் இப்படி செவிட்டு இழுப்பு இழுக்கலையே ஏன் -ன்னு கொஞ்சம் யோசிச்சேன். பொழச்சுப் போறான் கொழந்தைப் பய-ன்னு விட்டுட்டாங்க போல இருக்கு சரி இனிமே கொஞ்சம் ஜாக்ரதையா எழுதனும்னு முடிவு பண்ணியிருக்கேன். முடிவு பண்ணினா மாதிரி, கதையை பொறுமையா படிச்சு முடிச்சேன். அதுல நண்பர் சொன்ன பல விஷயங்கள் புரிஞ்சுது.
முன்பு படித்ததற்கும் இப்போதைக்கும் பல வித்தியாசங்கள், ஒன்று - கதையில் இருக்கும் அதீத ஓட்டைகள், இரண்டு - அதை அடைக்க முயலாத கதாசிரியர், மூன்று - தேவையில்லாத கதைத் தொகுப்பு, நான்கு - பரமார்த்த குருவின் சீடர்கள் போல உள்ள மத்திய புலனாய்வுத் துறை. நம்மூரில் எஸ்.ஏ. ராஜ்குமார் என்று ஒரு மகானுபாவர் இருக்கிறார். ஒரு படத்துக்கு ஒரு பின்னனி இசைதான் போடுவார், அதையே படம் முழுக்க ஓட்டுவார். அது மாதிரி, இந்தக் கதையில் மாத்தி மாத்தி, "Sir Shall We tell the President" -ன்னு ஒருத்தர் கேட்டுகிட்டே இருக்கார், என்ன லாஜிக்கோ.
நண்பர் கூடவே, Desmond Bagley-ன் Running Blind படிச்சுட்டு சொல்லுன்னார். நூலகத்தில தேடி கண்டுபிடிச்சு கொண்டு வந்துட்டேன். முதல் பக்கத்திலேயே போட்டு தாக்கியிருக்கார்.
"ஒரு ப்ரேதத்தை சுமந்து இருப்பது ரொம்ப அவஸ்தையான ஒரு விஷயம். அதிலும் இந்தப் ப்ரேதத்திற்கு ஒரு இறப்பு சான்றிதழ் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகு. எந்த மருத்துவரும், ஏன் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு சற்று முன் வந்த ஒரு மருத்துவரும்கூட இந்த இறப்பின் காரணத்தை சொல்லி விட முடியும். இந்த மனிதன் இருதயம் வேலை செய்யாததால் இறந்து விட்டான்.
இவனுடைய இருதயம் இரத்தத்தை மேலும் கீழும் செலுத்த முடியாதபடி ஒரு கூர்மையான உலோகத்தால் விலாவில் குத்தப்பட்டு, அது இருதயத்தைத் துளைத்து, இரத்தம் அதிகமாக வெளியேறி இருதயம் துடிப்பது நின்று போய் இறந்து விட்டான்.
நான் இவனுக்காக ஒரு மருத்துவரை தேடப்போவதில்லை, காரணம், இவனைக் குத்திய கத்தி என்னுடையது, அது அவனைக் குத்தும் போது, அந்தக் கத்தி எனது கையில்தான் இருந்தது. ....."
கமல் பாடின மாதிரி, துடிக்குது புஜம், தகிட தத்தீம் தத்தீம் ன்னு மண்டை இடி ஆரம்பிச்சுடுச்சு, இனி அடுத்த 3-4 நாட்கள் தூக்கம் போச்சு, வீட்டு வேலை எல்லாம் நின்னாச்சு, வீட்டுக்காரம்மா திட்டறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சாச்சு. இருந்தாலும் படிக்கரத நம்மால நிறுத்த முடியாது. அதனால படிச்சு முடிச்சதும், கதைச் சுருக்கம் எழுதறேன்.
அரசியல் அசிங்கம்
இந்தப் பதிவு வெளியாகும் போது, நியூயார்க் மாநில ஆளுனரின் மீது கொண்டுவரப் பட்டுள்ள குற்றச்சாட்டை அனைவரும் படித்து சீ தூ என இகழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். ஆமா ஜனநாயகக் கட்சில (நாகுதான் மொழிபெயர்த்து சொன்னார் - டெமாக்ரெட்டிக் கட்சின்னா ஜனநாயகக் கட்சின்னு, தப்புன்னா அவரை ரெண்டு தப்பு தப்புங்க) இப்படி கொஞ்சம் ஜொள்ளர்கள் அதிகம் இருக்கரமாதிரி இருக்கே என்ன காரணம். அங்க சில்லறை அதிகமோ? இப்படி ஊரே அந்தச் செயலைப் பற்றி பேசி, வருந்தும் போது, ரிச்மண்ட் டைம்ஸ் டிஸ்பாட்ச் தினசரியில் இது வரை அரசியலில் ப்ரபலமாக இருந்த யார் யாரெல்லாம் இது போல கெட்ட காரியம் செய்து மாட்டினார்கள் என்று விலாவரியாக எழுதி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள். தேவையா இது?
இதுவே நம்ம ஊராயிருந்தா என்ன ஆயிருக்கும், உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.
யாருக்கும் வெட்கமில்லை.
அ.தி.மு.க சார்ந்த ராஜ்யசபா உறுப்பினராக தன்னை மீண்டும் தேர்வு செய்யாததால், அக்கட்சியின் வழக்கறிஞர் திரு. ஜோதி கட்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார். அதைக் கண்டித்து செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தியில்
"கீழ்க் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை பல்வேறு முக்கியமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வழக்குகளிலிருந்து விலகிக் கொள்வதாக ஜோதி தெரிவித்துள்ளார்.ஜோதியின் செயல் மிகவும் கண்ணியக்குறைவானதாகும். சட்டத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் யாரும் இப்படி நடந்து கொண்டதாக சரித்திரமே இல்லை. சட்டத்துறைக்கே அவர் களங்கம் ஏற்படுத்தி விட்டார்.அதிமுக தொடர்பாக 113 வழக்குகள் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் சொல்லாமல் கொள்ளாமல் ஜோதி விலகியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய செயலாகும்.கடந்த மார்ச் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு முக்கிய வழக்கில் ஆஜராகியிருந்த ஜோதி, தனக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும், வழக்கிலிருந்து பாதியிலேயே விலகி வெளியேறியுள்ளார். இது சட்டத் தொழிலை கொலை செய்வதற்கு சமம். மிகவும் தரக்குறைவான செயல். தான் சார்ந்த கட்சிக்கு அவர் துரோகம் செய்து விட்டார். கட்சி நலனுக்கு எதிராக அவர் செயல்பட்டுள்ளார். எனவே ஜோதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது"
என்று கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் 113 வழக்கு இருக்கிறது என்பது என்ன விதமான நல்ல செய்தி என்று தெரியவில்லை, அதை ஒரு பெருமையாக சொல்லக் கூடிய நிலையில் இன்றைய அரசியல் இருக்கிறது. இதற்கு திரு. ஜோதி அவர்களின் பதில் சூப்பரோ சூப்பர். நான் எனது வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விலகுவது இது ஒன்றும் முதல் தடவையில்லை. இதற்கு 10 மாதங்களுக்கு முன்பே ஒரு முறை சசிகலாவின் உறவினரின் ஆதிக்கம் அதிகமான போது, நான் எனது பொறுப்புகளையும், கட்சியிலிருந்து விலகுவது பற்றியும் மேலிடத்திற்கு தெரிவித்த பிறகு அவர்கள் என்னை சமாதானம் செய்ததால் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டேன் என்று ஹிந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். நல்ல கட்சித் தலைமை, நல்ல வழக்கறிஞர். இதைப் படிக்கும் போது 'சோ'வின் "யாருக்கும் வெட்கமில்லை" நாடகத் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது.
பித்தனின் சங்கு
முதல் சங்கு:
சங்கத்து ப்ளாக் திடீரென மாம்பலம் ரங்கநாதன் தெரு மாதிரி ஆகிவிட்டது. உடனடியாக வேறு சில மாற்றங்கள் செய்து நெரிசலை சமாளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யார் காதில் போடவேண்டும் என்று தெரியாததால், பொதுவாக சொல்லிவிட்டேன்.
இரண்டாவது சங்கு:
சங்கத்து ப்ளாகில் வரும் சதங்கா மற்றும் கவிநயாவின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட யாராவது ஒரு முயற்சி செய்யலாமே.
மூன்றாவது சங்கு:
கவிநயா, சதங்கா இருவரும் சேர்ந்தோ அல்லது தனியாகவோ, கவிதை எழுதுவது எப்படி என்று ஒரு வகுப்பு எடுக்கச் சொல்லாமே, அதிலும் வெண்பா இலக்கணங்களையும் சொல்லிக் கொடுக்க செய்யலாம். எப்ப பார்த்தாலும் இவங்க ரெண்டு பேர் மட்டும் அழகழகா கவிதை எழுதி போட்டு தாக்கராங்க. நாங்க என்ன செய்யரது.
பொறுத்தது போதும் பொங்கி எழுன்னு நாங்க இப்படி ஒரு கவிதை எழுதிடுவோம்.
'நான் காத்து வாங்கப் போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனான்
அந்த வண்ணான் என்ன ஆனான்".
இது எப்படி இருக்கு. கவிதைன்னா சொந்தமா எழுதனும்னு என்ன சாத்திரமா? இப்படி எம்.ஜி.ஆர். பாட்டை ஒட்டி வெட்டி சுயமா ஒரு கவிதை எழுதிடுவோம், தெரியுமில்லை. சீக்கிரமா கவிதை க்ளாஸுக்கு அழைப்பு வரலைன்னா, வாரத்துக்கு ஒரு கவிதையா எழுதிடலாம்னு இருக்கேன். யோசிச்சு முடிவு பண்ணுங்க.
சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
அரசியல் கிரிக்கெட்-ஸ்டாலின் அபார பந்து வீச்சு!
தமிழக முதல்வர் லெவன் அணிக்கும், தெற்கு ஆஸ்திரேலியா பிரதமர் லெவன் அணிக்கும் இடையே சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல்வர் லெவன் அணி வெற்றி பெற்றது.உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அபாரமாக பந்து வீசி ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்து, சிறந்த பவுலர் விருதையும் தட்டிச் சென்றார்.
பேசாம இவரை இந்திய அணியில சேத்து விட்டா, ஒர் நல்ல பவுலர் கிடைச்ச மாதிரியும் இருக்கும் அழகிரிக்கு முதல்வர் வாய்பு கொடுத்தா மாதிரியும் இருக்கும்? **************************************************************************************
நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் ரெடி-சரத்குமார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம், நாங்கள் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.என அ.இ.ச.ம. கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அப்படியே எந்த வருஷத் தேர்தலுக்குன்னும் சொல்லிட்டீங்கன்னா நல்லா இருக்கும். முக்கியமா டெபாசிட் திரும்ப கிடைக்காதுங்கரதையும் உங்க வேட்பாளர்கள் கிட்ட சொல்லிடீங்களா?
**************************************************************************************
ராஜ்யசபா தேர்தல்: அமைதி காத்தது ஏன்-விஜய்காந்த்
ராஜ்யசபா தேர்தலில் நான் யாருக்காவது ஆதரவு தெரிவித்து இருந்தால், அவர்களது கூட்டணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி அரசியல் செய்திருப்பார்கள் அதனால்தான் அமைதி காத்தேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்
அட போங்கப்பா சும்மா காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. நமக்கு இருக்கர ஒரு ஓட்டை வெச்சுகிட்டு, ரொம்ப ஓவரா படம் காட்டரீங்க.
**************************************************************************************
அதிமுக இளைஞர் பாசறைகளில் சேர ஆளில்லை!
கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்ட அதிமுக இளைஞர் பாசறையில் சேர போதிய எண்ணிக்கையில் இளைஞர்கள், இளைஞிகள் முன் வரவில்லை.
ஏங்க தி.மு.க மாதிரி ஒரு 55-57 வயசுக்கு யாரையாவது பாருங்க, அதை விட்டுட்டு சின்னப் பசங்களை சேத்து என்னத்த அரசியல் பண்ண முடியும்.
**************************************************************************************
உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் - மன்மோகன் சிங்
நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஐ, நிஜமாவா சொல்றீங்க. 60000 கோடி கடன் தள்ளுபடி சும்மாவா செய்திருக்கீங்க. ஆமா, அம்மையார் கிட்ட கேட்டுட்டுதானே சொல்றீங்க.
**************************************************************************************
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
Sunday, February 24, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 19
நடிகர்கள் கட்சி
நடிகர்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். என்று பா.ம.க தலைவர் அதாவது மரம் வெட்டி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நடிகர்களையும், நடிகைகளையும் எந்த காரணத்தை கொண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது ஒரு முடிவு.
நடிகர்கள் தொடங்கியிருக்கும் கட்சியுடனோ அல்லது இனி நடிகர்கள் தொடங்கும் கட்சியுடனோ எந்த காரணத்தை கொண்டும் எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்பது மற்றொரு முடிவு.அத்துடன் நடிகர்களின் கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் வேறு எந்த கட்சியுடனும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்பது இன்னொரு முடிவு.
முதல் முடிவு சரி அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொண்டால் அடுத்த எம்.ஜி.ஆராக வந்துவிட்டால், நம்ம கதை கந்தலாகிவிடும் என்று இவர் பயப்படுவதில் நியாயம் இருக்கிறது. இரண்டாவது முடிவும், மூன்றாவது முடிவும் தான் சூப்பர். இவரை விடமாட்டேன் என்று கெட்டியாக பிடித்திருக்கும், திருமாவளவன் சமீபத்தில் சில படங்களில் நடித்து (அல்லது வெறும வந்து போனாரோ என்னவோ, அதைப் பார்த்த துர்பாக்கியசாலிகள் சொன்னால்தான் தெரியும்) தானும் ஒரு நடிகன் என்று பறையறிவித்தாரே, அது பரவாயில்லையா? அல்லது அவரையும் கழட்டி விட்டு விடுவாரா? நடிகர்களை பட்டாளம் பட்டாளமாய் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும், தி.மு.க, அ.தி.மு.க போன்ற கட்சிகளோடும் இனி கூட்டணி இல்லையா? இதுதான் இந்த புத்தாண்டில் நான் கேட்ட மிக நல்ல அரசியல் செய்தி, அவர் சொன்னது போல் செய்தார் என்றால் (அப்படி செய்யும் பழக்கம் இல்லாதவர் அவர்), பா.ம.க வுக்கு பெரிசாக சங்கு ஊதிவிடலாம், தமிழ் நாடு உருப்பட ஒரு வழி பிறக்கும்.
கழிசடை அரசாங்கம்
ஒரு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு குஜராத் உதாரணம் என்றால், எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு தமிழகம் உதாரணம் என்றால் அது மிகையில்லை.
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் உள்ள அரிசியை பெண்கள் கடத்துகிறார்களாம், அதனால், மனம் வெந்து, நொந்து, உருகி உருகி ஒரு (அபத்தக்) கவிதையை முதல்வர் எழுதியிருக்கிறார். இது என்ன அரசாங்கமா, அல்லது வடிவேலு நடிக்கும், 23-ம் புலிகேசி படமா? ஒரு குற்றம் நடந்திருக்கிறது, அதைச் செய்பவர்கள் யார் என்று தெரிகிறது, அவர்களைப் பிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்து அடுத்து அதே தவறை யாரும் செய்ய அஞ்சும்படி செய்யாமால், ஒரு கவிதை எழுதி விட்டால், அவர் ஒரு தலைவர், முதல்வர், என்னய்யா அரசாங்கம் இது, இது போதாதென்று, பாரதி பெயரையும் கவிதையில் சேர்த்து எழுதிவிட்டார். ஏன் பாரதி சொன்னாரே, 'சீ சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு' அது நினைவில் இல்லையா? ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடத்தில் தீவிபத்தில் குழந்தைகள் இறந்தால் - ஒரு கவிதை, ஒரு திருமணத்தில் தீ விபத்து அதில் பலர் இறந்தால் - ஒரு கவிதை, என்ன நடவடிக்கை என்று யாராவது கேட்டால் - 'வரியா வரியா நீயும் நானும் தீ குளிக்கலாம்' என்று பொது மக்கள் எதிரில் நிருபர்களை அநாகரீகமாக பேசலாம், இப்படி ஒரு முதல்வர், இவர் தலைமையில் ஒரு அரசாங்கம். இந்தக் கழிசடை அரசாங்கம் இனியும் தேவையா? சிந்தியுங்கள்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல்
எனக்கு அமெரிக்காவின் தேர்தல் சற்று ஆச்சர்யம் கலந்த குழப்பம்தான். வீட்டுக்கு வீடு போஸ்டர் ஒட்டவில்லை, வண்ண (வன்னமா? வண்ணமா? என்பதை RTS-ல் யாராவது தீர்மானிக்கட்டும், எனக்குத் தெரிந்ததை நான் எழுதி விட்டேன், இதுக்காக பின்னூட்டம் போட்டு என் தமிழ் அறிவை(?) அசிங்கப் படுத்தாதீங்க) வண்ண சுவர் விளம்பரம் இல்லை, இரவு 12 மணி வரை முச்சந்தியில் மைக் செட் கட்டி அவன் இப்படி, இவன் இப்படி என்று ஏக வசனத்தில் லட்ச்சார்ச்சனை இல்லை. இதெல்லாம் இல்லாமல் என்ன தேர்தல் இது. அதுவும் ஒரே கட்சியிலிருந்து பலர் ஒரே பதவிக்கு போட்டியிடுவார்களாம், அவர்கள் அருகருகே அமர்ந்து அடிச்சுக்காம பேசுவாங்களாம். அடப் பாவிகளா, இது அடுக்குமா, அவ்வளவு நல்லவங்களாடா நீங்கள்ளாம்!
இந்தப் ப்ரைமரி கூத்து நடந்த பிறகு யார் அடுத்த கட்சி வேட்பாளரோடு போட்டியிடலாம் என்று முடிவெடுப்பார்களாம். இந்தியாவில் கட்சித் தலைவர்தான் முதல்வர், அதே மாதிரி கட்சித் தலைவர்தான் பிரதமர். (தற்போதைய பிரதமரைத் தவிர, மேலும், இவர் எங்கே ஆட்சி செய்கிறார், வேறு ஒருவர் செய்யர ஆட்சியில் இவர் வெறும், வாய்தானே அசைக்கிறார்). இங்கு எவர் அதிகம் பிரபலமோ, எவர் அதிகம் கட்சிக்கு நிதி கொண்டுவந்தாரோ அவர் போட்டியிடுவாராம், அட போங்கப்பா, இதேல்லாம் நல்லாவா இருக்கு, கஷ்டப்பட்டு ஒருத்தர் கட்சியை ஆரம்பிப்பாராம், வேர ஒருத்தர் அதிபராகி விடுவாராம். அந்தக் கதையெல்லாம், எங்க ஊர்ல கிடையாது. சொந்தப் பிள்ளைக்கே பதவி கொடுக்காம, புதையல பூதம் காக்கரமாதிரி நாங்க பதவியைப் பிடிச்சிட்டு இருக்கோம், இங்க யாரோ ஒருத்தர் கிட்ட பதவியை கொடுப்பாங்களாம். ஆமாம், இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பலரும் Democratic கட்சியின் ஆதரவாளர்களாமே, அப்படியா? அது ஏன் என்று யாராவது பின்னூட்டமிட முடியுமா? அதோடு Democratic கட்சிக்கு தமிழாக்கம் என்ன என்றும் பின்னூட்டமிட்டால் நல்லது.
ஆத்திகமா, நாத்திகமா
ஆத்திகம் நாத்திகம் ரெண்டையும் பற்றிய குழப்பம் பலருக்கும் இருக்கும். சமீபத்தில் சன் டீவியில் சத்யராஜின் பேட்டியில் இதை விளக்கி தனது நாத்திகப் பற்றை விளக்கினார். அவர் சொல்கிறார், எப்போது ஒருவர் கடவுள் தந்த கண்ணை நம்பாமல் கண்ணுக்கு கண்ணாடி அணிகிறாரோ அப்போதே அவர் நாத்திகவாதியாகி விட்டார். எவர் கடவுளை நம்பாமல் டாக்டரை பார்க்க போகிறாரோ அவரும் நாத்திகவாதிதான் என்கிறார். அடுத்து எவர் காலையில் பல் துலக்குகிறாரோ அவரும், எவர் குளிக்கிறாரோ அவரும், எவர் உடை உடுத்துகிறாரோ அவரும், ஏன் உலகில் யாருமே ஆத்திகவாதிகள் இல்லை, எல்லோருமே நாத்திகவாதிகள்தான் என்று சொல்வார் என்று நினைக்கிறேன். இதற்கு அவர் பெரியார்தான் தனக்கு ஆசான் என்று கூறினார். கடவுள் சிலைகளைக் கும்பிட்டால், நாம் பழமைவாதிகள், மறைந்த மனிதர்களுக்கு வைக்கப் பட்டுள்ள சிலைகளை வணங்கினால், பகுத்தறிவு. கனவில் கடவுள் தோன்றியதாக புராணங்கள் சொன்னால், அது கட்டுக்கதை, கனவில் அண்ணா, பெரியார், இராஜாஜி, காமராஜர், காயிதே மில்லத் போன்றோர் வந்ததாகச் சொல்லி மக்களை முட்டாளாக்கினால், அது பகுத்தறிவு. சத்யராஜிடம் எனக்குப் பிடித்தது, அவருடைய கிண்டல், கேலி, ஆனால், இந்து மதத்தை மற்றும் தாக்கிக் கொண்டிருந்த பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்ளும் அவர், தைரியமாக இப்படி எல்லா மதத்தினரையும் தாக்கி அனைவரும் நாத்திகர்தான் என்று சொன்னது ரொம்ப அதிகமாக இருந்தாலும், அவர் இப்படியே பேசி வருவது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.
வெத்து அன்புமணியின் மற்றுமொரு வேண்டுகோள்
ஷாருக் கான், ஆமீர் கானைப் பார்த்து அவரிடமிருந்து படைப்பாளிகளின் முக்கியத்துவம், மற்றும் அருமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்திருக்கிறார்.
சினிமாவில் நடிகர்கள் புகை பிடித்தால் அது பார்கின்ற சிறுவர்களை பாதித்து அவர்கள் புகை பிடிப்பது அதிகரிக்கிறது, நடிகர்கள் குடிப்பது போன்ற காட்சியினால், சிறுவர்களை அது பாதித்து அவர்களும் குடிக்க ஆரம்பிக்கின்றனர். எனவே, ஷாருக் கானும், அமிதாப் பச்சனும், படங்களில் புகை பிடிக்கிற, மது அருந்துகிற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று மீண்டும் கூறியிருக்கிறார். அனைத்து அதிகாரங்களும் உள்ள அரசாங்கத்தால், சிகரெட், பீடி, புகையிலை எல்லாவற்றையும் தடை செய்ய முடிந்தாலும், செய்ய மாட்டார்கள் அது அவர்கள் பாக்கெட்டை நிரப்புவது தேவை, ஏன் குறைந்த பட்சம் சாராயத்தை தடை செய்யுங்களேன், அது முடியவில்லையே, தெருவுக்கு 2-3 டாஸ்மார்க் கடை வருகிறதே அது பரவாயில்லையா? ஆமாம், சினிமாவில் வரும் வன்முறையால் சிறுவர்கள் பாதிப்படையவில்லையா? காதல் காட்சி என்ற போர்வையில் வரும் கவர்ச்சியும், அநாகரீகங்களும், பரவாயில்லையா? வசனங்களால் வரும் பாதிப்பு பரவாயில்லையா? இதையெல்லாம் தடை செய்து விடலாமா? பிறகு என்ன கருமத்துக்கு படம் எடுப்பது என்று எல்லோரும் வேறு வேலை செய்யப் போயிட்டா, பல கோடி அரசாங்கத்துக்கு வரும் வரிப்பணம் போயிடுமே பரவாயில்லையா?
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
பித்தன்.
piththanp@gmail.com
Saturday, February 16, 2008
ரிச்மண்டில் பொங்கல் விழா
காட்டுக்குள்ளே ஸ்போர்ட்ஸ் டே
நாடகம் ஆரம்பித்து முடியும் தருவாயில், தோன்றியது. இத்தனை குழந்தைகளை ஒருங்கிணைத்து இப்படி ஒரு அருமையான நாடகத்தை தர முதலில் தேவை தைரியம், அடுத்த தேவை பொறுமை. ஒரு சிறிய வேண்டுகோள், நாடகத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும். பாவம், 30-40 நிமிடங்கள் புலி, சிங்கம், யானை, முயல் என வேடமிட்டிருந்த குழந்தைகள் அனைவரும் அதை கலைக்காமல் பொறுமையாக இருந்தது ஆச்சர்யம் ஆனால், நாடகத்தின் நீளம் பார்வையாளர்களை கட்டிப் போட முடியாமல் கொஞ்சம் தடுமாறியது உண்மை. நாடகத்தின் சிறப்பான அம்சம், வசனங்களை முன்கூட்டியே பதிவு செய்து அதை ஒலிபரப்பி அதனூடே நாடகத்தை நடத்தி சென்றது. கடுமையான பயிற்சியில்லாமல் குழந்தைகளால் அதை சாதித்திருக்க முடியாது. இதை சாதித்த குழந்தைகள் அனைவருக்கும், கலக்கிய தாய்மார்களுக்கும், இயக்குனருக்கும், ஒரு பெரிய ஜே.
சார்லோட்ஸ்வில்லில் இருந்து ஒரு புதிய நட்சத்திரம்
சார்லோட்ஸ்வில்லில் இருந்து வந்த சம்யுக்தாவின் நடனமும், பின்னர் அவர் பாடல் பாடியதும் நன்றாக இருந்தது. இவரைப் போல பல திறமைகள் கொண்டவர்கள் ரிச்மண்டின் தமிழ் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைகளை வெளிக் கொணர முயல்வது மிக மகிழ்ச்சியூட்டும் விஷயம்.
நாட்டியாஞ்சலி
உமா செட்டி அவர்களின், அப்ஸராஸ் ஆர்ட்ஸ் குழுவின் மாணவிகள் ஐவரின் பரதநாட்டியம் மிக அருமை. கடும் பயிற்சி செய்திருந்தாலும், அவர்களின் ஒருங்கிணைந்த நடனம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நாகு சொன்னது போல், இந்த குழந்தைகள் இந்த வயதிலேயே இப்படி அருமையாக நடனம் ஆடினால் இன்னும் சில வருடங்கள் கடந்த பிறகு எப்படி ஆடப்போகிறார்கள் என்பதை பார்க்க எமக்கும் ஆவலாகத்தான் இருக்கிறது. .
அசல் பொங்கல்
புஷ்பவனம் குப்புசாமியின் பாடலுக்கு, சின்னஞ் சிறார்களின் அற்புத நடனம். ஒரு உரல், அதில் இடிக்க உலக்கை, பளபளக்கும் முறம், பொங்கி வரும் பொங்கல் பானை என அருமையான பொங்கலை நடத்தி பரசவப் படுத்தினார்கள் குழந்தைகள்.
கும்மாங் குத்து
குத்துன்னா குத்து கும்மாங்குத்து குத்தி விட்டார் ஸ்வேதா. பதவிசாக வெளிப்பார்வைக்கு தெரியும் இவர் நடனமாடத் தொடங்கி விட்டால் பின்னி பெடலெடுத்து விடுகிறார்.
ஹாரிபார்ட்டர் க்விஸ்
மொத்தம் 21 பேர் கலந்து கொண்டு, தேர்வுச் சுற்றிற்கு பிறகு 7 பேர் கலந்து கொண்டு கலக்கின ஒரு நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. கதையை எழுதிய ஜே.கே. ரோவ்ளிங்கே இந்த அளவு அவருடைய கதைகளை நினைவில் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். கலந்து கொண்டு பதிலலித்த சிறுவர், சிறுமியரின் திறமையை மெச்சு வதைத் தவிர வேறு தெரியவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் அரங்கத்தில் இருந்த பல சிறுவர் சிறுமிகளையும் இந்த க்விஸ் கட்டிப் போட்டது மட்டும் நிஜம். என்ன ஒரு குறை என்றால், எனக்கு கேட்ட கேள்வியே புரியவில்லை. புரிந்து கொள்ள முதலில் அந்த புத்தகங்களைப் படியுங்கள் என்கிறார் அரவிந்தன். அட போங்கப்பா, படிக்கரதுன்னா இன்னேரம் படிச்சிருக்க மாட்டோம். நமக்கு புரியரமாதிரி பீ.டி. சாமிக்கு அப்பரம் யாரும் தமிழ்ல மர்மக்கதை எழுதரதா தெரியலை.
பெரியவர்கள் க்விஸ்
15 பேர்களை 5 குழுக்களாகப் பிரித்து வைத்து ஒரு அருமையான சினிமா க்விஸ் நடத்தி விட்டார் ரவி திருவேங்கடத்தான். பரதேசி: அவர் நடுவில் ஒரு சுற்று புத்தகங்களை பற்றி கேட்டது மறக்க வில்லை அதனால், உடனே கண்டித்து பின்னூட்டம் போட்டு விடாதீர்கள. ஆடியோ ரவுண்ட் எப்போதும் கொஞ்சம் காலை நொண்டும், அதுபோல இல்லாமல் சரியாக செய்யப்பட்டது பாராட்டப் பட வேண்டிய ஒன்று.
இனி எனது பொதுவான சில கருத்துக்கள்.
நிகழ்ச்சியை சரியான நேரத்தில் ஆரம்பிப்பதை இந்த முறையும் செய்தது பாரட்டப் பட வேண்டிய ஒன்று. ஹாரி பார்ட்டர் க்விஸ் எத்தனை பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை. அந்தக் கதை படித்தவர்களுக்கு கண்டிப்பாக புரிந்திருக்கும், மற்றவர்களுக்கு? அது வேண்டாம் என்று சொல்லவில்லை, அதை ஒரு சுற்றாக மட்டும் வைத்து விட்டு, இந்த க்விஸ்ஸை பொது அறிவுக்கான ஒன்றாக செய்திருக்கலாம். புத்தகத்தை கரைத்து குடித்து விட்டு கேட்ட கேள்விகளுக்கு பளிச் பளிசென்று பதிலலித்த விதம் அசத்தலாக இருந்தாலும், ஹாரி பார்ட்டர் புத்தகங்கள் மட்டுமே வாழ்க்கையில்லை. இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ரவி ஒரு செய்திக் கிடங்கு, அவரிடம் எந்த விஷங்களைப் பற்றியும் எப்பொழுது வேண்டுமானாலும் பேச முடியும், நகைச்சுவை அவருடைய மிகப் பெரிய சொத்து. அவர் ஏன் இன்னமும் தமிழில் standup comedy செய்யவில்லை என்று தெரியவில்லை. சங்கத்திற்கு உடனடித் தேவை ஒரு தேர்ந்த தொகுப்பாளர். CCI-ல் நடந்த சில நிகழ்ச்சிகளில் பார்த்தது, அவர்களுடைய நிகழ்ச்சிகளை ஓரிருவர் மட்டுமே தொகுத்தளிக்கின்றார்கள், அது போல நிரந்தரமாக ஏன் ஒருவரை தொகுத்தளிக்க ஏற்பாடு செய்யக்கூடாது? செல்வம் சகஜமாக தமிழில பேசினாலும், நாகு ஆங்கிலம் தமிழ் கலந்து கட்டி அடிச்சாலும், மக்களை மகிழ்விக்க ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.
முன்பே சொன்னது போல் சங்கத்து விழாக்களை ஒளிப்பதிவு செய்து குறுந்தகட்டில் பதிவு செய்து வெளியிடுவதை தொடர்ந்து செய்ய சங்கம் ஏற்பாடு செய்யலாம். தந்தையர்கள் குலமே வாழ்த்தும். அடுத்த கிறுக்கலில் சந்திக்கின்றேன். பித்தன்.
piththanp@gmail.com
Saturday, February 02, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 18
நடிகை குஷ்புவிற்கு கண்டனம்
அடுத்து சாமி சிலைகள் இருந்த மேடையில் நடிகை குஷ்பு செருப்பு காலோடு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்று ஒரு கண்டனம். பல மதத்தினரும் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சி மேடைகளில் எந்த அதி புத்திசாலி, சாமி சிலைகளை கொண்டு வந்து வைத்தார் என்று தெரியவில்லை. அவரை கண்டிக்காமல் இன்று குஷ்புவை, நாளை வேறு ஒருவரை என்று திட்டுவது என்ன கலாச்சாரமோ தெரியவில்லை.
திருமாவளவன் - குஷ்பு மோதல்.
திருமாவளவன் மேடைக்கு வரும் சமயம் மேடையிலிருந்த குஷ்பு எழுந்து மரியாதை செய்யவில்லை என்று அதே மேடையில் அவரை தாக்கி திருமாவளவன் பேச, அவரை மதிக்காதது தவறு என்று வேறு சிலரும் அதே மேடையில் குஷ்புவை தாக்கிப் பேசி தங்கள் அசிங்கங்களை பறை சாற்றி இருக்கின்றனர். இதே கும்பல்தான் சில மாதங்களுக்கு முன்பு குஷ்புவை தாக்கி அவர் தமிழகக் கலாச்சாரத்தை அவமதித்து விட்டார் என்று கத்தினார்கள். இன்று அவர் தங்களை மதிக்கவில்லை என்று கூச்சலிடுகிறார்கள்.
ஷாருக்கான், அமிதாபிற்கு 'வெத்து' அன்புமணி கோரிக்கை:
திரைப்பட விமர்சனம்
Monday, January 14, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 17
இது கலாச்சார அடையாளம், பாரம்பரியம், வம்சா வழி வழக்கம், வீரத்தின் அளவு கோல் என்ற உதவாக்கரை சாக்குகளை ஒதுக்கி விட்டு பார்த்தால், வருடா வருடம் நடக்கும் இந்த கூத்தினால் பயன் பெறுவது சாலையோர வியாபாரிகள், மற்றும் மருத்துவர்கள்தான் என நினைக்கிறேன். ஒவ்வோரு வருடமும் 10 பேர் வயிறு கிழிந்தது, 5 பேர் பலி, 100-150 பேர் கூட்ட நெரிசலில் அடி பட்டு கால் உடைந்தது, கை உடைந்தது என்று வரும் செய்தியில் எண்ணிக்கைதான் மாறுகிறதே தவிர வேறு ஒரு புண்ணாக்கும் இல்லை.
ஒரு பாட்ஸ்மேன் அவுட் என்று அம்பயர் அவுட் கொடுத்துவிடுகிறார்.
அந்த பாட்ஸ்மேன் அம்பயரைக் கடந்து போகும் போது, "பந்து என் பேட்டிலும் படவில்லை, காலிலும் படவில்லை, பிறகு எதற்காக அவுட் கொடுத்தீர்கள்" அதற்கு அம்பயர், "நான் அவுட் கொடுக்கவில்லை, இதெல்லாம் அவுட்ன்னு கேக்கராங்களே இது உனக்கே நியாயமா என்று ஆண்டவனைக் கேட்டேன்" என்பார். இதுதான் நிஜத்தில் நடந்தது போல இருக்கு பக்னரின் அம்பயரிங்.
Monday, January 07, 2008
பித்தனின் கிறுக்கல்கள் - 16
என்ன கொஞ்ச நாட்கள் என் தொந்திரவு இல்லாமல் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். எல்லா சந்தோஷங்களும் தாற்காலிகமானது என்பது இப்போது தெரிந்திருக்கும்.
இந்த முறை அரசியல் பற்றி பேசாமல் சமீபத்தில் நான் பார்த்த சில திரைப் படங்களைப் பற்றியும், படித்த சில புத்தகங்களைப் பற்றியும் கிறுக்கலாம் என நினைக்கிறேன்.
நான் சமீபத்தில் பார்த்த 10 படங்கள்
10. பசுபதி மே/பா. ராசக்காபாளையம்
படத்தின் நாடி விவேக்கின் நகைச்சுவை. ஒரு சப் இன்ஸ்பெக்டர் கூட இல்லாத போலீஸ் ஸ்டேஷன் தமிழகத்தில் இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். அதில் ஏட்டாக பணிபுரியும் அவருக்கு பசுபதி (ரஞ்சித்) மூலம் பதவி உயர்வு கிடைத்தும், எப்போதும் ஒரு சிரிப்பு போலீஸாகவே வந்து படத்தை நிற்க வைக்க முயற்சி செய்கிறார். ரஞ்சித்தும் மற்றும் பலரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் படம் இருக்கிறது. கஞ்சா கருப்பு, பிதாமகனில் எப்படி இருந்தாரோ அதைவிட ரெண்டு சைசில், நடிப்பில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறார். இவருக்கு ஒரு பாட்டு வேற போட்டிருக்கிறார்கள். கஷ்டம்டா சாமி. லாஜிக் இல்லாமல் ஒரு அபத்தம் படம் முழுவது விரவியிருக்கிறது. தாயின் இருதய ஆப்ரேஷனுக்கு பணம் தருகிறேன் என்று ஒரு தீவிரவாத இயக்கம் சொன்னதும் அதற்கு ஒப்புக் கொள்கிறார் ரஞ்சித். இவர் போலீஸிடம் சரணடைந்ததும், அவருக்குப் பணத்தை தந்தே தீர வேண்டும் என்று அந்த தீவிரவாத இயக்கம் துரத்தி துரத்தி வருகிறது என்று கதையடிக்கிறார்கள். இந்தப் படத்தை பார்க்க நேரிட்டால், உங்கள் தலைவிதியை நொந்து கொள்வதை விட வேறு வழியில்லை.
9. மலைக்கோட்டை
திருச்சியில் ப்ரியாமணியை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு ஜொள் விட்டு, காதலிக்க முயலும்போது, ப்ரியா தனது காதலன் என்று வில்லனை அறிமுகம் செய்ய அதன் பிறகு ப்ரியாமணிக்கு ஆரம்பிக்கிறது கெட்ட காலம். அதையெல்லாம் முறியடித்து, வில்லனையும் அவன் கூட்டத்தையும் காலி பண்ணி ப்ரியாவின் கையை இவர் பிடிக்கிறாரா அல்லது போலீஸ் இவரை பிடிக்கிறதா என்ற பெரிய விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள் இந்த திராபை படத்தில்.
8. மருதமலை
அர்ஜுன் சட்டம் படித்துவிட்டு போலீஸில் கான்ஸ்டபிளாக சேர்ந்து தனது அடிதடி திறமையால் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று, வில்லன்களைப் பந்தாடி, நடு நடுவே கதாநாயகியுடன் காதல் பாட்டு பாடி, நிறைய தடவை ஸ்லோமோஷனில் நடந்து படத்தை முடித்து வைக்கிறார். படத்தை ரசிக்கும் படி செய்வதே வடிவேலுவின் நகைச்சுவைதான். ஒரு உணவு விடுதியின் முன் ப்ளாஸ்டிக் நாற்காலியில் மாமுலுக்கு பதிலாக ஒரு தட்டு வைத்துக் கொண்டு பசியில் சாப்பாடு போடுவானா என்று அவர் பரிதாபமாக இருக்கும் காட்சியிலும், அவரை அடித்தால் தானும் பெரியாளாக வருவேன் என்று சொல்லும் ஒரு ரவுடியை அர்ஜுன் பந்தாடி விட்டு அவன் மீது கேஸ் போடுவதற்காக வடிவேலுவை அடித்தவுடன், "இதைத் தானே அவனும் சொன்னான் அதுக்கு யூ டர்ன்லாம் போட்டு என்னையும் சேர்த்து அடிச்சிட்டியே" என்று அவர் புலம்புவதும் சூப்பர்.
சூர்யா முதல் முறையாக ரெட்டை வேடத்தில் நடிக்கும் படம். ரெண்டு பாத்திரங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம், ஒருவர் 2 நாள் தாடியுடன் கொஞ்ச நேரம் வருகிறார். மற்றவர் ஒரு முறுக்கிய மீசையுடன் வருகிறார். பிறகு இருவரும் அதே முறுக்கு மீசையுடன் படம் முழுவதும் வருகிறார்கள். ஒரு பாடி கதை - இருவரும் பிறந்த சில நாட்களில் பிரிந்து பிறகு காலத்தின் கட்டாயத்தால் சேர்ந்து பொது எதிரியை பந்தாடி கடைசியில் ஈ என சிரிப்பது.
சென்னையில் இருப்பவர் வாசு. சென்னையில் இருக்கும் வரை குறைவாகப் பேசுகிறார். அண்ணன் வேலு இருக்கும் ஊருக்கு வந்தவுடன், அவரைப் போல பக்கம் பக்கமாக பேசிக் கொல்கிறார். அடிக்கடி நமக்கே சந்தேகம் வந்து விடுகிறது இது விஜயகாந்த் படமா அல்லது சூர்யாவின் படமா என்று. இவர் இப்படி இன்னும் ரெண்டு படம் பண்ணினால் போதும், சன் டீவியில் மத்தியான சீரியலில் நடிக்க வந்து விடலாம்.
தனுஷ் நிஜமாகவே நடித்து வெளிவந்திருக்கும் படம். அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறார். படத்தில் வெட்டு குத்து சர்வ சாதாரணமாக இருக்கிறது. கதை - ஆசைப் பட்டு தனுஷ் வாங்கும் ஒரு பைக் காணாமல் போக அதனால் அவர் படும் அவஸ்தைகளும், அதனோடு வரும் சண்டைகள், இடையிடையே தனுஷுக்கும் ரம்யாவுக்கும் (குத்து ரம்யா என்று யாராவது சொன்னால் அவர்களை நிஜமாகவே குத்தப் போகிறேன் என்று அவர் ஒரு பேட்டியில் சொன்னதால், நீங்கள் யாரும் அவரை குத்து ரம்யா, குத்து ரம்யா என்று சொல்லி குத்து வாங்கிக் கொள்ளாதீர்கள்) நடக்கும் காதல் (இந்தக் கண்ராவியைக் காதல் என்று சொன்னால், மன்மதனே ஐயோ ஐயோன்னு அடிச்சுப்பார்), பாடல்களில் S.P.B. மீண்டும் ஒரு முறை "எங்கேயும் எப்போதும் சங்கீதம், சந்தோஷம்" பாடலை ரீ.மிக்ஸில் பாடி பொளந்து கட்டி விட்டார். மற்றப் பாடல்களில் தனுஷ் கலர் கலராக வந்து கலக்க, ரம்யா (அதாங்க குத்து ரம்யா), பாவம் தயாரிப்பாளருக்கு ஏன் செலவு என்று கால் அங்குலத்தில் சண்ணமாக துணி என்ற ஒன்றை உடுத்தியும் உடுத்தாமலும் வந்து ஆடுகிறார். இப்படி இவை எல்லாம் கலந்து கட்டிய மசாலா சாதம் இந்தப் படம்.
ஒரு தடவை (தேவைன்னா) பார்த்து விட்டு ஜோரா கைதட்டி விட்டு போகவேண்டிய படம்.
முதலில் இந்தப் படம் குழந்தைகளுக்கான படமில்லை. அவர்களை வைத்துக்கொண்டு இதைப் பார்க்க முயலவேண்டாம்.
கதை: திருமணத்திற்குப் பிறகு தனது கணவருக்கு முன்பு இருந்த குடிப்பழக்கத்தினால் தங்களுக்கு குழந்தை பிறக்காது என்பது தெரிந்ததும், குழந்தைகள் மீது இருக்கும் ஆசையால் விவாகரத்து செய்து விட்டு தனியாக இருக்கும் பத்மப்ரியாவின் மனதில் நுழைந்து சந்தோஷமாக வாழத்துவங்குகிறார் பிருத்விராஜ். இதைத் தெரிந்து கொண்டு அவர்கள் வாழ்கையில் குறுக்கிட்டு அவர்களுக்கு வில்லனாகிறார் முதல் கணவர் நித்தின் சத்யா. கரணம் தப்பினால் மரணம் என்ற கதைக் களத்தில் தனது திறமை மூலம் படத்தை நிறுத்துபவர்கள் இவர்கள் மட்டும் இல்லை, இயக்குனர் வசந்தும். இப்படிப் பட்ட கதைகளை படமாக எடுக்க வேண்டும் என்று எந்த மகானுபாவன் சொன்னானோ அவனை செமத்தியாக கவனிக்க வேண்டும். ஒரு முறை பார்க்கலாம்.
4. எவனோ ஒருவன்
மாதவன் நடித்து, தயாரித்து ஏன் வசனமும் எழுதி வெளியிட்டுள்ள படம் இது. இதன் கதை/இயக்கம் நிஷிகாந்த் காமத் என்று சொல்கிறார்கள்.
கதை - ஒரு வங்கியில் பணிபுரியும் சமுதாய அக்ரமங்களால் அதிகம் காயம் படும் ஒரு சராசரி நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் வாசுதேவன் (மாதவன்). அவர், தன் மன உளைச்சளினால் விளிம்பைத்தாண்டி பல செயல்களை செய்ய ஆரம்பிக்க அதனால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லி அதன் மூலம் சமுதாயத்தின் ஓட்டைகளை விளக்கியிருக்கிறார்கள். இது Falling Down என்ற Hollywood படத்தின் காப்பி என்றால், என் நண்பர் அதை மறுக்கிறார். அவர் சொல்லும் காரணங்கள் - ஆங்கிலப் படத்தில் கதாநாயகன் மைக்கல் டக்ளஸ், மாதவனைப் போல வங்கியில் பணி புரியவில்லை, தினமும் மதியம் தயிர் சாதம் சாப்பிடவில்லை, மின்ரயிலில் பயணம் செய்யவில்லை, மனைவியுடன் செர்ந்து வாழவில்லை என சரளமாக அடுக்க ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் எனது தோல்வியை நண்பரிடம் ஒப்புக் கொண்டு விட்டேன். மாதவன் நன்கு நடித்திருக்கிறார். கடைசி காட்சியில் அவரை கைது செய்ய வரும் போலீஸிடம் சாவகாசமாக, ரெயிலில் ஜன்னலோர சீட் கிடைப்பது ரொம்ப கஷ்டம் என்று சொல்லிவிட்டு வாஞ்சையுடன் ஜன்னல் பக்க சீட்டை தடவியபடி இருப்பதும், அந்த ஒரு காட்சியில் இந்தியாவின் நடுத்தர வர்க மக்களின் அன்றாட அபூர்வங்களை கோடிட்டு கட்டியிருப்பதும் மிக மிக அருமை. கொஞ்சம் கமலின் சாயல் அவருடைய நடிப்பில் தெரிகிறது. இந்தப் படத்தை தயாரிக்க இவருக்கு இருந்த துணிச்சலைக் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அதற்காக ஒரு முறை பார்க்கலாம்.
புற்று நோய்க்கு மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து சில ஆயிரம் நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கின்றனர், அதன் பின் விளைவில் அமெரிக்கா மட்டும் இல்லாமல், உலகமே பாதிக்கப்பட்டு பல கோடி மக்கள் உயிர் இழ்ந்து, சில கோடி மக்கள் இரவில் மட்டும் வெளிவந்து ரத்தத்திற்கும், உணவிற்கும் அலையும் பிசாசு கூட்டமாய் அலைகின்றனர். நியூயார்க் நகரில் தன் நாயுடன் தன்னந்தனியனாக இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தினம் தினம் சாவுடன் போரிடும் கதாபாத்திரத்தில் வில் ஸ்மித் நடித்திருக்கிறார். கதையில் இருக்கும் பல ஓட்டைகளை விட்டு விட்டு படம் பார்த்தால் ரசிக்கலாம். நியூயார்க் நகரத்தில் மனிதர்களே இல்லாமல் க்ராஃபிக்ஸ் மூலம் எடுத்திருந்தாலும், மான்ஹாட்டன் நகரத்தில் கூட்டமாக மான்கள் ஒடுவதையும், நடுவில் சிங்கம் குடும்பத்தோடு வந்து வேட்டையாடுவதையும் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
கெவின் காஸ்னர், டெமி மூர், வில்லியம் ஹர்ட் நடித்து சமீபத்தில் குறுந்தகட்டில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்து அதிர்ந்து விட்டேன். கதை: கொலை செய்வதை ஒரு பழக்கமாக வைத்திருக்கும் கெவின் காஸ்னர் (Mr. Brooks) சந்தர்ப்ப வசத்தால் ஒரு அமெச்சூர் புகைப்படக் கலைஞரிடம் மாட்டிக் கொள்ள, ஆரம்பிக்கிறது சுவாரஸ்யமான கதை. இணைய தளத்தில் இந்தப் படத்தில் எங்கெல்லாம் தவறுகள் இருக்கிறது என்று விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள் அதையும் மீறி, இந்தப்படத்தில் கெவின் காஸ்னரின் நடிப்பு படத்தை மெருகூட்டியிருக்கிறது. கதை சொன்ன விதம், பல விஷயங்களை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்ட விதம் என பல விஷயங்களைச் சொல்லலாம். கண்டிப்பாக 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுடன் பார்க்கக்கூடாத படம்.
வீட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு படம். கதை : பள்ளியில் படிப்பில் பின் தங்கியிருக்கும் ஒரு 8 வயது மாணவனை அவனுடைய பெற்றோர், தொலைவில் இருக்கும் தங்கும் வசதியுடன் கூடிய பள்ளிக்கூடத்தில் சேர்த்து விட்டுவிட படிப்பின் அவஸ்தையுடன், பெற்றோரைப் பிரிந்து இருக்கும் அவஸ்தையுடன் இருக்கும் அந்த சிறுவனின் வாழ்கையில் தென்றலாக வீசி அவனுடைய திறமைகளை அவனுக்கே அடையாளம் காட்டும் அருமையான பாத்திரத்தில் நடித்து, இந்தப் படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இந்தப் படத்தை அனுபவிக்க இந்தி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை, வழக்கமான இந்திப் படங்களில் வரும் எந்தக் கெட்ட வார்த்தையும் இல்லை, சண்டை இல்லை, ரத்தம் இல்லை, துப்பாக்கி சப்தம் இல்லை, வீராவேசமான வசனங்கள் இல்லை, அசிங்கமான நடனங்கள் இல்லை, முக்கியமாக கதாநாயகி என்று யாரும் இல்லை, வெறும் யதார்த்தம், யதார்த்தம் என்று மிக மிக அற்புதமாக கதை சொல்லி மயக்கியிருக்கிறார் ஆமீர் கான். இப்படிப் பட்ட கதைகளை இங்கு ஹாலிவுட்டில் படமாக்கிப் பார்த்திருக்கிறேன், ஒரு இந்தியப் படம் இப்படி எடுக்கப் பட்டிருப்பதை முதல் முறை பார்ப்பதால் ஆச்சர்யம் தாங்கவில்லை. சிறுவனாக நடிக்கும் தர்ஷீல் சஃப்பாரி நடிப்பில் பிய்த்து உதறுகிறான், நடிக்கிறானா இல்லை அவனது இயல்பே அப்படியா என்று யோசிக்கும் வகையில் இருக்கிறது அவனது நடிப்பு. ஆமீர் கான் மிகத் தேர்ந்த நடிகர், தான் ஒரு மிக தேர்ந்த இயக்குனர் என்பதை இந்தப் படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடிகை - பாலகுமாரன்.
கதை - இராஜராஜச் சோழனின் தந்தை உத்தமச் சோழரின் காலத்தில் சேர நாட்டில் இருந்த ஒரு போர் பயிற்சி பள்ளியைப் பற்றிய ஒரு கதை. இப்படிப் பட்ட பள்ளிகளை கடிகை என்று அழைக்கிறார்கள். இவர்கள் சேர நாட்டிலிருந்து பிரிந்து வந்து ஒரு தனிக் கடிகை நிறுவி வாழ்ந்து வரும் போது, தாய்க் கடிகையின் தலைவரால் துன்புறுத்தப் பட்டு, பாண்டியனிடம் அடைக்கலம் பெற்று, அவனையும் அவனது படையையும் தயார் செய்து, இராஜராஜச் சோழனின் தமையன் ஆதித்தக் கரிகாலனிடம் தோற்று, பாண்டியனையும் பலி கொடுத்து, அதன் பின் இவர்கள் என்ன ஆனார்கள் என்று விளக்கமாக சொல்லியிருப்பது இந்தக் கதை. கதை கரு மிக மிக அருமையான ஒன்று அதை இன்னமும் மெறுகேற்றியிருக்க வேண்டும்.
பாலகுமாரன் - இவருடைய கதை சொல்லும் பாணி சமூக நாவலாக இருந்தாலும் சரி, சரித்திர நாவலாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாகவே இருக்கிறது. இது இவருடைய ஒரு குறை. தான் படித்த, கேட்ட, அறிந்த பல விஷயங்களை அனைவருக்கும் சொல்லியே தீரவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து இவர் முதலில் வெளியே வர வேண்டும். உங்களில் பலர் கல்கியின் பல சரித்திர நாவல்களை படித்திருப்பீர்கள். அதில் எதிலும் கல்கி என்ற கதாசிரியரை பார்த்திருக்க முடியாது. அதற்கு அவர் கதையை முடிந்தவரை மிகைப் படுத்தாமல் எடுத்தாண்டது என்பது என் எண்ணம்.
பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்....
Wednesday, September 05, 2007
பித்தனின் கிறுக்கல்கள் - 15
இவை எதையும் நான் மறுக்கவில்லை. இவைகள் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி என்று என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. உலகின் பணக்கார நாடு என்று சொல்லிக்கொள்ளும் இங்கும் வால்மார்ட் அருகிலும், ரிச்மண்ட் நகரத்துக்குள் சென்றால் சிக்னலுக்கு சிக்னல் வீடில்லாத ஏழைகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்கள் குறிப்புகளில் 1, 3, 5 விவாதத்திற்குரியது.
1. 100% படிப்பறிவு என்பது ஒரு கேள்விக்குறிதான். இது பற்றி எனது மலையாள நண்பர்களோடு ஒருமுறை விவாதித்த போது அவர்கள் சொன்னது, 100% படிப்பறிவு என்பது அந்த ஊரில் இருப்பவர்கள் கையெழுத்து போடவும், எழுத்துக் கூட்டி அவர்களது பெயரை எழுதவும் தெரிந்திருந்தால் அவர்கள் படித்தவர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுவார்கள் என்று.
எனவே இது எனக்கு ஒரு பொருட்டில்லை.
5. ஒரு பெண், அதிபராக வருவது அவ்வளவு முக்கியமா? அது மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றமடைந்த நாடாக்கி விடுமா? இது என்ன லாஜிக் என்று எனக்குப் புரியவில்லை.
உங்கள் குறிப்புகள் 2, 4 மற்றும் 6 சொல்வது, அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவத் துறை சாதனைகள். இவைகளை நான் மறுக்கவில்லை. இதனால், நான் சொன்ன எதுவும் மாறவில்லையே என்பதுதான் எனது ஆதங்கம்.
ஒரு சராசரி மனிதனின் தேவை, நல்ல தண்ணீர், இருக்க ஒரு இடம், சகாய விலையில் உணவுப் பொருள்கள், நல்ல மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான கல்வி. இவைகளை தந்தாலே போதுமே, இந்தியா உலகில் தன்னிறைவு பெற்று விடுமே, அதைத் தர எந்த அரசியல்வாதியும் தயாரில்லை, அதைத் தா என்று கேட்க எந்த பொது ஜனத்திற்கும் துணிவில்லை.
கடைசியாக, பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு விவாதம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. வாய்ப்புக்கு நன்றி நாகு.
சற்றுமுன் பார்த்த செய்தி. தமிழக காவல் துறையில் என்கவுண்டர் செய்யும் காவல்துறையினருக்கு பதவி உயர்வு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு மனித உரிமை கமிஷன் பரிந்துரைகளின் படி என்று தெரிய வந்துள்ளது.
நான் முன்பே சொன்னது போல், ஒரு மனிதனின் உயிரை எடுக்கவும் தயங்காத பயங்கர குற்றவாளிகளை காவல் துறை பிடித்தாலும் அவர்கள் தங்கள் அரசியல் செல்வாக்கால் வெளியே வந்து மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தொல்லை தருவது நின்றபாடில்லை. ஆனால் அவர்களுக்கு பரிந்து பேச அவர்கள் தரப்பில் ஒரு வக்கீல் இருக்கிறாரோ இல்லையோ, கண்டிப்பாக மனித உரிமை கமிஷன் இருக்கிறது.
இதைத்தான் பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று மூதோர் சொல்லி வைத்தார்கள்.
திரைப்பட விமர்சனம்
ஆங்கிலத் திரைப்படம் - Bridge to Terabithia
சமீபத்தில் இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்த்தேன். சிறுவயதில் நாம் அனைவரும் விளையாடும் விளையாட்டை சற்று மிகைப் படுத்தி படமாக்கி விட்டனர்.
எனது சிறுவயதில் எங்கள் வீட்டிலிருக்கும் கொய்யா மரம்தான் எங்களது ராஜ்ஜியம், அதில் அனைவருக்கும் சொந்தமான கிளைகள் உண்டு, மாற்றி உட்கார்ந்து விட்டால் அவ்வளவுதான் சண்டை ஊரை கிழித்து விடும். எல்லோரும் ராஜா, ராணி, மந்திரி என பல வேடங்கள் போட்டுக் கொண்டு வாயில் வந்த வசனத்தை பேசிக் கொண்டு பசிக்கும் வரை விளையாடுவோம்.
மார்கன் ப்ரீமேன், ஜான் குசாக்கின் நடிப்பில் வந்திருக்கும் இந்தப் படம், நல்ல பொழுது போக்குப் படம். மார்கன் ப்ரீமேன் நடிப்பு எனக்கு ரொம்ப பிடித்த ஒன்று. அவருடைய வசன உச்சரிப்பில் ஒரு கிண்டல் எப்போதும் துளிர்த்து விழுவது அருமை. அது அவருடைய பாணி, அது இந்தப் படத்தில் பளிச்சென பதிந்திருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர்களுக்கு யாராவது சொல்ல வேண்டும், மனைவியில்லாமல், மகனையோ அல்லது மகளையோ வளர்க்கும் கணவர்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களை தடை செய்யச் சொல்லி, தாங்க முடியாத அந்த கதை இந்தப் படத்திலும் இருக்கிறது அது ஜான் குசாக் என்று சொல்லி ஜல்லியடிக்கிறார்கள். படத்தில் விருவிருப்பிற்கு குறையில்லை. ஒரு முறை பார்க்கலாம், ஆனால் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளோடு இதைப் பார்க்க வேண்டாம்.
Thursday, August 30, 2007
பித்தனின் கிறுக்கல்கள் - 14
60 வருடங்கள் ஓடி விட்டது இந்தியா சுதந்திரம் அடைந்து. இந்த நாளை பலர் குறிப்பிட்டு எனக்கு மின்னஞ்சல் அனுப்பி வாழ்த்தியிருந்தார்கள். இப்படி வாழ்த்துக்கள் வருவது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும் இதைக் கொண்டாடும் அளவிற்கு சாதித்து இருக்கிறோமா என்ற கேள்வி என் மனதை பல வருடங்களாக குடைந்து கொண்டே இருந்தது அதை இன்று வெளிப்படுத்தி விடலாம் என்று இருக்கிறேன். உங்களுக்காவது விடை தெரிந்தால் சொல்லுங்கள்.
சுதந்திரம் கிடைத்து 60 வருடங்களில்
- குடி தண்ணீருக்கு காத்திருக்கும் வரிசை குறையவில்லை
- நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை குறையவில்லை.
- அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்கள் குறையவில்லை
- அரசியல் குற்றங்கள் குறையவில்லை
- ஜாதிக் கலவரங்கள் குறையவில்லை
- அடுத்த மாநிலத்திடம் குடிதண்ணீருக்கு கையேந்தும் நிலை மாறவில்லை
- தமிழ்நாட்டில் தைரியமாக தேசிய மொழி பயில முடியவில்லை.
- மற்ற மாநிலத்தில் தமிழர்கள் கூலி வேலையும், அதுவும் கிடைக்காதவர்கள் சிக்னலுக்கு சிக்னல் பிச்சையெடுக்கும் நிலையும் மாறவில்லை.
- போலிச் சாமியார்களை நம்பி சொத்தை இழக்கும் படித்த முட்டாள்களின் எண்ணிக்கை குறையவில்லை
- தேர்தலுக்குத் தேர்தல் தரங்கெட்டவர்களை தேர்ந்தெடுத்து விட்டு அதைப் பற்றி விரக்தியாக பேசும் பொது மக்களின் மன நிலை மாறவில்லை.
- குற்றப் பின்னனி இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது கடினம் என்ற நிலை 60 வருடங்களில் மாறி, இன்று இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியையும் பெறும் நிலை வந்திருக்கிறது.
- அண்டை நாடுகள் இந்தியாவில் தீவிரவாதிகளை அனுப்பி வைக்கும் நிலையைத் தாராளமயமாக்கிய கேடுகெட்ட அரசியல்வாதிகளை தண்டிக்கும் வழி இன்னும் தெரியவில்லை.
- கடவுள் நம்பிக்கை பற்றி கேவலமாக பேசிவிட்டு தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போட்டு வழிபாடு செய்யும் பகுத்தறிவுவாதிகளின் கூட்டங்கள் குறையவில்லை.
- பகுத்தறிவு என்பது இந்து மத எதிர்ப்பு, ப்ராமண துவேஷம் என்பதில் இருந்து மாறுவதாக தெரியவில்லை.
- அண்டை மாநிலத்துடனான ப்ரச்சனைகளை பேசிதீர்த்துக் கொள்ளாமல் நினைத்த போதெல்லாம் கடையடைப்பு, இரயில் நிறுத்தப் போராட்டம் செய்து பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் அராஜகம் அழியவில்லை.
ஆனால் இவையெல்லாவற்றையும் மீறி இன்னமும் நாம் சுதந்திரம் அடைந்த தினத்தை நினைத்து ஆனந்தப்படும் நம் மக்களின் இந்த செயல் மட்டுமே என்னை சந்தோஷப் படுத்துகிறது.
புத்தகம்:
ஆங்கிலப் புத்தகம் Dark Justice by Jack Higgins சமீபத்தில் படித்தேன். இவருடைய முந்தய புத்தகம் The Eagle Has Landed பலப் பல வருடங்களுக்கு முன்பு படித்தது. அதில் ஈர்க்கப்பட்டு, இவர் இப்பொழுது எப்படி எழுதுகிறார் என்பது தெரியாமல் இந்தப் புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டேன். கதை அருமையான கருவுடன் இருந்தது. அமெரிக்க அதிபரை கொலை செய்ய ஒரு முயற்சி நடக்கிறது அதன் மூலம் என்ன என்பதை துப்பறிவதுதான் கதை.
ஒரு 15-18 வருடங்களுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு ஒரு நாவல் என்று பாக்கெட் நாவல் பதிப்புகள் வந்தது. அதை வெளியிட்ட அசோகன் என்ற அந்நாள் இளைஞர் ஒருவர் அதன் மூலம் மிகப் ப்ரபலமானார், அதில் எழுதியே அதிகம் முக்கியத்துவம் பெற்ற ஒருவர் ராஜேஷ் குமார் என்ற எழுத்தாளர். அவர் ஒரு பேட்டியில் நான் ஒரு மணி நேரம் யோசித்தால் ஒரு பாக்கெட் நாவல் எழுதிவிடுவேன் என்று பெருமையாக சொல்லியிருந்தார். இது எனக்கு இந்த புத்தகத்தைப் படித்ததும் நினைவுக்கு வந்தது. Jack Higgings-ன் நிலைக்கு இந்தப் புத்தகத்தை எழுத, ஒரு அரை மணி நேரம்தான் யோசித்திருப்பார் என்று நினைக்கிறேன். என்ன நிர்பந்தமோ, இப்படி ஒரு த்ராபையாக எழுத வேண்டும் என்று என்பது தெரியவில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு பதில் சன் டிவியில் வரும் ஆனந்தம் வில்லி அபிராமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்றும், கோலங்கள் தேவயாணி என்ன ஆகப் போகிறார் என்றும், அரசியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் மண்டை உடைத்து கொண்டால் தப்பே இல்லை.
உள்ளூர் விவரம்:
நமது தமிழ் சங்க வலைதளத்தில் சமீபகாலமாக அதிகம் எழுதப் படவில்லை என்று நாகு குறிப்பிட்டிருந்தார். கோடை விடுமுறையை அனுபவிப்பதை விட கோடையில் குழந்தைகளை பேணிப் பாதுகாப்பது மிகப் பெரிய வேலையாக இருப்பதும் ஒரு காரணம். எனது தனிக்கட்சி பற்றி என்னிடம் நேரிடையாகவே சில முறை கேட்டிருந்தார், எனது வலைதளம் ஒரு சைளகரியத்தை உத்தேசித்தே துவங்கப் பட்டது. என்னால் அரை மணிநேரம் அல்லது ஒரு மணி நேரம் யோசித்து விட்டு ஒரு பதிவை எழுத முடிவதில்லை. (ஹூம் அவ்வளவு திறமை இருந்தால் Jack Higgins போல பாக்கேட் நாவலே எழுதுவேனே.) என்ன சொல்ல வந்தேன்? ஒரு பதிவை எழுத ஆரம்பித்தால் முடிக்க ஏறக்குறைய 5-10 நாட்கள் ஆகிவிடுகிறது, RTS ப்ளாகில் நிறுத்தி நிறுத்தி எழுதி முடித்து வெளியிடும் போது, அது நாலாவது அல்லது ஐந்தாவது பக்கத்தில் வெளியாகிறது, பதிவு வந்திருப்பது வழக்கம் போல நாகுவையும் என்னையும் தவிர யாருக்கும் தெரிவதில்லை. மேலும் தப்பித் தவறி யாராவது எனது பதிவுகளை படித்து விட்டு எனது முந்தைய பதிவுகளை படித்து விட்டு பிறகு இவனைத் திட்டலாம் என நினைத்தால் அதை RTS ப்ளாகில் தேட மெனக்கெட வேண்டாம், சட்டென எனது ப்ளாக்கில் கிடைத்து விடும்.
-- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.